அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

காவிரி வரலாறு தெரியாத ஒன்றிய அமைச்சர் - துரைமுருகன் தாக்கு!

காவிரியின் வரலாறு தெரியாமல் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்திருப்பதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

கடந்த இரண்டு மாத காலமாக கர்நாடகம் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவித்த அளவுப்படி தண்ணீரை வழங்கவில்லை. இது குறித்து பிரதமர் மோடிக்கும், ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஒன்றிய அமைச்சரை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு முறை நேரில் சந்தித்தும் நிலைமைகளை விளக்கியுள்ளார்.  

முதலமைச்சரின் கடிதத்திற்கு பிரதமர் அலுவலகமோ ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரோ பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் திமுக ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் ஏன் பிரச்சினையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது" என்று கூறியது, பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு பதிலளிக்கும்வகையில், அமைச்சர் துரைமுருகன் இன்று விளக்கம் அளித்துள்ளார். 

அதில், ”காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 1967 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்பிரச்னை குறித்து பேசி பேசி எந்த முடிவிற்கும் வர முடியாத நிலையில் தான் ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு போய், உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிவிட்ட பிறகு இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண முடிந்திருந்தால் நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. 

தண்ணீரைத் திறந்துவிடக் கூறும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்குதான் உண்டு. அந்த வாரியத்தின் கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்துகொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு பல முறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனாலும், இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரையில் முழுமையாகச் செயல்படவில்லை.” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  

மேலும், “ நீர் சராசரியாகக் கிடைக்கும் வருடங்களில் கர்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வதை Pro Rata Basis என்று குறிப்பிடுவார்கள். அந்தப் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை செய்யவில்லை. இந்த வாரியம் மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. எனவேதான் அந்தப் பணியை வாரியம் செய்ய வேண்டும் என்று  முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

'தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு' என்று கூறுவதைப்போல, தோழமையாக இருந்தாலும் தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலைநாட்டுவதில் யாரும் உறுதியாக இருப்பார்கள். அந்த நிலைப்பாடுதான் தமிழகத்தின் நிலைப்பாடு. இந்த விவரமெல்லாம் தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் முதலமைச்சருக்கு அறிவுரை சொல்வது போல ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கை.” என்றும், 

“ இன்னொரு வேடிக்கை மட்டுமல்ல வேதனையும் என்னவென்றால், நீர்வளத்துறை அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் ஓர் அறிக்கையில், கர்நாடக மாநில முதல்வரோடும், நீர்வளத்துறை அமைச்சரோடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி தண்ணீரைப் பெறவேண்டும் என்று தெரிவித்திருப்பதுதான். 

ஏதாவது பிரச்னை என்றால் உச்சநீதிமன்றத்தைத்தான் நாடே வேண்டுமே தவிர, மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறுவது, காவிரி பிரச்னையின் அடிப்படை வரலாறே தெரியாததனம்தான். பாவம், அரசியல் பிரச்னையில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறார் என்பதைத் தான் அவர் அறிக்கை காட்டுகிறது.” என்றும் துரைமுருகன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com