இனிமையாய் இரண்டாம் தேனிலவு!

இனிமையாய் இரண்டாம் தேனிலவு!

என்  மருத்துவ வாழ்வின் தொடக்கத்தில் நான் சந்தித்த ஒரு தம்பதியைப் பற்றிய விஷயம் இது.

திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை இல்லை என்று பல மருத்துவமனைகளுக்கும் சென்று, எல்லாப் பரிசோதனைகளையும்  அவர்கள் செய்திருந்தனர். ஏறி இறங்காத கோவில் இல்லை, செய்யாத பூஜை இல்லை என்றார்கள். அவர்களது பழக்கவழக்கமும் ராணுவ ஒழுங்குடன் மிகச் சரியாக இருந்தது. இருவரின் மருத்துவக் குறிப்புகளிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்படி எல்லாமே மிகச் சரியாக இருந்தது தான் குழந்தையின்மைக்கான காரணம். அது என்ன? கட்டுரையின் இறுதியில் கூறுகிறேன்.

எல்லா இயற்கை வளங்களும் நிரம்பிய நாடு என்று உலகெங்கும் காலங் காலமாக அறியப்பட்டது நம் நாடு. உணவுக்காக பிற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே படையெடுப்பவர்களின் கவனத்தை நம் நாட்டை நோக்கித் திரும்பச் செய்தது. இவ்வளவு வளங்கள் போதாது என்ற நிலையும் ஒரு சமயம் வந்தது. அதற்கு நம் நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக இருந்தது.

 உலகளவில் இரண்டாவது இடம், தற்போதைய மக்கள் தொகை 1.3 பில்லியன் என்ற இரு புள்ளிவிவரங்களுக்குக் கொஞ்சம் பின்னால் இன்னொரு சோகக் கதையும் கூடவே வருகிறது. இளம் தம்பதியினர் மத்தியில் குழந்தையின்மை வெகுவேகமாகப் பெருகி வருகிறது என்பதே அந்த சோகக் கதை. இன்னும் ஓரிரு வருடங்களில் உலக அளவில் மக்கள் தொகையில் முதல் இடத்திற்கு வந்துவிடும் என்று கணிக்கப்படும் இதே நாட்டில் தான், தற்சமயம் ஏழு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் தவிக்கின்றனர் என்பது எவ்வளவு பெரிய முரண்!

எந்த ஒரு மகப்பேறு அல்லது பெண் மருத்துவரைக் கேட்டாலும் குழந்தையின்மையால் தவிக்கும் குடும்பங்கள், குறிப்பாகப் பெண்கள் படும் கஷ்டங்களைப் பற்றிக் கதைகதையாகக் கூறுவார்கள். அண்மையில் தோழி ஒருத்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘எனக்குக் குழந்தை பெத்துத் தான் ஆகணும்னு ரொம்ப ஆசை எல்லாம் இல்லைங்க.. ஆனா குழந்தை பிறக்கலைன்னா என்னை டைவர்ஸ் பண்ணிடுவாங்க.. எப்படியாவது எனக்குக் குழந்தை பிறக்க வைங்க‘ என்று பல பெண்கள் தன்னிடம் கெஞ்சியிருப்பதாகக் கூறினார்.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் பல பெண்கள் குழந்தைப்பேற்றுக்காக முயன்று அது சாத்தியமாகாத பட்சத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி பேறுகால முன்கவனிப்பு கிளினிக்கிற்கு வருவதையும், 'எனக்கு வயிற்றில் குழந்தை இருக்கிறது, இதோ பாருங்கள், குழந்தை அசைகிறது, எனக்குப் பரிசோதனை செய்யுங்கள்' என்று வாழ்நாள் முழுவதும் அலைவுறுவதையும் வருத்தத்துடன் பார்த்து வருகிறேன் என்றும் தோழி கூறினார்.

கண் மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் இரண்டையும் பார்த்து வரும் எனக்கும் மாதம் ஒரு முறையாவது இப்படியான அனுபவங்கள் கிடைக்காமல் இல்லை. ஒரு பெண் குழந்தையின்மைக்காக கடந்த மூன்று வருடங்களில் பத்து லட்ச ரூபாய் வரை செலவழித்திருக்கிறாள், ஆனால் இன்றுவரை அவளது கணவருக்கு சாதாரண விந்தணு பரிசோதனை கூட செய்யப்படவில்லை என்பதை அறிந்தபோது திகைத்துப் போனேன்.

