புன்னகைக்கும் பணம்!

புன்னகைக்கும் பணம்!

...புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில் தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்? காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே - இந்த வரிகள், செல்வந்தர் பட்டினத்தாரை துறவியாக்கின.

நிறையப் பணத்துடன் ஓர் ஏழையின் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் - பாப்லோ பிகாஸோ

அறனீனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து

தீதின்றி வந்த பொருள். (குறள்-754)

இந்த மூன்று விஷயங்களையும் தொடர்ந்து படித்தால், எது சரியென்று குழப்பம் வரலாம். கொரோனா மற்றும் ஊரடங்கு காலகட்டம் அநேகரை பணத்தைப் பற்றி யோசிக்க வைத்துள்ளது.

படிப்பு சம்பந்தமான விஷயங்களில் கில்லியாக இருக்கும் தமிழ் சமூகம், செல்வத்தைப் பெருக்குவதில் எப்படி?

‘‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து'' என்பது போன்ற விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டு, செல்வம் பற்றிய உரையாடல்கள் தமிழ் சமூகத்தில் குறைவு தான் என்றொரு விமர்சனம் உண்டு.

குடும்பங்கள் பணத்தை எப்படிக் கையாள்கின்றன?

திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம், களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் பேரூராட்சி. 1877 மார்ச் 22இல் திருக்குறுங்குடியில் பிறந்த சுந்தரத்தை, வக்கீலாக்கி அழகு பார்க்க நினைத்தார், அவரது தந்தை. சுந்தரத்தின் மனம் தொழில் தொடங்க வேண்டுமென நினைத்தது. கல்லூரிப் படிப்பிற்குப் பின் திருச்சியிலும் தஞ்சையிலும் ரயில்வே குமாஸ்தாவாக சில காலம் வேலை பார்த்தார், சுந்தரம். தந்தையின் மறைவிற்குப் பின் தனது பங்காகக் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு மர வியாபாரம் செய்தார். இருபத்தைந்து ஆயிரம் ரூபாய், நான்கு வருடத்தில் ஐம்பதாயிரம் ஆனது.

ஐம்பதாயிரத்தைத் தனது முதலீடாக கொண்டு, கான்பகதூர் காதர் நவாஸ்கான் என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழித்தடங்களில் பேருந்து சேவையைத் தொடங்கினார். வருடம் 1911. சுந்தரத்தின் மகன்கள் ஐந்து பேர்.  இதில் துரைசாமி என்பவர்,  சிறு வயதில் தவறிவிட,  மற்றவர்கள் வியாபாரத்தில் பங்கு கொண்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தோற்றுவித்து,  ஐந்து தலைமுறையில் மிகப் பெரிய உச்சத்தை அடைந்தனர். பணம் பல்கிப் பெருகியது.

ஐம்பதாயிரத்தில் ஆரம்பித்த வியாபாரம், ஐம்பதாயிரம் கோடிகளைத் தாண்டி நாளாகிவிட்டது. டி.வி.எஸ். குடும்பம் பணத்தைக் கையாண்ட விதத்தின் சுருக்கம் அது.

டி.வி.எஸ். நிறுவனம் ஆரம்பிப்பதற்கு ஓராண்டிற்கு முன்பு பிறந்தவர், எம்.கே.டி.பாகவதர். தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார். எம்.கே.டி. உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரு முறை, ஈரோடு ரயில் நிலையத்திற்குள் எந்த ரயிலும் போக முடியாதபடி பதட்டம். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர். எர்ணாகுளத்தில் கச்சேரி செய்துவிட்டு கொச்சி எக்ஸ்பிரஸில் வரும் எம்.கே.தியாகராஜ பாகவதரைப் பார்க்கத்தான் மக்கள் அப்படித் திரண்டிருந்தனர். கொச்சி எக்ஸ்பிரஸ், சிரமப்பட்டு ஈரோடு ரயில் நிலையத்துக்குள் நுழைய, அவரைப் பார்த்துவிட்டுத்தான், கூட்டம் கலைந்தது.

