ஒரு குழந்தைக்கு ஐந்து பெற்றோர் வரை இருப்பதற்கு சாத்தியம் உள்ளது எப்படி?

ஒரு குழந்தைக்கு ஐந்து பெற்றோர் வரை இருப்பதற்கு சாத்தியம் உள்ளது எப்படி?

1992 ஆம் ஆண்டு, ஐ.சி.எஸ்.ஐ (ICSI) என்ற இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் விந்து ஊசி மூலம் கருத்தரிக்கும் முறை இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், ஆண்களுக்கு ஒன்றிரண்டு விந்தணுக்கள் இருந்தால் கூட அவற்றை எடுத்து கருமுட்டைக்குள் செலுத்தி, கருத்தரிக்க வைக்க முடியும். இதுவே இயல்பாக நடக்க வேண்டும் என்றால் ஆண்களுக்கு கோடிக்கணக்கான விந்தணுக்கள் தேவைப்படும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை முறை கருத்தரிப்பு தொடர்பான விளம்பரங்கள், ஊடகங்களுக்கு நாங்கள் அளித்த பேட்டிகளைப் பார்த்துவிட்டு, எண்பதுகளில் குழந்தை பெற்றெடுக்க முடியாமல் போன பெண்கள் தங்களுடைய ஐம்பத்தைந்து - அறுபது வயதுகளில் எங்களிடம் சிகிச்சை பெற்று குழந்தை பெற்றுள்ளனர்.

அப்படித்தான். பத்தாண்டுகளுக்கு முன்பு, ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர், குழந்தையின்மைக்காக சிகிச்சை பெறுவதற்காக என்னிடம் வந்தார். அவர் ஒரு வங்கி ஊழியர். வயது ஐம்பத்தாறு. அவருக்கு கருமுட்டை இல்லை என்பதால், இளம் பெண் ஒருவரிடம் கருமுட்டை வாங்கி, அதனுடன் அந்த பெண்ணின் கணவருடைய விந்தணுவை செலுத்தி, கருவாக்கி, கருவை அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்தோம்.

உள்ளே வைத்த மூன்று கருவில், இரண்டு கருத்தரித்து. பிரசவத்தில் இரட்டையர்கள் பிறந்தனர். இந்த சம்பவம் அப்போது வியப்பாக பேசப்பட்டது. இவ்வளவு வயதான பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் இரட்டையர்களை பெற்றெடுத்தது உலகத்திலேயே இது தான் இரண்டாவதாகும்.

அவருக்கு நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்றவை இல்லாததால் ஐம்பத்தேழு வயதில் இது சாத்தியமானது.  இரட்டையர்களில் ஒருவருக்கு மருத்துவமனையின் பெயரான ஆகாஷ் என்றும், மற்றொரு குழந்தைக்கு ரிஷிகேஷி என்றும் பெயர் வைத்தார்கள்.

அதேபோல்,  சென்னை தி.நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு பிரசவத்தின் போது அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பிரசவத்தின் போதே  குழந்தை இறந்துவிட்டிருக்கிறது. கர்ப்பப்பையை எடுத்தால் தான்  அவர் உயிர் பிழைப்பார் என்பதால், மருத்துவர்கள் கர்ப்பப் பையை எடுத்துவிட்டிருக்கின்றனர். அது அவருக்கு முதல் பிரசவம்.

இந்த சம்பவம் நடந்த சில ஆண்டுகள் கழித்து, அந்தப் பெண் சிகிச்சை பெறுவதற்காக என்னிடம் வந்தார். அவருடைய கணவர் ஆரோக்கியமாக இருந்தார். ஆனால் மனைவிக்கு கர்ப்பப்பை இல்லை.

அந்தப் பெண்ணுக்கு அவருடைய அம்மா வாடகைத் தாயாக இருக்கலாம் என முடிவெடுத்தோம்.  ஆனால், அவருக்கு கர்ப்பப்பை சுருங்கியிருந்தது வயது மூப்பின் காரணமாக. கொஞ்சம் கொஞ்சமாக அவரை தயார்ப்படுத்தி எல்லாவிதமான பரிசோதனைகளையும் எடுத்தோம். அவர் தகுதியானவுடன்,  நிறையக் கருமுட்டைகளை உருவாக்கி, அவற்றை கணவரின் விந்தணுவுடன் சேர்த்து,  கருவாக்கி, நான்கைந்து நாட்கள் கழித்து, அந்த அம்மாவின் கர்ப்பப்பையில் வைத்தோம். அவர்  எந்த பிரச்சனையும் இல்லாமல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். எல்லா ஊடகங்களிலும் இது செய்தியாக வெளிவந்தது. “பாட்டி பெற்றெடுத்து பேத்தி' என்றெல்லாம் தலைப்பு வைத்தார்கள்.

