இராமநாதபுரம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
இராமநாதபுரம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

”மோடி சுட்ட வடை... நிர்மலாவின் நீலிக்கண்ணீர்... வாக்குறுதி என்னாச்சு” - மு.க.ஸ்டாலின் சூடாகத் தொடங்கிய பிரச்சாரம்

தி.மு.க.வின் தென் மாவட்ட வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் இன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மிக நீண்ட உரையை ஆற்றினார்.

இராமநாதபுரம் சுற்று வட்டாரத்தின் குறிப்பிட்ட வாக்காளர்களை ஈர்க்கும்வகையில் வகையில் வீரம்மிக்க மண் என்றும், அப்பகுதியின் பழைய மன்னரைப் புகழ்ந்தும் பேசிய ஸ்டாலின், வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களுக்கு வகுப்பு எடுப்பதைப் போல பல விசயங்களை எடுத்துக்கூறினார். அவர்கள் கொண்டுவரும் கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றித் தரவேண்டும்; அப்படிச் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஸ்டாலின் பகிரங்கமாகக் கூறினார்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதன் ஒரு பகுதி:

”இந்தியாவின் கட்டமைப்பையே பா.ஜ.க. ஆட்சி சின்னாபின்னம் ஆக்கிவிட்டது. இதற்கு 2024-இல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லை என்றால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பா.ஜ.க. செய்து தரவில்லை.

* பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் தருவோம் என்று சொன்னார்களே! 15 ஆயிரமாவது தந்தார்களா? இல்லை!

* ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்று சொன்னாரே பிரதமர் மோடி அவர்கள். வேலைவாய்ப்பு வந்ததா?  இல்லை!

* உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்று சொன்னாரே? ஆக்கினாரா? இல்லை.

பெரிய பெரிய விஷயங்களைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்நாட்டுக்குத் தந்த வாக்குறுதியையாவது நிறைவேற்றினீர்களா என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நான் கேட்கிறேன். அதுவும், ராமநாதபுரத்தில் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். ராமநாதபுரத்திற்கு வந்து போட்டியிடுங்கள் என்று, பிரதமரை சிலர் அழைப்பதாக ஊடகங்களில் தகவல் வருகிறது. இதே ராமநாதபுரத்துக்கு வந்து பேசும்போது சொன்ன வாக்குறுதியையாவது மாண்புமிகு பிரதமர் அவர்கள் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறாரா?

2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராமநாதபுரத்துக்கு வந்து மோடி அவர்கள் பேசினார். அப்போது அவர் பிரதமர் ஆகவில்லை. வாக்கு கேட்டு வந்து பேசுகிறபோது என்ன சொன்னார்? மிகப்பெரிய புண்ணியத் தலமான ராமேஸ்வரம், சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என்று நரேந்திர மோடி அவர்கள் சொன்னாராரா! இல்லையா! ராமேஸ்வரத்தை உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றிவிட்டார்களா? அம்ருத் திட்டம் – சுதேஷ் திட்டம் என்று சில கோடி ரூபாய்களை ஒதுக்கி, பாதாளச் சாக்கடைத் திட்டம் செய்திருக்கிறார்கள். அதையும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முறையாக செய்யவில்லை.

1964-இல் வீசிய புயல் மற்றும் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி அழிந்து போய்விட்டது. ராமேஸ்வரம் தாண்டி தனுஷ்கோடி வரை முன்பு ரயில்கள் வந்து போனது. புயலால் தனுஷ்கோடி பாதிக்கப்பட்டதில் ரயில் பாதைகளும் காணாமல் போய்விட்டது. தனுஷ்கோடி வரை மீண்டும் பாதை அமைத்து ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக 2019-ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று பிரதமர் மோடி அவர்கள் வந்து அடிக்கல் நாட்டினார். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17 கிலோ மீட்டர் தூர புதிய ரயில் பாதை இன்னும் வரவில்லை. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக மோடி சுட்ட பல வடைகளில் அதுவும் ஒன்று. தேர்தல் முடிந்ததோடு, அது ஊசிப் போனது. அது இப்போது எந்த நிலைமையில் இருக்கிறது என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

இதுபோல் தமிழ்நாட்டுக்காக பல ஸ்பெஷல் வடைகள் சுடப்பட்டது. அதில், மோடி அவர்கள் கொடுத்த முக்கியமான வாக்குறுதி, மீனவர்கள் தொடர்பானது. ''தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் – கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்" என்று இதே ராமநாதபுரத்தில் வைத்துதான் மோடி சொன்னார்.

