முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

’இரக்கமின்றிப் பேசும் ஆளுநரைக் கண்டித்து’ தேநீர் விருந்து புறக்கணிப்பு- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டு மாணவர்களை, அவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும்படியாகப் பேசிவரும் ஆளுநருக்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில் அவர் அளிக்கும் சுதந்திரநாள் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாளை சுதந்திர நாளை முன்னிட்டு, தியாகிகளைப் போற்றிப் பாராட்டியும் வணக்கம் செலுத்தியும் உள்ள முதலமைச்சர், ”போராடிப் பெற்ற விடுதலையை எந்நாளும் பேச்சு சூழலிலும் போற்றிப் பாதுகாப்பதே சுதந்திரப் போராட்டத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“விடுதலை பெற்ற இந்தியா அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் இந்தியாவாக தான் இருக்கும் என்று தமிழ்க்கவி பாரதி கனவு கண்டார். நாட்டின் 77ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில் சில நாட்களுக்கு முன் சென்னையில் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் அவரின் தந்தை செல்வ சேகர் இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது, நம் முன்னோர் இன்னுயிர் ஈந்து நமக்கு அளித்த விடுதலை எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா என்ற கேள்வியை எழுப்புகிறது.” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லாத பல மாணவர் செல்வங்களின் உயிர்களை நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம்; இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகள் நம் மனசாட்சியை உலுக்கி வருகின்றன என உணர்ச்சிமயமாகக் கூறியுள்ள ஸ்டாலின்,

”ஆனால் ஏழை எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், வர்களின் பெற்றோரின் கனவுகளை, திர்கால நல்வாய்ப்புகளை இழந்துவரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார். நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன்; அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று பொதுவெளியில் ஆளுநர் ரவி பேசியிருப்பது, தமிழ்நாட்டு மக்களையும் மாணவர்களையும் இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.” என்று வேதனையும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்துவரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

”தமிழ் மக்களைப் பற்றி அக்கறை இருப்பவர்கள், தமிழர்கள் உயிர் இழப்பதைக் கண்டு கலங்குவார்கள். ஆனால் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை என்பதைப் போல உள்ளது. இந்த நிலை மாறவே நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டம் இயற்றி தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும்ர்னக் கோரி இன்றும் கடிதம் அனுப்புகிறேன்.

ஆளுநர் அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், திமுக, திருவள்ளுவர், வள்ளலார், சனாதானம் பற்றி பேசிவருவதை நாங்கள் மதிக்கவில்லை. அது ஒரு கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம்; ஆரிய புலம்பலாக ஒதுக்கி தள்ளுகிறோம்; ஆனால் ஏழை எளிய விளிம்புநிலை அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை அப்படித்தான் சிதைப்பேன் என நியமனப் பதவியில் இருக்கும் ஒரு ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம்.

பல்கலைக்கழகங்களைச் சிதைத்தும் உயர்கல்வித் துறையைக் குழப்பியும் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தராமல் அதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை பெற்றோரை அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும்படியாக பேசிவரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று ஆளுநர் மாளிகையில் அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறோம்.” என்று முதலமைச்சர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com