இன்னொரு இளைஞன் சென்ற வாரத்தில் தன் மனைவி மற்றும் தாயுடம் வந்தான். மனைவியைக் காட்டி, ‘இவளுக்குப் பல இடங்களில் சிகிச்சை எடுத்துவிட்டோம். முட்டை வளர்ச்சியில் பிரச்னை இருப்பதாகக் கூறினார்கள். செயற்கைக் கருத்தரிப்பு தான் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள், இப்போது இவள் வேறு ஊரில் வேலை பார்க்கிறாள், அந்த நகரத்தில் உங்களுக்குத் தெரிந்த குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் யாருக்காவது பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்டான். அந்தப் பெண்ணின் கோப்புகளை ஆராய்ந்தேன். பிரச்னை சற்றுப் பெரிதானது தான். செயற்கை கருத்தரிப்பு தான் அதற்கான தீர்வாக இருக்க முடியும். ‘முட்டை வளர்ச்சியே இல்லன்னு சொன்னாங்க.. ஆனா போன மாசம் இவகுளிச்சாளே?' என்று கேட்டார் அவளது மாமியார். அதிகம் பேசாவிட்டாலும் அவரது தொனியில் ஒரு குற்றம் சாட்டும் தன்மை இருந்தது.

அவர்களது பதற்றத்தைத் தணிக்கும் விதமாக சில அறிவுரைகளைக் கூறி விட்டு, அந்த நகரத்தில் தெரிந்த மருத்துவர் யாரென்று விசாரித்துச் சொல்கிறேன், இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அந்த இளைஞன் மட்டும் வந்தான். நான் விசாரித்த மருத்துவமனையின் பெயரைச் சொல்லி பரிந்துரைக் கடிதத்தையும் அளித்துவிட்டு, உங்களுக்கு விந்தணு பரிசோதனை செய்திருகீகிறீர்களா என்று கேட்டேன். இதுவரை எனக்கு எந்தப் பரிசோதனையும் செய்யவில்லை என்றே கூறினான்.

பொதுவாக குழந்தையின்மைக்கான காரணங்களை மூன்று வகையாகப் பிரிப்பார்கள். குழந்தைப் பேறின்றித் தவிக்கும் மூன்றில் ஒரு பங்கு தம்பதியினருக்கு ஆண்கள் தரப்பில் பிரச்னை இருக்கும் (Male Factors). மூன்றில் அடுத்த பங்கினருக்கு பெண்கள் தரப்பில் பிரச்சனை இருக்கும் (Female Factors). மூன்றாவது பிரிவினருக்கு இரண்டு தரப்பிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் காரணம் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்கும்.

குழந்தையின்மை பிரச்சனைக்கான மருத்துவ ரீதியான காரணங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன... எளிதான புரிதலுக்காக:

* உடல் பாகங்களில் ஏற்படும் குறைகள்

* விந்தணு மற்றும் சினை முட்டை ஆகிய உயிரணுக்களின் உருவாக்கத்தில் இருக்கும் பிரச்னைகள்

* ஆண், பெண் இரண்டு தரப்பினரின் உயிரணுக்களும் சந்திப்பதில் தோன்றும் பிரச்னைகள்

* இறுதியாக கரு தங்குவதிலும் வளர்வதிலும் ஏற்படும் பிரச்னைகள் என்று இதை நான்கு பிரிவாக அணுகலாம்.

முதல் மூன்று வகைகளும் இரண்டு தரப்புக்கும் பொதுவானவை. இவற்றில் பெரும்பாலானவை எளிதில் சரி செய்யக் கூடியவையும் கூட. வெகு சில பிரச்னைகளுக்கே மிக அதிகமான செலவும், பலகட்ட சிகிச்சைகளும் தேவைப்படும் என்பது குழந்தையின்மை சிகிச்சையில் தற்போதைக்கான பெரிய ஆறுதல்.