இராமநாதபுரம் கூட்டத்தில் ஸ்டாலின்
இராமநாதபுரம் கூட்டத்தில் ஸ்டாலின்

பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் இந்த 9 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படவே இல்லையா? மீனவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கிறேன் என்று குமரியில் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி மோடி பேசினார். அவரின் சபதத்தை நிறைவேற்றி விட்டாரா?

2014 முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தவில்லையா? 2017-ஆம் ஆண்டு தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலைக்கு யார் பொறுப்பு? 2021-ஆம் ஆண்டு மேசியா நாகராஜன்,  செந்தில்குமார்,  சாம்சன், டார்வின் ஆகிய 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு யார் பொறுப்பு? பலரும் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்படி பெரிய பட்டியலே இருக்கிறது. நாளைக்கு மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறேன். அப்போது இது பற்றி இன்னும் விரிவாக பேசுவேன்.

மீனவர்களை விரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளை தாக்குவது, துப்பாக்கியால் சுடுவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, படகுகளை பறிப்பது என்று அராஜகங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. அதை தட்டிக் கேட்கிற அரசாக பா.ஜ.க. அரசு இல்லை. மோடி ஆட்சியில் தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால் அவர் முன்பு சொன்ன மாதிரி, இவர் ஆட்சியும் பலவீனமான ஆட்சி என்று தானே அர்த்தம்?

2015-ஆம் ஆண்டு ஒன்றிய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி அவர்கள் இருந்தபோது ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. ஆனால் இன்றைக்கு வரைக்கும் எய்ம்ஸ் செங்கல்தான் இருக்கிறது மருத்துவமனை வரவில்லை. இப்போதுதான் அதற்கு டெண்டரே விட்டிருக்கிறார்களாம். அதாவது, 2015-ஆம் ஆண்டு அறிவித்த எய்ம்ஸ் டெல்லியில் இருந்து டெண்டர் அளவுக்கு உருண்டு வரவே சுமார் 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இனியாவது விரைவாக கட்டி முடிப்பார்களா, இல்லை, இதுவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாடகமா என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து ஜி.எஸ்.டி.-யாக பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டு முழுவதும் வசூல் செய்கிற பா.ஜ.க. அரசுக்கு ஆயிரம் கோடியை ஒதுக்கி ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித் தர மனமில்லை. இதையெல்லாம் நாம் கேட்கிறோம் என்பதால் தி.மு.க.-வைக் கடுமையாக தாக்குகிறார்கள். பிரிவினையைத் தூண்டுகிறோம் என்று திசை திருப்புகிறார்கள். பொய் சொல்கிறார்கள். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு என்ன பேசினார்? ஒரு காலத்தில் நாம் திராவிடநாடு கேட்டவர்களாக இருந்தாலும், இன்றைக்கு இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அது, இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கான பேச்சுதானே தவிர, இதில் பிரிவினை எங்கே இருக்கிறது? 

இதை வெட்டி ஒட்டி, வாட்ஸ்அப்-இல் ஒரு குரூப் அனுப்ப – நாடாளுமன்றத்தில், பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். ராஜாஜியும், காமராசரும், எம்.ஜி.ஆரும் அப்துல் கலாமும் வாழ்ந்த மண்ணில் பிரிவினைவாதமா என்று கேட்கிறார் பிரதமர். திராவிடநாடு கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் திமுகவில் இருந்தவர்தான் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ! 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று வாயசைத்துப் பாடிக்கொண்டு இருந்தவர்தான் எம்.ஜி.ஆர்., இதை எல்லாம் பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் வருவதையெல்லாம், வரலாறு என்று நம்புவது பிரதமர் என்ற பதவிக்கு அழகல்ல!

இராமநாதபுரம் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம்
இராமநாதபுரம் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம்CM_MKSq

வகுப்புவாதத்தை துளியும் ஏற்காதவர் பெருந்தலைவர் காமராசர். டெல்லியில் அவர் தங்கி இருந்த வீட்டைக் கொளுத்த முனைந்தது யார் என்பதை தெரிந்து கொண்டு பிரதமர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சொந்தக் கட்சியில் சொல்லும் அளவுக்கு தலைவர்கள் இல்லாததால் மாற்றுக் கட்சித் தலைவர்களைக் கடன் வாங்கி தி.மு.க.-வை விமர்சித்திருக்கிறார் பிரதமர் மோடி.

