பசியை ஆத்துறவங்களைக் கையெடுத்துக் கும்பிடலாம்!

பசியை ஆத்துறவங்களைக் கையெடுத்துக் கும்பிடலாம்!

ஹோட்டல்களில் பணியாற்றும் சர்வர்களைப் பற்றி புதுமைப்பித்தன் சின்னஞ்சிறுகதை ஒன்றை எழுதியிருப்பார். இயந்திரமாக இருந்து இடையில் மனிதனாகும் கணங்களைச் சுருக்கமாகச் சொல்லியிருப்பார்.

அம்மாதிரி நேரடி அனுபவத்தில் எத்தனை அனுபவங்கள்?

பத்து வயதிருக்கும். தோசை கெட்டிச்சட்டினியுடன் ஹோட்டலில் போய்ச் சாப்பிட அவ்வளவு ஆசை. ஒரு தோசை அப்போது 35 பைசா. அம்மாவிடம் அரித்து 35 காசுக்களை வாங்கி தெற்குவாசலில் இருந்த ஹோட்டலில் தோசை ஆர்டர் பண்ணும்போதே, சர்வர் நான் உட்கார்ந்திருக்கும் விதத்தைப் பார்த்துச் சந்தேகமாகக் கேட்டார்.

‘‘கையிலே காசு வைச்சிருக்கீல்லே?''

தலையாட்டியதும், முறுகலான தோசை வந்தபோது, முகம் பரவசமான விதத்தைப் பார்த்து  சர்வரே  கெட்டிச்சட்னியைக் கொண்டு வந்து வைத்தார். மெதுவாகத் தோசையைப் பிய்த்து, வெங்காய சாம்பார், சட்னியில் தோய்த்து  சாப்பிடும்போது, என்னுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தபோது, கூச்சமாக இருந்தது.

பில்லை எழுதிக் கொண்டு வந்து எண்ணி வைத்திருந்த 35 காசுகளைக் கொடுத்தபோது தோளில் தட்டிச் சொன்னார் அவர்.

‘‘அடுத்தமுறை வர்றப்போ காசு கூடக் கொண்டுவாப்பா.. நல்லாச் சாப்பிடலாம்லே'' கேட்டபோதுதொலைதூரக் கிராமத்தில் இருந்து வெண்கலச்சட்டியில் விரால்மீன் குழம்பைப் பதவிசாய் எடுத்துவந்து, எங்கள் வீட்டுக்குள் வந்து பரிமாறி நான் அரக்கப் பரக்கச் சாப்பிடுகிற போது, என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் நாகம்மாள் அத்தையைப் பார்க்கிற மாதிரி இருந்தது.

உணவினால் மட்டும் சாப்பாடு ருசிகரமானதாக மாறிவிடுவதில்லை, பரிமாறுகிறவர்களாலும் அது கூடுதலாகப் பரிமளிக்கிறது என்பது புது அனுபவமாகப் புரிந்தது.

மலைவாழ்மக்கள் உபசரிப்பில் காட்டும் பிரியமே தனி.

முதுமலைக்காடுகளுக்குள் பலமுறை பச்சை வாசனையை நுகர்ந்தபடி, கால்களில் வளர்ந்த புற்கள் இடறியபடி சென்றிருக்கிறேன். பலாப் பழத்தைக் குவியலாகக் கொடுத்திருக்கிறார்கள். பளிச்சென்று வெள்ளையாக இருக்கும் மூங்கில் குருத்தைச் சிறுதுண்டுகளாக்கித் தந்திருக்கிறார்கள். அரைப்படி அளவுக்குத் தேன்கூட்டின் செதில்கள் ஒட்டிய தித்திப்பான தேனைத் தந்திருக்கிறார்கள். அவ்வளவு இயற்கையான உணவைக் கொடுத்துவிட்டு, பேசாமல் நாம் உணவருந்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். உணவை வர்த்தகமாகப் பார்க்காத மனசு அவர்களுடையது. பணம் கொடுத்த போது வாங்க மறுத்திருக்கிறார்கள். 

‘‘நாம் பதிலுக்கு நாளைக்கு இவர்களுக்கு என்ன பண்ணப் போகிறோம்?'' உணவு அமிர்தம் போல உடலுக்குள் இறங்கும்போது, யோசித்திருக்கிறேன். அவர்கள் அப்படியில்லை. அந்தந்தக் கண உபசரிப்போடு வாழ்வதற்குப் பழகியிருக்கிறார்கள்.

காடுகளின் அடர்ந்த மௌனத்திற்கிடையில் பசுஞ்செடிகளைப் போல அப்படி வாழ்வதற்கு எத்தனை பெரிய மனம் வேண்டும்?

கொடைக்கானலில் ஓராண்டு வரை ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபோது, நானும் இரண்டு நண்பர்களுமாக மலைச்சரிவில் இருக்கிற ஒரு மெஸ்ஸில் சாப்பிடப்போவோம். மாதக்கணக்கு. தினமும் ஏதாவது ஒரு அசைவம். மீனோ, கோழியோ இருக்கும். ஆவி பறக்கப் பரிமாறுவதிலும், பசித்துக் கூடுதலாகச் சாப்பிடுவதும்போதோ, எந்தப் பாகுபாடும் காட்டாமல், சிரித்த முகத்துடன் வருடக் கணக்கில் பசியாற்றிய முகங்களுக்கும், அங்கு பொதுவாக நிரம்பியிருக்கும் குளிருக்கும் சம்பந்தம் இருக்குமோ என்று நாங்கள் அளவுக்கு அன்பு காட்டியிருக்கிறார்கள் பரிமாறுகிறவர்கள்.