உடல் பாகங்களின் குறைபாடுகள் என்று பார்த்தால், புறத் தோற்றத்தில் சாதாரணமாகத் தோன்றும் எந்தவொரு ஆணுக்கு, பெண்ணுக்கும் சம அளவில் பிறவிக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக ஆண்களுக்கு கீழிறங்காத விதைப்பை (Undescended testes) பிரச்சனை இருந்திருக்கலாம். தாமதமாக அது சரி செய்யப்பட்டும் இருக்கலாம். அதனால் விந்தணுக்களின் உற்பத்தி குறைவாக இருக்கக் கூடும். பெண்களுக்கு கருப்பை வளர்ச்சியில் பாதிப்பு நிகழ்ந்திருக்கலாம்.

இவை தவிர, இரண்டு தரப்பினருக்கும் பொதுவான காரணங்கள் பல இருக்கின்றன. அகச்சுரப்பிகளின் சமச்சீரின்மை, உயிரணுக்கள் பயணிக்கும் பாதைகளாகிய கருக்குழாய் (tubal block) அல்லது விந்துக்குழாய் அடைப்பு (epididymal block) இவற்றைச் சொல்லலாம். லேசான ஹார்மோன் குறைபாடுகளை வெகு எளிதில் கண்டுகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் முடியும். உதாரணமாக, தைராய்டு குறைபாட்டினை தினமும் ஒரே ஒரு மாத்திரை மூலம் சரிசெய்யலாம். அதிகமாக சுரக்கும் Prolactin முதலிய ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் உள்ளன.

ஹார்மோன்களின் சுரப்பை சீராக்கி விட்டால், அடுத்தது பெண்ணின் சினை முட்டை வளர்ச்சியைக் கண்காணிப்பார் மகப்பேறு மருத்துவர். மாதவிடாய் வந்த நாளில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முட்டை வளர்ச்சியை ஸ்கேன் மூலம் கண்காணித்து, தேவைப்பட்டால் முட்டை வளர்வதற்கான மாத்திரைகளை அளிப்பார். இதே நேரம் ஆண்களுக்கான விந்தணு பரிசோதனையையும் செய்ய வேண்டும் விந்தணுக்களின் எண்ணிக்கை, அசைவு, அளவு இவை மூன்றும் முக்கியம். இதில் ஏதாவது ஒரு குறை இருப்பின் ஆணுக்கும் தேவைக்கேற்ப சத்து மாத்திரைகள் அல்லது ஹார்மோன் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.

சிலருக்கு சிறுவயதில் காசநோய், கொனோரியா (Gonorrhea) போன்ற தொற்றுக்கள் ஏற்பட்டு கவனிக்கப்படாமல் போயிருக்கும். அவை பின்னாளில் ஆண்களில் விந்துக்குழாய் அடைப்பையும் பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பையும் ஏற்படுத்தியிருப்பதை குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும்போது தான் கண்டுபிடிப்பார்கள்.

இதை‌ உறுதிப்படுத்த பெண்களுக்கு செய்யப்படும் Hysterosalphingogram என்ற பரிசோதனையில், கருப்பைவாய் வழியாக குறிப்பிட்ட சாயப் பொருளை செலுத்துவார்கள். அதன் பின் சிறிய இடைவெளிகளில் எடுக்கப்படும் எக்ஸ்ரே படங்கள் மூலம் அடைப்பினைக் கண்டுகொள்ள முடியும். அடைப்பு வருவதற்கான முக்கிய காரணம் நம் நாட்டில் காசநோய். எனவே காசநோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை துவங்கப்படும். காசநோய்க்கான சிகிச்சை தொடங்கிய ஓரிரு மாதங்களிலேயே பல பெண்கள் கருத்தரிப்பதைப் பார்த்திருக்கிறோம். எங்கள் ஊரின் மூத்த மகப்பேறு மருத்துவர் ஒருவர், குழந்தையின்மைக்காகத் தன்னிடம் வரும் தம்பதிகளில் வேறு எந்தவிதக் குறையும் இல்லை என்ற நிலையில் காசநோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சையை (Empirical ATT) ஆரம்பித்து நல்ல பலன் கண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

பிறவிக் குறைபாடுகள் மற்றும் தொற்றால் ஏற்பட்ட பிரச்சனைகளின் நிகழ்வு மனிதன் கையில் இல்லை (non modifiable risk factors). ஆனால் தவிர்க்கக் கூடியவையும், மாற்றக் கூடியவையுமான modifiable risk factors  முழுக்க முழுக்க தனிப்பட்ட மனிதர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. வாழ்வியல் நோய்களான உடல் பருமன், மதுபோதைப் பழக்கம், மன அழுத்தம், பணியிடத்து நோய்கள் போன்றவற்றை அண்ட விடாமல் தடுப்பதால் பல சிக்கல்களை முளையிலேயே கிள்ள முடியும்.