எம்.கே.டி-யின் வீட்டில் பல தங்கத் தட்டுகள் இருந்தன. அவருக்கும், வீட்டிற்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கும் தங்கத் தட்டிலே சாப்பாடு பரிமாறப்பட்டது. எம்.கே.டியின் ஆஸ்தான பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்ட போது, அவருக்கு ஒரு தங்கத் தட்டைக் கொடுத்து உதவினார், பாகவதர். லட்சுமி காந்தன் கொலை வழக்கிலிருந்து தான் விடுதலை பெறுவதற்குக் காரணமாக இருந்த வழக்குரைஞர் எத்திராஜுக்கு ஒரு தங்கத் தட்டைக் கொடுத்து நன்றி சொன்னார், பாகவதர்.

தங்கத்தட்டில் சாப்பிட்டு வாழ்ந்த எம்.கே.டி.பாகவதரின் கடைசி காலம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. ஆகஸ்ட் 2010இல் பாகவதரின் மகள் வயிற்றுப் பேத்தி மீனா வறுமையில் வாடுவதை அறிந்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், ஐம்பதாயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கியது. இது, பணத்தை எப்படிக் கையாளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டான மற்றொரு குடும்பத்தின் கதை.

வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைத்துவிட்டுப் போனால், அவர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் என்பது, பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

எந்தப் பின்புலமோ, பெரிய கல்வியறிவோ இல்லாமல் தொழில் தொடங்கிய திருபாய் அம்பானி, ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தார். உயில் ஏதும் எழுதாமல் 2002-இல் அவர் இறந்து போனதும், அம்பானியின் வாரிசுகளான முகேஷ் மற்றும் அனிலுக்கிடையில் பங்கு பிரிப்பதில் மிகப் பெரிய யுத்தம் நடந்தது. அம்மா கோகிலாபென்  தலையீட்டில் கம்பெனிகளைப் பிரித்தனர். 2006ஆம் வருடத்தில் பாகப் பிரிவினை நடந்த போது முகேஷ் அம்பானியின் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.96,668 கோடியாகவும், அனில் அம்பானியின் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூபாய்.56,600 கோடியாகவும் இருந்தது.

ஜூன் 2021இன் நிலவரப்படி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.13,37,496 கோடிகள். அனிலின் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.7,866 கோடிகள்.

அனிலுக்கு எதிராக அவரை திவாலானதாக அறிவித்து கடன்களை வசூலிக்க ஸ்டேட் வங்கி முயலும் அளவுக்கு நிலை மோசம்.

சரியாகக் கையாளத் தெரியாத வாரிசுகளிடம் எவ்வளவு கொடுத்தாலும் காலி பண்ணி விடுவதற்கான சாத்தியம் எப்போதும் உண்டு.

பணத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு பத்து வார்த்தைகளைப் புரிந்து கொண்டால் போதும்.

1. பொருளாதார சுதந்தரம் (Financial Freedom)

  ‘‘பணம் என்பது என்ன? காலையில் எழுந்து இரவில் படுக்கைக்குச் செல்லும்வரைக்கும் அவன் தனக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்ய முடியுமென்றால், அவன் வெற்றி பெற்றவன் என்று அர்த்தம்'' என்கிற பாப் டைலன் வார்த்தைகள்தான், பணம் மனிதனுக்குத் தரும் சுதந்தரம்.

2. சொத்தும் கடன்பொறுப்புகளும் (Assets - Liability)

  ‘‘சொத்துகள் என்பவை உங்கள் பாக்கெட்டில் பணத்தைச் சேர்க்கின்றன. கடன்பொறுப்புகளோ உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துவிடுகின்றன'' என்பது, ராபர்ட் கிவோஸ்கி தரும் விளக்கம். பலர் தங்கள் சொத்து என்று நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் கடன்பொறுப்புகள் (Liability) ஆகும். இந்த அடிப்படை புரியும்போது முதலீடு சரியான இடத்தில் செய்யப்படும்.