ஒரு குழந்தைக்கு ஐந்து பெற்றோர்கள் வரை இருப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. மேலே கூறிய சம்பவத்தில் மூன்று பெற்றோர்கள் உள்ளனர்.

உலக அழகி ஒருவரின் கருமுட்டையையும், நோபல் பரிசு பெற்ற ஆண் ஒருவரின் விந்தணுவையும் சேர்த்து, ஒரு வாடகைத் தாயின் கர்ப்பப்பைக்குள் வைத்து அவற்றை வளர்க்க முடியும்.  குழந்தை பிறந்ததும்,  அதை மற்றொருவருக்கு கொடுக்கலாம். அந்த குழந்தையை வேறு ஒரு தம்பதி வளர்க்கலாம். விஞ்ஞானம் வளர்ந்ததால் இதெல்லாம்  இன்று சாத்தியமாகியிருக்கிறது.

அதேபோல், நெய் வேலியை சேர்ந்த ஸ்ரீதர், அபிராமி ஆகியோருக்கு  1995இல் திருமணம் நடந்துள்ளது. திருமணமான முதல் மாதமே அபிராமி கருத்தரித்துள்ளார். நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த போது விபத்தில் சிக்கி அபிராமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், தொடர்ந்து 15 முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

அந்த தம்பதிகள் கடந்த 2014ஆம் ஆண்டு எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.15 முறை கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு 16வது முறையாக கருவுற்று, நிறைமாத குழந்தையை பெற்றெடுத்தது மிகப்பெரிய சாதனை.

நான்கு சதவீத தம்பதிகள் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உடலுறவை  சீராக வைத்துக் கொள்வது, வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு எண்பது சதவீதம் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை உடலுறவு வைத்துக்கொண்டால் பதினேழு சதவீதம் உள்ளது. உடலுறவிற்குப் பின் தொண்ணூற்று ஐந்து சதவீத விந்தணுக்கள் வெளியில் வந்துவிடும். மீதமுள்ள ஐந்து சதவீத விந்தணுக்கள் தான் கர்ப்பப்பைக்குள் செல்லும். இந்த விந்தணுக்களில் ஒன்று தான் கருவாக உருவாகிறது.

அதேபோல்,  இன்று நூறு பேர் திருமணம் செய்கிறார்கள் என்றால், ஒரு வருட முடிவில் பதினைந்து சதவீத தம்பதிகள் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். இதற்கு ஆண்கள் காரணமாக அமைவது நாற்பது சதவீதமாகும். ஆண்களிடம் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்,  அல்லது இல்லாமல் இருக்கலாம்.  விந்தணு ஊர்ந்து போகிற தன்மை குறைவாக இருக்கலாம். உருச்சிதைவான அணுக்கள்  இருக்கலாம். அதற்கு காரணம் தொடர்ந்து சுடு தண்ணீரில் குளிப்பது, இறுக்கமான உள்ளாடைகளை அணிவது, புகை பிடிப்பது, மது குடிப்பது, நீண்ட நேரம் மடிக்கணினியை மடியில் வைத்து வேலை பார்ப்பது, செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருப்பது போன்றவற்றால் விந்தணுக்கள் குறையலாம். அதேபோல் உடல்நிலை சரியில்லை என்றாலும் விந்தணு குறையலாம்.  புகைப் பிடிப்பதும், மது பழக்கமும் விந்தணுவை நேரடியாக பாதிக்கும்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு. எட்டு மணி நேர தூக்கம், உடல் உழைப்பு, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, துரித உணவுகளைத் தவிர்ப்பது, காய்கறி, பழங்கள் நிறைய சாப்பிடுவது, பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டாலே போதும் விந்தணுவை அதிகரிக்கலாம்.

மார்ச், 2022

சந்திப்பு: தா.பிரகாஷ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com