ஜிகேமணி, பாமக
ஜிகேமணி, பாமக

என்.எல்.சி. தி.மு.க. ஆதரவுக்கு ஒப்பந்தங்களே காரணம்?- பா.ம.க. மணி கடும் தாக்கு

என்எல்சி விவகாரத்தில் விவசாயிகளுக்கு எதிராக தி.மு.க. செயல்படுவதற்கான காரணம், அக்கட்சியினருக்கு ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான ரூபாய் ஒப்பந்தங்கள்தான் என்று பா.ம.க. கௌரவத் தலைவர் கோ.க.மணி கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் விவரம்:

” என்.எல்.சி விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று மாநிலங்களவையில் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்காது ஏன் என்று வேளாண் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கேட்டிருக்கிறார். அமைச்சர்கள் எழுத்து மூலம் அளிக்கும் பதில்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படாது. அவற்றின் மீது எந்த எதிர் வினாவும் எழுப்ப முடியாது, விவாதமும் நடத்த முடியாது. அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு இது கூட தெரியாதது பரிதாபம்தான்.

1956 முதல் தமிழ்நாட்டில் 64,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை உரிமம் வழங்கப்பட்டுவருகிறது, இது 2036ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குத்தகை உரிமத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துவிட்டால் அதன் பின் என்.எல்.சி தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது. அதைச் செய்யாமல் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணியை அமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி கேட்பது, கையாலாகாததனம். திமுக அரசின் தோல்வியையும் துரோகத்தையும் அவர் மூடி மறைக்கிறார்.

பாஐக அரசின் அனைத்து கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் எதிர்க்கும் திமுக என்எல்சி விவகாரத்தில் மட்டும் அதன் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறது. இந்த மர்மத்தைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அன்புமணி என்எல்சி விவகாரம் குறித்து மட்டும் கடந்த நான்காண்டுகளில் மொத்தம் 30-க்கும்மேற்பட்ட வினாக்களை எழுப்பியிருக்கிறார். திமுக சார்பில் மக்களவையில் 24 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவராவது என்எல்சி விவகாரம் குறித்தும், உழவர்கள் நலன் குறித்தும், நாடாளுமன்றத்தில் வினா எழுப்பி உள்ளார்களா? எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவிற்கும், எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கும் மருத்துவர் அன்புமணி குறித்து பேச எந்த தகுதியும் இல்லை.

கடலூர் மாவட்டத்தில் வீராணம் நிலக்கரி திட்டம். பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம், சேத்தியாதோப்பு நிலக்கரி திட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம் ஆகியவற்றை முதன் முதலில் வெளி உலகிற்கு தெரிவித்தவர் மருத்துவர் அன்புமணிதான். அப்போது, எங்களுக்கே தெரியாமல் நிலக்கரி திட்டம் வந்துவிடுமா என்று கேட்டது இதே பன்னீர்செல்வத்தின் வாய்தான். பின்னர் பாமகவின் எதிர்ப்பால் மூன்று நிலக்கரி திட்டங்கள் கைவிடப்பட்டவுடன் நாங்கள் கடிதம் எழுதியதால்தான் இத்திட்டங்கள் கைவிடப்பட்டன என்று வெற்று பெருமை பேசியதும் திமுகவின் வாய்தான்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு புதிய நிலக்கரி சுரங்கங்களையும் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவாதம் அளித்தார். ஆனால் நெய்வேலியில் மூன்றாவது சுரங்கத்திற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என இதே மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். இது குறித்து முதல்வர் எதுவும் பேசவில்லை, அமைச்சர் பன்னீர்செல்வமும் எதுவும் பேசவில்லை. இந்த அமைதிக்கு பின்னால் எந்த அமலாக்கத்துறை இருக்கிறது?

அமைச்சர் பன்னீர்செல்வம் உழவர்களுக்கு செய்தது துரோகம் மட்டும்தான். இப்போதுகூட நெய்வேலியில் உழவர் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டபோது அதை தடுக்காமல் கனடாவிற்கு உல்லாச பயணம் சென்றவர்தான் பன்னீர்செல்வம். விட்டத்துப் பூனையாக இருக்கிறார்.

உழவர்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு என்எல்சி ஆதரவாக எம்ஆர்கே பன்னீர்செல்வம் செயல்படுவதற்கு வலிமையான காரணங்கள் உள்ளன. என்எல்சி நிறுவனத்தில் இருந்து திமுகவை சேர்ந்த அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கடந்த பல பத்தாண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. அதை எம் ஆர் கே பன்னீர்செல்வத்தால் மறுக்க முடியுமா?

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தனாக முதலமைச்சரிடம் “சட்டப்பேரவையில் நீங்கள் அறிவித்தவாறு என்எல்சி மூன்றாவது சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட மக்களுடன் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்துவேன்” என்று உறுதிபடகூற வேண்டும். அவ்வாறு கூறினால் அவரை மண்ணைக் காக்க வந்த வீரபாண்டிய கட்டபொம்மனாக கடலூர் மாவட்ட மக்கள் போற்றுவார்கள். இல்லாவிட்டால் மண்ணுக்கு துரோகம் செய்த எட்டப்பனாகத்தான் வரலாற்றில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இடம் பெறுவார்.” என்று கோ.க.மணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com