அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

நெய்வேலி: வீராவேசம், டெல்லி அடிமை... அன்புமணியிடம் கேள்விகளை அடுக்கும் எம்ஆர்கே பன்னீர்செல்வம்!

நெய்வேலி விவகாரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி சென்னையில் வீராவேசம் காட்டுகிறார்; டெல்லியில் ஒன்றிய அரசுக்கு கைகட்டி அடிமையாக இருக்கிறார் என்று விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார்.

இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர், நெய்வேலி பிரச்னையில் திமுக செய்த பணிகளைப் பட்டியல் இட்டுள்ளார்.

உழவர்களும் இளைஞர்களும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அன்புமணி போராட்டம் என்ற பெயரில் போலீசார் மீது கல்வீசி, பொதுச் சொத்துகளை வழக்கம் போல் சேதப்படுத்தி, அமைதியாக இருக்கும் உழவர்களை - மக்களைத் தூண்டிவிட்டு இந்த அரசுக்கு எதிராக ஒரு சதித் திட்டத்தை உருவாக்கி வருகிறார் என்றும், வட மாவட்டங்களில் உள்ள உழவர்கள், மக்களுக்குக் கிடைக்கும் மின்சாரத்தைத் துண்டித்து, எப்படியாவது இந்த மாவட்டங்களை, மாவட்டங்களின் முன்னேற்றத்தை இருட்டில் தள்ளி விட முடியாதா என்று துடிக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

”ஓரிடத்தில், “மண்ணையும் மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம்” எனவும், இன்னொரு இடத்தில், “நாங்கள் டெல்லி அளவில் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் இல்லை” என்றும் நாடகமாடுவது என்பதைக் கைவந்த கலையாக செய்து வருகிறார் அன்புமணி. சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா?

இங்கே “மண்ணையும், மக்களையும் காப்போம்” என்றவர் டெல்லியில் முகத்திற்கு நேராக, "என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்" என்று ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர், அதுவும் அன்புமணி ராமதாசே விரும்பி இடம்பெற்றுள்ள “டெல்லி தேசிய ஜனநாயகக் கூட்டணியின்” அமைச்சர் அறிவித்த பிறகும், ஏன் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் தெரிவித்த பிறகும், பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்?

தைரியம் இருந்திருந்தால், அவர் சென்னையில் பேசுவதும் - போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டாமா? அதிகபட்சமாக “இனி நாங்கள் டெல்லி அளவில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இல்லை” என்று அறிவித்துவிட்டு விமானம் ஏறி சென்னைக்கு வந்திருக்க வேண்டாமா?” என்று அமைச்சர் பன்னீர்செல்வம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவர், ”அப்படியெல்லாம் அன்புமணி அவசரப்படமாட்டார் என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அப்படி அவசரப்பட்டால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை வந்து தன் வீட்டுக் கதவைத் தட்டும் என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் “கைவிரித்தும்” இவரால் அது பற்றி கைதூக்கி கேள்வி எழுப்ப முடியாமல் அமைதியாகி விட்டார்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”வட மாவட்ட மக்களின் நலனுக்கும், உழவர்களின் உரிமைகளுக்காகவும் முதலமைச்சர் ஒன்றிய அரசுடன் போராடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்; இன்னும் இந்த மண்ணையும், மக்களையும் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார். இதை நம்பியிருக்கும் உழவர்களை, வட மாவட்ட மக்களை - உங்களின் இது போன்ற “கபட நாடகங்கள்” மூலம் திசைதிருப்பி விட முடியாது.” என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com