உதாரணமாக, அதிக நேரம் நின்று கொண்டே பணி புரியும் ஆணுக்கு விதைப்பை சிரைகளின் (Veins) வீக்கத்தால் Varicocoele என்ற பிரச்சனை வரக்கூடும். இதனால் விந்தணுக்கள் உருவாவதற்கான சரியான தட்பவெப்பம் அமையாது. இதனை எளிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். உலகெங்கிலும் ஆண், பெண் இரண்டு தரப்பினருக்கும் உடல் பருமன் குழந்தையின்மைக்கான காரணங்களில் முதலிடம் பிடிக்கிறது. எடை அதிகரிப்பால் அகச்சுரப்பியல் பிரச்சனை வருவதும், அகச்சுரப்பிகளின் சமநிலையில் தள்ளாட்டம் ஏற்படுவதால் உடற்பருமன் அதிகரிப்பதும், ‘உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே!' என்பதுபோல ஒரு மோசமான சுழற்சியாகி (vicious cycle ) விடும் அபாயமும் இருக்கிறது!

கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து 40 முதல் 50 நிமிடம் வரை நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுதல், கூடவே சத்தான உணவுகளை உண்பது, இசை, சினைமுட்டை வெளியேறும் ovulation period ஐ கணக்கிட்டு இனிமையாய் மீண்டும் ஒரு தேனிலவு என்று ரசனையான வாழ்வுக்குள் நுழைந்த பின் எவ்வித சிகிச்சையும் இன்றி விரைவிலேயே குழந்தைச்  செல்வத்தைப் பெற்றவர்கள் பலர். ஐந்து வருடங்களாக சிகிச்சை எடுத்து, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அனைத்து சிகிச்சைகளையும் நிறுத்திவிட்ட இரண்டாம் மாதத்தில் இயற்கையாகவே கருவுற்றேன் என்று  சென்ற வாரம் கூட ஒரு பெண் என்னிடம் கூறினார்.

 அதே வாரத்தில் நான் சந்தித்த, ஒரு சிறுமி பற்றியும் கூறவேண்டும். சிறுமி என்ற அடைமொழி தான் அவளுக்குப் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அவளுக்குப் பத்தொன்பது வயது தான் ஆகிறது.

சிறுவயது முதல் லேசான சளி காய்ச்சல் என்றாலும் என்னிடம் வருபவள் அவள். ஆரோக்கியமான பெண். நல்ல உயரமும், கொஞ்சமே கொஞ்சம் பருமனும் வாய்க்கப் பெற்றவள் என்பதால் விரைவில் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்ற முனைப்பு முன்பே அவளது பெற்றோரிடம் இருந்தது. 18 வயது நிரம்பியவுடன் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்தும் வைத்தார்கள். பதினைந்து நாட்கள் மட்டும் உடன் இருந்த அவளது கணவன் வெளிநாட்டுக்குச் சென்று விட்டான்.

அடுத்த ஒரு வருடத்தில் இதுவரை இரண்டு முறை 15 நாள் விடுமுறையில் வந்து சென்றிருக்கிறான். அவன் அடுத்து வந்து தங்கப்போகும் 15 நாட்களுக்குள் இவள் கருவுற்று விட வேண்டும் என்று இந்தச் சிறுமியை அவளது மாமியார் இப்பொழுதே குழந்தையின்மை மையத்துக்கு அழைத்துச் சென்று, முட்டை வளர்வதற்கான மாத்திரை, ஊசியை எடுத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார் என்று சிறுமியும் தாயாரும் என்னிடம் கூறினர்.

