புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற இருக்கும் தமிழ்நாட்டின் செங்கோல்!
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக வழங்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மேடைக்கு அருகில் நிறுவப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
"நமது நாடு சுதந்திரமடைந்த போது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள், பண்டித நேரு அவர்களிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற செங்கோலை வழங்கினார்.புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின் போது, நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, சோழர் காலத்துச் செங்கோல் வழங்கப்படவிருக்கிறது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை அலங்கரிக்கும் வகையில் இந்த செங்கோல் இடம்பெறும். தமிழ்க் கலாச்சாரத்தைத் தேசிய அரங்கில் மீட்டெடுத்ததற்காக, மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குத் தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேருவிடம் கொடுக்கப்பட்ட அந்த செங்கோலானது தற்போது பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரிலுள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவனில் உள்ளது. இதுவே புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மேடைக்கு அருகில் நிறுவப்பட உள்ளது.