மகாத்மா காந்தி இன்றைக்கு பலருக்கு புரிந்துகொள்ள முடியாத ஒரு ஆளுமையாக இருக்கலாம். தன் வாழ்க்கையே தன் செய்தி என்று உரைத்தவர் அவர். அவரை மனக்கண்ணில் காணும்போது வரக்கூடிய முதன்மையான பிம்பம் கையில் தடியுடன் அவர் நடந்துகொண்டிருக்கும் சித்திரம்தான்.
அவர் தன் போராட்டங்களை நடைகளாக வடிவமைத்தவர். தன் 60 வயதில் 387 கிமீயை 24 நாட்கள் நடந்து அவர் மேற்கொண்ட தண்டி உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை உலகமே சமூக ஊடகம் இல்லாத அந்நாட்களில்கூட வியந்து பார்த்தது.
நவீன இந்தியா அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. உலகின் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற வாழ்வுமுறை சார்ந்த நோய்களின் தலைநகரமாக இருக்கின்ற நம் நாடு, குறைந்த பட்சம் அவருடைய விடாத நடைப்பயிற்சி வாழ்க்கை முறையை கைக்கொள்ள வேண்டும். ‘ ஆரோக்கியமான, நோய்களிலிருந்து விடுதலைபெற்ற ஒரு மனிதன் தினமும் 12, 13 மைல்கள் களைப்பில்லாமல் நடக்கூடியவனாக இருப்பான்’ என்று அவர் குறிப்பிடுகிறார். வாழ்க்கையில் தன் சுய ஆரோக்கியத்துக்காக, பணம் மிச்சம்பிடிப்பதற்காக, போராட்ட நடவடிக்கைகளுக்காக, எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டுக்காக நடந்தவர் அவர்.
அந்திமழையின் இந்த சிறப்பிதழில் வெளியாகி இருக்கும் கட்டுரைகள் நடைப்பயிற்சியை பல ஆண்டுகளாக மேற்கொண்டிருப்பவர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்கின்றன. இதுவரை நடைப்பயிற்சி மேற்கொள்ளாதவர்களை உந்துவதே இந்த கட்டுரைகளின் நோக்கம்.