‘இவளுக்குக் கொஞ்சம் கவுன்சிலிங் குடுங்க' என்றார் அவளது அம்மா. ‘கவுன்சிலிங் தேவைப்படுவது உங்களுக்குத் தானே தவிர, அவளுக்கு இல்லை.. தாம்பத்தியம் என்றால் என்னவென்றே தெரியாத சிறுமியை இப்படிப் பாடாய்ப் படுத்தாதீர்கள்.. மெல்ல வேரூன்றி, காதலாகிக் கசிந்து அழகாய் மொட்டுவிட்டு மெதுவே மலர்ந்து மணம் வீச வேண்டிய தாம்பத்தியத்தை, அதன் பின் கையில் தவழ வேண்டிய மழலைச் செல்வத்தை, தடி கொண்டு அடித்து கனிய வைக்காதீர்கள்' என்று சத்தம் போட்டே அனுப்பினேன்.

சினிமாக்களில் ஒரே பாட்டில் முன்னேறுவதைப் போன்ற விஷயம் இல்லை குழந்தைப் பேறு. இதைப் போன்ற தடாலடி உறவினர்களின் அணுகுமுறைகளால் உடல் பிரச்சனைக்குக் கொஞ்சமும் குறையாத அளவில் தம்பதிகளை மனநல பிரச்சனைகளும் பாடாய்ப்படுத்தி வருகின்றன. தேவையற்ற வெளியுலக அழுத்தங்கள், அதிகபட்ச அலைபேசி பயன்பாடு, புகை - மதுப் பழக்கங்கள், நீ பெரிய ஆளா, நான் பெரியவனா என்பதுபோன்ற ஈகோ மோதல்கள், இவற்றால் உடல்நிலை சீராக இருந்தும் பலருக்குக் கரு தங்காமல் போய் விடுகிறது.

போதைக்கு அடிமையான நபரால் உடலுறவில் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் முழுமையாக ஈடுபட முடிவதில்லை. அதைப்போல மதுப்பழக்கத்தை வெறுக்கும்,  பொருளாதார பிரச்சனைகளால் துவளும் பெண்ணும் கணவனுடன் ஒத்துப் போக மறுக்கிறாள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் பலரின் வாழ்வில் விளையாடுகிறது. இந்தியாவில் பெருகி வரும் குழந்தையின்மை பிரச்சனைக்கு மதுப் பழக்கம், அதிகபட்ச பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, சூழலியல் மாசுபாடு இவையே காரணம் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

மேலை நாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயது சராசரியாக 52 ஆக இருக்கிறது. அதே சமயம் நம் நாட்டில் அது 47 என்று குறைந்து விட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

80% தம்பதிகளுக்கு மேற்கூறிய காரணிகளால் குழந்தை பிறக்கத் தாமதமாகிறது. இவற்றிற்கு மனநல ஆலோசனை மற்றும் எளிய சிகிச்சைகள் மூலம் முழுமையாகத் தீர்வு காண முடியும். மீதமிருக்கும் 20% தம்பதிகளுக்கு உயர் சிகிச்சைகள் தேவைப்படலாம். முன்பு கூறிய அனைத்து சிகிச்சை முறைகளையும் முயன்று பார்த்தபிறகு அடுத்த கட்டமாக குழந்தையின்மை நிபுணர், தகுதியான நபர்களுக்கு விந்தணுக்களை சேகரித்து கருப்பைக்குள் செலுத்தும் intrauterine insemination (IUI) சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.

இது எளிதாக ஆய்வகத்துடன் கூடிய சிறிய மருத்துவமனைகளில் வைத்து செய்யக்கூடிய ஒன்று. இந்த சிகிச்சையை சில மாதங்களுக்குத் தொடர்ந்து விட்டு, அது சரி வராத நேரத்தில் சினைமுட்டைகளில் ஒற்றை விந்தணு தேர்ந்தெடுக்கப்பட்டு செலுத்தப்படும் சிகிச்சையான Intracytoplasmic sperm insemination (ICSI) செய்யப் படலாம்.

இதற்கு அடுத்த சிகிச்சையாக வருவது In Vitro Fertilisation (IVF) - சோதனைக் குழாய் குழந்தை. இந்தியாவில் இந்த சிகிச்சை துவங்கப்பட்டது 1978இல். அந்நாளிலிருந்து  திரைக்கதை ஆசிரியர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் பிடித்தமான கரு இது.