3. பணத்தின் கூட்டு சக்தி (Compounding)

ஒரு அரசனை இக்கட்டான சூழலிலிருந்து மீண்டு வர, வழிபோக்கன் உதவினான். மகிழ்ந்த அரசன் ‘உனக்கு என்ன சன்மானம் வேண்டும்?' என்று கேட்டானாம். ‘உங்கள் விருப்பம்' என வழிப்போக்கன் சொல்ல,‘உன் விருப்பத்தைத் தயக்கமின்றி கேள்' என்றான், மன்னன்.

வழிப்போக்கன் ஒரு  சதுரங்கப் பலகையை கொண்டு வரச் சொன்னான். அதில் முதல் கட்டத்தில் ஒரு நெல்மணி வைக்கச் சொன்னான். அடுத்த கட்டத்தில் முதல் கட்டத்தை விட இரண்டு மடங்கு, அப்படியே கடைசி கட்டம் வரை இரட்டிப்பாக வேண்டுமென்றான். இவ்வளவுதானா? என்று அரசன் அதிர்ந்து சிரித்தான்.

அவன் வேண்டுகோள் படி ஒரு நெல்மணியில் தொடங்கி இரண்டு, நான்கு என்று வைக்கப்பட்டு வந்தன. பாதியை நெருங்கும் போது அரசன் தன் தவறை உணர்ந்தான். இறுதியில் ராஜ்ஜியத்தை இழந்தான். பணம் பெறுவதற்கான அடிப்படைச் சூத்திரம் பெருக்குதல்தான். 153 ஆண்டு கூட்டு சக்தி (Compound) சூத்திரத்தின் அடிப்படை தான், அசுரத்தனமாக வளர்ந்து நிற்கும் டாடா குழுமம்.

4. எதிர்பாராதது:

எதிர்பாராத செலவினங்களை எதிர்பார்த்துக் கையாளுவது செல்வம் சேர்ப்பதன் முக்கிய அம்சம். காப்பீடு (Insurance), சேமிப்பு (Reserve), புழக்கத்தில் இருக்கும் பணம் (Liquidity) ஆகிய மூன்று பதங்கள், எதிர்பாராத விஷயங்களைக் கையாள உதவும் அஸ்திரங்கள்.

5. கணவன் - மனைவி

குடும்பத்திற்குள் பிரச்னையின் ஊற்றுக்கண்ணாகப் பணம் பல முறை இருக்கிறது. கணவன் மனைவி இணைந்து, குடும்பத்தை ஒரு சிறு நிறுவனத்தை நடத்தும் அணுகுமுறையோடு நடத்த வேண்டும். இருவருக்கும் தனித்தனியே வங்கிக் கணக்கு இருந்தாலும், மற்றொரு  கூட்டுக் கணக்கு ஆரம்பித்து அதில் தேவையான பணத்தைப் போட்டு நிர்வகிக்க வேண்டும். வருவாய், செலவு, மிச்சம்/லாபம் என்று நிறுவன ஒழுங்கோடு நடத்தும்போது, செல்வம் பெருகும்.

6. தேவையற்றது

‘‘தேவையற்ற பொருட்களை நீங்கள் வாங்கினால், விரைவில் தேவையான பொருட்களை விற்க நேரிடும்'' என்கிற வாரன் பஃப்பெட்டின் வார்த்தைகளை அடிக்கடி ஞாபகம் வைப்பது அவசியம்.