இப்போதுதான் சகோதரி கனிமொழி சொன்னதால்,  சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தின் முன்னுரையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதை அவர் முழுமையாக படிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஓய்வு கிடைக்கும். அப்போது முழுமையாகப் படிக்க நேரம் கிடைக்கலாம்.

ஆனால், அதற்கு முன்பு நிதியமைச்சரின் கணவரான டாக்டர் பரகலா பிரபாகர் எழுதிய ‘The Crooked Timber of New India‘ என்ற புத்தகத்தை ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்குப் பேரழிவாக இருக்கும் என்று சொல்கிறார் நிதி அமைச்சரின் கணவர் பரகலா பிரபாகர் அவர்கள். என்னை இந்தி படிக்கவிடவில்லை - சமஸ்கிருதம் படிக்கவிடவில்லை என்று முடிந்து போன காலத்தைப் பற்றி கதை விடுகிற நிதி அமைச்சர் அவர்கள், இனி நடக்கப் போகிறதைப் பற்றி படிக்க வேண்டும்.

அம்மையார் ஜெயலலிதா சட்டமன்றத்தில் நடத்திய நாடகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் நிதி அமைச்சருக்கு மணிப்பூரில் ஆடை களையப்பட்டு இழுத்து வரப்பட்ட பெண்களைப் பார்த்து ஏன் கண்ணீர் வரவில்லை? ஒன்றரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமருக்கு மணிப்பூர் என்கிற ஒரு மாநிலமே நினைவுக்கு வரவில்லையே! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு ஒப்புக்கு ஒரு சில நிமிடங்கள் அதைப் பற்றி பேசியிருக்கிறார். நாடாளுமன்றத்திற்கு வர மறுப்பதும் – மணிப்பூர் பற்றி பேச மனமில்லாமல் இருப்பதும்தான் பிரதமரின் பின்னடைவைக் காட்டுகிறது இது நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக, உறுதுயாக எதிரொலிக்கும்.

வடக்கைத்தான் அவர்கள் அதிகம் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது வட மாநிலங்களையும் இழக்கத் தொடங்கிவிட்டார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியின் பிரதமரோ – உள்துறை அமைச்சரோ – நிதி அமைச்சரோ தி.மு.க.-வை விமர்சிக்கிறார்கள் என்றால் தி.மு.க. சரியாக இருக்கிறது என்று பொருள்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக இருப்பது,  பழனிச்சாமி! அ.தி.மு.க., பா.ஜ.க.வின் அடிமை! தி.மு.க. எதிர்ப்பு ஒன்று மட்டும்தான் அ.தி.மு.க.-விற்குத் தெரியும். அ.தி.மு.க.,  பா.ஜ.க போன்றவர்களின் பொய்களுக்கும் எதிர்ப்புக்கும் அஞ்சும் இயக்கம் அல்ல, திமுக! எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம்தான் இந்த இயக்கம்!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் என்ன வேண்டுமானாலும் தி.மு.க.வைப் பற்றி வசைபாடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. நாங்கள் மாநிலக் கட்சிதான். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் நலனுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரே மாநிலக் கட்சிதான் தி.மு.க! நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஒன்றிய பா.ஜ.க அரசின் அமைச்சர்கள் - எம்.பி.க்கள் பேசும் அவதூறுகளுக்கு அஞ்சாமல் பதிலளித்து நமது குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டு வருகிறார்கள் நம்முடைய கழக எம்.பி.க்கள். தி.மு.க. உறுப்பினர்கள் கொள்கையைப் பேசுகிறார்கள் - பயமில்லாமல் பேசுகிறார்கள் என்பதுதான் பாஜக-விற்கு கோபம். தி.மு.க. பேசும் கொள்கைகளை மற்ற கட்சியினரும் பின்பற்றிப் பேசுகிறார்கள் என்பதுதான் பாஜக-விற்கு எரிச்சலாக இருக்கிறது. அகில இந்தியக் கட்சிகள் சில, நம்முடைய கருத்தியலை உணர்ந்து மனமாற்றம் அடைந்து வருகின்றன.

நம்முடைய கொள்கை இந்திய ஒன்றிய ஆட்சியை வழிநடத்தும் கொள்கையாக மாற வேண்டும். அதற்கு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் நாம் கைப்பற்றியாக வேண்டும். அகில இந்தியா முழுமைக்கும் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணிதான். இந்தியாவைக் காப்பாற்ற INDIA-வுக்கு வாக்களியுங்கள் என்பதுதான் நமது தேர்தல் முழக்கமாக அமையப்போகிறது.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com