தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அர்லேகரை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தனர்.
எம்.எல்.ஏ.களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம், மிரட்டல் அரசியலில் த.வெ.க. ஈடுபடுவதாக தி.மு.க. நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே கடந்த ஜூலை 1ஆம் தேதி தி.மு.க. புகார் அளித்துள்ள நிலையில், மீண்டும் இன்று புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் அளித்த மறுநாளே தன்னை த.வெ.க. வந்து அணுகியதாகவும், அதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்ததாக எம். ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாக தி.மு.க. புகாரில் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.களை அமைச்சரவை பதவி, வாரியத் தலைவர் பதவி, பண ஆசைகாட்டி த.வெ.க. பக்கம் இழுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மக்கள் அளித்த தீர்ப்பை சீர்குலைக்கும் முயற்சிகளில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் செயல்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
தி.மு.க. மட்டுமின்றி, அ.தி.மு.க., பா.ஜ.க., புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளனர்.