7. வாரிசுகள்

பணம் அப்பா/அம்மாவின் கைப்பைக்குள் எந்த மாதிரியான உழைப்பிற்குப் பின் வருகிறது என்பதை பிள்ளைகள் தெரிந்திருப்பது அவசியம். பிள்ளைகளை விளையாட்டு சாமான் கடையிலிருந்து துணிக்கடை வரை, எங்கு அழைத்துப் போனாலும் பட்ஜெட்டை கூறுங்கள். அதற்குள் அவர்களுக்குத் தேவையானதை வாங்கப் பழக்குங்கள். பள்ளிக்கூடப் பாடங்களை விட, பணம் பற்றிய பாடங்கள் அவர்களது வாழ்க்கைக்கு மிக உதவும். ‘ பள்ளிப் படிப்பு, வாழ்வதற்கு உதவும். வாழ்க்கைக் கல்வி, செல்வம் குவிக்க உதவும்!'

- ஜிம் ரோன்

8. முதலீடு

பணம் ஈட்டும் விதத்தின் அடிப்படையில், மனிதர்களை சம்பளம் வாங்குபவர்கள், தொழில் செய்கிறவர்கள் (டாக்டர், நடிகர், வழக்குரைஞர்), முதலீட்டாளர், தொழில் முனைவோர் என்று நான்காகப் பிரிக்கலாம். ஆனால் நீங்கள் எதைச் செய்தாலும் கூடுதலாக முதலீட்டாளராக இருக்கலாம். வருடத்திற்கு 18 சதவீதம் வருவாய், நான்கு ஆண்டில் பணம் இரட்டிப்பாகும்  வங்கியில் வைத்திருந்தால் 12 வருடத்தில் பணம் இரட்டிப்பாகும்.

An investment in knowledge pays the best interest - Benjamin Franklin

9. ஓய்வு

பணம் பல வேலைகளில் வந்து கொட்டும் போது, இது நிரந்தரமாக இருக்கப் போகிறது என்று மனம் நம்பும். அதற்கேற்றாற்போல் நம் நடவடிக்கைகளும் இருக்கும். ஆனால், பண வரத்து நின்று போகும் நாட்களுக்கும், உழைக்க முடியாமல் போகும் காலத்திற்கும் தயாராக இருக்கும் யாரும் சிரமப்பட வேண்டியிருக்காது.

10. ஏன் பணம்?

‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு' (குறள் - 752)

இந்தக் குறள் ஒன்றே போதுமானது நாம் ஏன் தேவையான பணத்தைச் சேர்க்க வேண்டுமென்பதற்கு.

நம்மிடம் பணம் இல்லையென்ற காரணத்தால் ஏளனம் செய்பவரை என்ன செய்யலாம்? இந்த சம்பவத்தைப் படியுங்கள்.

 ‘ பதினாறு வயதினிலே படம் ரிலீசாகி இரண்டாவது வாரம். ஓகோன்னு போய்க்கிட்டிருக்கு ...

அந்த டைமில் ஒரு புரொடியூசர் என்கிட்ட வந்தாங்க. ஒரு படம்  எடுக்கிறேன். அதில் இன்னொருத்தர் ஹீரோ. அதில்  ஒரு நல்ல கேரக்டர் இருக்கு. அதில் நீங்க நடிக்கணும்னு சொன்னாங்க. சம்பளம் பத்தாயிரத்தில் இருந்து இருந்து ஸ்டார்ட் பண்ணி ஆறாயிரத்துல வந்து நின்னோம். அவர் ஒப்புக்கிட்டார்.

ஒரு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் குடுங்கன்னு கேட்டேன். அவர், நான் எதுவும் கொண்டு வரல. நாளன்னைக்கு ஷூட்டிங். நான் நாளைக்கே டிரைவரை அனுப்புறேன். அவர் கூட ப்ரொடக்‌ஷன் மானேஜரையும் அனுப்புறேன். அவர் வந்து ஆயிரம் ரூபா குடுத்துருவாங்க. நீங்க மெஷர்மென்ட் எல்லாம் குடுத்திடுங்க என்றார்.

