
வரலாற்றில் தமிழ் சினிமா குறித்து எழுதப்படும் செய்திகளில் பாரதிராஜா என்று வருகிற இடங்களில் எல்லாம் அவரது உயிர்த்தோழன் இளையராஜாவும் நிச்சயம் இருப்பார். இன்று தனது தோழனை வழியனுப்ப வந்த இளையராஜாவை ஊடகங்கள் சூழ்ந்துகொண்டு பேட்டி எடுக்க முயன்றபோது மிகுந்த விரக்தியில், ‘பேச என்ன இருக்கு? பேட்டி எடுக்கிற இடமா இது?? என்று வேதனையுடன் கடிந்துகொண்டு விடைபெற்றார் ராஜா.
70களின் துவக்க காலத்தில் சினிமா வாய்ப்பு தேடியபோதே நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாரதிராஜா, இளையராஜா ஆகியோர். அச்சமயம் ஒருவேளை சோற்றுக்கே திண்டாடிய அவர்கள் அடைந்த மாபெரும் வெற்றிதான் இன்றும் சினிமா வாய்ப்பு தேடுகிற பலருக்கு ஆதர்ஷம்.
இம்மும்மூர்த்திகளில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் எஸ்.பி.பி காலமானபோது அவரை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த இளையராஜா இந்த 5 ஆண்டுகளில் அவரது இழப்பை நினைவுகூராத மேடையே இல்லை.
இந்நிலையில் அடுத்த உயிர்த்தோழன் பாரதிராஜாவும் இன்று விடைபெற்றுச் சென்றநிலையில் மிகவும் மனமுடைந்துபோன இளையராஜா தளர்ந்த நடையோடு தனது தோழனுக்கு ம்லரஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திவிட்டு தனது காரை நோக்கித் திரும்பியவரை வலுக்கட்டாயமாக வழிமறித்த ஊடகங்கள், ‘பாரதிராஜா குறித்த உங்கள் நினைவைப் பகிருங்கள்’ என்று மைக்கை நீட்ட, மிகவும் உடைந்துபோயிருந்த ராஜா, ‘பேச என்ன இருக்கு? அதுவுமில்லாமா என்ன வீடு இது. இங்க வந்து பேட்டியெல்லாம் கேட்கலாமா?? என்று ஊடகர்களைக் கடிந்துகொண்டு வேறு எதுவும் பேசாமல் விடைபெற்றார்.