சென்னைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, தங்கியிருந்த திருவல்லிக்கேணியைச் சுற்றிலும் மெஸ்கள். அவற்றின் தனிச்சுவையறிந்து எனக்கு அறிமுகப்படுத்தியவர் மூத்த பத்திரிகையாளரான சின்னக்குத்தூசி.

‘' என்ன..சௌக்கியமா இருக்கீங்களா?''

சின்னக்குத்தூசி சில மெஸ்ஸூக்குள் நுழைந்ததுமே துவங்குகிற விசாரிப்புகள், கவனிப்பில் இன்னும் பரிமளிக்கும். ‘‘இன்னைக்கு வத்தல் குழம்பு கன கச்சிதமா இருக்கு.. புளிப்பு நாக்கிலே ஒட்டிக்கிற மாதிரி இருக்கு'' சரியாக வத்தல் குழம்பை சர்வர் பரிமாறி ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டதும், அதன் ருசி மாறாமல் சொல்வார் குத்தூசி.

பரிமாறுகிறவருக்கு முகமெல்லாம் மலர்ந்திருக்கும். வதக்கிய பருப்பிலான துவையலை வைத்ததும், இன்னொரு ‘கமெண்ட்டுக்கு'க் கூடுதல் ஒரு கரண்டி துவையல் இடம் பெயரும்.

‘‘வரட்டுங்களா?'' பரிமாறுகிறவரிடம் அக்கறையாகச் சொல்லிவிட்டு, ஹோட்டலை விட்டு வந்து சாலையில் நடக்க ஆரம்பிக்கும்போது சொல்வார் குத்தூசி.

‘‘பரிமாறுவங்க எல்லாம் மனுஷங்க தானே! ஒரு நாளைக்கு எத்தனை பேரைப் பார்க்கிறாங்க..பரிமார்றாங்க.. சோத்துச் சட்டியோட சூட்டையும், கனத்தையும் தாங்கிப் பரிமார்றது லேசில்லை..அவங்களைச் சொந்தக் காரங்க மாதிரி நினைச்சுப் பேசுங்க.. அவங்க பரிமாறுவதிலும் அது தெரியும்'' எளிய சூத்திரத்தைப்போலச் சொல்லிக் கொடுத்தார்  சின்னக்குத்தூசி.

நண்பர் பிரபஞ்சனும், நானும் திருவல்லிக் கேணியிலுள்ள சில மெஸ்களுக்குப்போகும்போதும், இதே மாதிரிப் பேசுவார் பிரபஞ்சன். அவருக்கென்று தனிக்கவனிப்பு. தனி உபசரிப்பு எல்லாம் நிறைந்திருக்கும்.

‘‘பாருங்க.. நம்ம இலையிலே காய்கறி காலியானதும் மறு ரவுண்ட் வரும்..பாருங்க'' பிரபஞ்சன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எங்களுக்கு முன்னிருக்கிற வாழையிலை நிறையும் மறுபடியும். வெளிவரும்போது, சில சமயங்களில் கை மறைவாக ‘டிப்ஸ்' கொடுத்துவிட்டு வருவார்.

வெளியே வந்து மெஸ்ஸூக்கு அருகில் இருக்கிற வெற்றிலை பாக்குக் கடையில் சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தபடி ‘‘ யார் யார் நம்ம பசியை ஆத்துறாங்களோ அவங்களைக் கையெடுத்துக் கும்பிடலாம், காசு கொடுத்தாலும்'' என்று கடைசி வரியை அழுத்தம் கொடுத்துச் சொல்வார் பிரபஞ்சன்.

புது ஐநூறு நோட்டுகள் அண்மையில் அறிமுகமான நேரம். சென்னை. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஹோட்டல். மாலை நேரத்தில் நானும், நண்பர் ஒருவரும் டிபன் சாப்பிட்டுவிட்டு, பில் வந்தது. பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து வைத்தேன். நகர்ந்தார் சர்வர்.

போன சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.

‘‘சார்.. ரெண்டு ஐநூறு ரூபா ஒட்டிக்கிட்டி இருந்திருக்கு.. இந்தாங்க சார்'' திருப்பித் தந்தார் மீதிப்பணத்தை.

‘‘பரவால்லேப்பா.. திருப்பிக் கொடுத்துருக்கீங்க..எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்கப்பா''- சொல்லி, ஐம்பது ரூபாயை நண்பர் டிப்ஸாகக் கொடுத்ததும், இளைஞரான அந்த சர்வர் பவ்யமாகச் சொன்னார்.

‘‘வேணாம் சார்..அப்படி எந்தப் பணமும் நமக்கு வர வேண்டியதில்லை சார்.. இவ்வளவு டிப்ஸூம் நீங்க அதுக்காக கொடுக்க வேணாம்..பத்து ரூபா போதும் சார்..''

திருப்பி நாற்பது ரூபாய்களைத் தட்டில் வைத்தார் அவர்.

ஆகஸ்ட், 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com