அடுத்த நாள் ப்ரொடக்‌ஷன் மானேஜர் வந்தாங்க, டிரைவரும் வந்தாங்க,' எங்கங்க ஆயிரம் ரூபாய்ன்னு' கேட்டேன். இல்லைங்க.. ஒண்ணும் சொல்லலையேன்னு சொன்னாங்க.

 அப்போ புதுப்பேட்டைலதான் இருந்தேன் எதிரில் ஒரு நாடார் கடை இருந்துச்சு. அங்க தான் போன் இருந்தது. அங்க போய் போன் போட்டுக் கேட்டேன். உடனே புரொடியூசர் லைன்ல வந்தாங்க. ‘என்னங்க, ஆயிரம் ரூபாய் குடுக்கிறேன்னு சொன்னீங்க, குடுக்கலையே எப்படி?'னு கேட்டேன்.

 ‘ஆமாங்க.. நான் மறந்துட்டேன்.  நீங்க  நாளைக்கு ஷூட்டிங் வந்துடுங்க.. மேக்கப் போடுறதுக்கு முன்னாடி, நான் ஆயிரம் ரூபாய் குடுக்குறேன்' என்றார்.

அடுத்த நாள், ஒன்பது மணிக்கு ஷூட்டிங். ஏழு மணிக்கு கார் வரும்னு சொன்னாங்க. எட்டு மணியாச்சு. எட்டரை மணியாச்சு. எட்டேமுக்கால் மணியாச்சு. அப்பதான் கார் வந்துச்சு. சரி, அந்த கார்ல ஏறி ஏ.வி.எம். ஸ்டுடியோக்கு வந்து ஷூட்டிங்க்கு போனேன். அங்கே செட்டுக்கு போறேன். அங்கே போறதுக்கே ஒன்பதரை மணி ஆயிடுச்சு. புரொடக்ஷன் ஆள், ‘ஹீரோ எல்லாம் வந்துட்டாங்க.. சீக்கிரம் மேக் அப் போடுங்க!'ன்னு சொன்னார்.  நான், ‘என்னங்க, அந்த ஆயிரம் ரூபாய் குடுக்கலயே?'ன்னு சொன்னேன்.

‘இல்லங்க, வந்து நீங்க மேக்அப் போடுங்க.. வந்துருவாங்க!'ன்னார். ‘ ஆயிரம் ரூபாய் குடுத்தாதான் நான் மேக் அப் போடுவேன்!'னு சொல்லிட்டு, நான் நின்னுட்டேன்.

ஒரு பத்தேகால் பத்தரை மணியாச்சு. டக்குன்னு சொல்லி ஒயிட் அம்பாசிடர் கார் ஃபாஸ்ட்டா வந்து நின்னுது. கதவு திறந்து அந்த புரொடியூசர் கீழே இறங்குனாங்க.  கீழ இறங்கிட்டு எடுத்த உடனே,  ‘என்னடா, நீ என்ன பெரிய இவனா? பெரிய ஆர்ட்டிஸ்ட்டா?  பெரிய ஹீரோவா? இப்பதான் வந்திருக்க.. நாலஞ்சு படம் பண்ணிருக்க.. பணம் குடுக்கலன்னா, மேக் அப் போடமாட்டியா? உங்கள மாதிரி  எத்தன பேர் பார்த்திருக்கேன் . ரோட்டிலே அலைவீங்கடா, நீங்களெல்லாம்.. உனக்கு இந்தப் படத்தில்  கேரக்டர் கிடையாது, ஒண்ணும் கிடையாது.. போடா!' என்றார், கோபமாக.

‘ சரி, ஓகே. கார் குடுங்க, வீட்டுக்குப் போகணும்!'னு சொன்னேன்.

 ‘காரெல்லாம் கிடையாது. நடந்தே போ!'ன்னு சொன்னாரு.