சொல்வதற்கு எளிது, ஆனால் இருப்பதில் அதிகமான மெனக்கிடுதல் தேவைப்படும் சிகிச்சை. தாயின் சினைமுட்டையையும், தந்தையின் விந்தணுவையும் உடலுக்கு வெளியே சேகரித்து அவற்றை ஆய்வகச் சூழலில் சந்திக்கச் செய்து, சிறந்த கருவாக உருவாக்கம் செய்த பின் தாயின் கருவறைக்குள் செலுத்தப்படும்.

தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு உயிரணுக் குறைபாடு இருந்தால் கருமுட்டை தானம் அல்லது விந்தணு தானம் மூலம் IVF சிகிச்சை செய்யப்படும். தாயின் உடல் கருவை தாங்கும் தன்மை இல்லை என்றால் வாடகைத்தாய் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இந்த அனைத்து சிகிச்சை முறைகளுக்கும் அரசுத் தரப்பில் வரையறுக்கப்பட்ட சட்டங்களும் தீவிர கண்காணிப்பும் உண்டு.

பெருகி வரும் மருத்துவக் கண்டுபிடிப்புகளால் பயனடைந்தவர்கள் பலர் உள்ளனர். அனைத்தையும் முயன்று பார்த்துவிட்டு பலனில்லை என்றான பின் முறையாக குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பவர்களும் உண்டு. நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் குழந்தையின்மை தம்பதிகளுக்குள் மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. தம்பதியினரின் மனப் போராட்டத்தால் பல முறைகேடுகள் நடப்பதற்கு இந்தத் துறை வாய்ப்பாக அமைகிறது. திருமணம் என்ற விஷயமும் குடும்பம் என்ற அமைப்பும் சுமையாகி விடுகிறது. இந்த நிலையினைத் தவிர்க்க திருமணத்துக்கு முன்னும் பின்னுமான ஆலோசனைகள் (pre and post marital counselling) சில நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

சிகிச்சைகள், சட்டங்கள், தண்டனைகள் இவற்றைத் தாண்டி குடும்பம் மற்றும் சமூகத்தின் ஆதரவும் இந்தப் பிரச்சனையை கடந்து வருவதற்கு மிக மிக அவசியம்!

இப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன தம்பதியினரைப் பற்றி..

கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரு குறையும் இல்லை என்று கூறியிருந்தேன் அல்லவா.. கணவன் சென்னையில் வேலை பார்க்க, மனைவி தென்மாவட்டத்தில் ஒரு ஊரில் இருக்கிறாள். மிகச்சரியாக மாதத்தின் முதல் வாரமும் மூன்றாவது வாரமும் மட்டும் வந்து செல்கிறான் கணவன். அந்தப் பெண்ணுக்கோ மாதவிடாய் சுழற்சி மிக மிகச் சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. அதுவும் அவன் ஊருக்கு வராத மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அவளுக்கு முட்டை வெளியேற்றம் (ovulation) நடக்கிறது. அதன்பின் நான்காம் வாரத்தில் மாதவிடாய் வந்துவிடுகிறது. குழந்தை தங்குவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லாத ஏழாவது மற்றும் 21வது நாட்களில் அவர்கள் சந்திக்கிறார்கள். ‘இதனால் தான் குழந்தைப்பேறு இல்லை. உங்கள் ராணுவ ஒழுங்கைச் சற்றே மாற்றி, இரண்டாம் வாரமும் நான்காம் வாரமும் ஊருக்கு வந்து போகுமாறு அமைத்துக் கொள்ளுங்கள். மூன்று மாதம் கழித்து வாருங்கள்' என்று அவர்களிடம் சொன்னேன். ஒற்றை மாத்திரை கூட எழுதாமல், ஏதோ தேதி, நாள் என்று கணக்குப் போடுகிறாரே, இவர் என்ன ஜோசியரா என்று வினோதமாக என்னைப் பார்த்துக் கொண்டே சென்றனர் இருவரும். இரண்டாம் மாதமே இரட்டைக் கோடுகள் வந்து விட்ட பிரக்னன்சி கிட்டை முகம் மலர எடுத்துக்கொண்டு, கூடவே ஒரு கிலோ இனிப்புடன் வந்தாள் அந்தப் பெண்...!

மார்ச், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com