என் கிட்ட பணம் இல்ல. நடந்தே போகணும், ஏ.வி.எம். ஸ்டூடியோவிலிருந்து அப்படியே நடந்து வரேன்.

பதினாறு வயதினிலே படத்துக்கு இரண்டாவது வாரம்.  இது எப்படி இருக்கு? அப்படின்னு வார்த்தைகளைப் போட்டு போஸ்டர் எல்லாம் ஒட்டி இருக்காங்க.  நடந்து போறவங்க, பஸ்லே போறவங்க எல்லாம் இது எப்படி இருக்குன்னு சொல்றாங்க.  எனக்கு  பின்னாலே நாலஞ்சு பேரு இது எப்படி இருக்குன்னு சொல்லிகிட்டு வராங்க.

அப்போ என் மனசுல, இதே கோடம்பாக்கம் ரோடுல ஃபாரின் வண்டி எடுத்துக்கிட்டு அதுல கால் மேல கால் போட்டு ஒக்காந்துகிட்டு இதே ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்குள்ள போகலன்னா, நான் ரஜினிகாந்த் இல்ல.. அப்டின்னு ஓடுது...  இரண்டரை வருஷம் கழிச்சு, ஏ.வி.எம். செட்டியார் வச்சிருந்த இத்தாலியன் ஃபியட் வண்டியை  நாலேகால் லட்சத் துக்கு வாங்குனேன். புதுப்பேட்டை தெருவுல வண்டி நிக்கவைக்கறதுக்கே இடம் கிடையாது. அங்க நிக்க வச்சிட்டு,  என் ஃபிரண்ட் முரளி  கேக்கிறாரு,  ‘என்னப்பா, டிரைவர் ... இல்லையா?'ன்னு. நான், ‘இண்டியன் டிரைவர் வேண்டாம் .. ஃபாரின் காருன்னா, ஃபாரின் டிரைவர் தான் வேணும்!'னு சொல்லிட்டேன்.

ஒரு பத்து நாள் ஆச்சு... பதினஞ்சு நாள் ஆச்சு... அதுக்கப்புறம் ஒரு ஃபாரின் டிரைவரைக்  கொண்டுவந்தாங்க. அவர் பேரு ராபின்சன்.  சிக்ஸ் ஃபீட் ஆளு. கூலிங்கிளாஸ், யூனிபார்ம் தொப்பி போட்டுகிட்டு வந்தாரு..  பின் சீட்ல அப்படி உட்கார்ந்து, வுடுறா வண்டிய ஏ.வி.எம்முக்கு. அந்த புரொடியூசர் வண்டி எங்க நிக்குமோ அதே ஃப்ளோர்.  அங்கேயே அந்த வண்டிய நிக்க வச்சு கீழே இறங்கி 555 சிகரெட் . சும்மா வண்டி மேல கைய வச்சுட்டு இரண்டு சிகரெட்...

அங்க  என்னையைப் பார்த்து யாரோ கவர்னர் வந்துட்டாருன்னு நினைச்சுட்டாங்க'

தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய சம்பவம் இது. ரஜினியின் செய்கைக்கான வழிமுறையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர்

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

(குறள் - 759) என்ற குறளில் எழுதியுள்ளார்.

செல்வம் முக்கியமானது தான், ஆனால் பணம் மட்டுமே எல்லாம் ஆகி விட முடியாது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

‘பணம் என்பது நல்ல நாயை வாங்கித்தரும். ஆனால், அதன் வாலை ஆட்டவைக்காது' என்ற ஜோஷ் ஃபில்லிங்ஸின் வரிகளை மறக்காதிருங்கள்!

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்

எச்சரிக்கை: பின் வரும் பக்கங்களில் பணம் பற்றிய  பலரது கட்டுரைகள், கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில கடைப்பிடிக்கக் கூடாத கருத்துகளும் அடக்கம்.

ஜூலை, 2021 அந்திமழை இதழ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com