ரசனை எனும் உணவு

ரசனை எனும் உணவு

முள்ளரும்பு மரங்கள் - 5

எ ன்னடா நடக்குது இங்கே? இந்தச் சேச்சிக்கு என்ன கண்பார்வையே இல்லியா....?'' ஆதங்கத்துடன் ஒருவருக்-கொருவர் புலம்பிக்கொண்டனர் அங்குள்ள இளவட்டங்கள்.  நானும் அவர்களில் ஒருவன். எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். எங்களுக்கு அயல் வீட்டுக்காரரான கர்ணன், பேரழகியான ஓமனச் சேச்சியை திருமணம் செய்துகொண்டுவந்தார்! படு வினோதமான முகத்தோற்றம் கொண்ட, திருமண வயதைத் தாண்டி பலகாலமான, சதா  சிடு மூஞ்சியான கர்ணனுக்கு இவ்வளவு அழகான ஒரு பெண்மணி மனைவியாக வருவதா? நாங்கள் ஒட்டுமொத்தமாக மனமுடைந்துபோனோம்.   

கொடுமை அங்கேயும் முடியவில்லை. திருமணமாகி ஒருவாரம் தாண்டும்முன் மனைவியை அடித்துத் துவைக்க ஆரம்பித்தார் கருணையே இல்லாத கர்ணன்! ஓமனச் சேச்சியை அவர் அடிப்பதன் காரணம் தனது உருவம் சார்ந்த தாழ்வுணர்ச்சிதான் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை முதலில் கண்டுபிடித்தவன் நான்தான்.

அவர்களது வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அங்கே உணவு மேசைக்குக் கீழே வைத்திருந்த ஒரு பாறாங்கல்லைப் பார்த்திருக்கிறேன். திருமணம் முடிந்த அடுத்த நாளே அக்கல்லை அங்கு கொண்டுவந்து வைத்தாராம் கர்ணன். மனைவி சமைக்கும் உணவு வகைகளைக் கொஞ்சம் சுவைத்துப் பார்த்தவுடன் அவற்றை வைத்திருக்கும் பீங்கான் பாத்திரத்தை அக்கல்லில் அடித்து உடைப்பார்! பின்னர் பொங்கி எழுந்து மனைவியின் முடியைப் பிடித்து அடித்து நொறுக்குவார். உப்புச்சப்பில்லாத உணவு சமைத்ததற்கான தண்டனை!

கர்ணனைப் பொறுத்தவரையில் ஓமனச் சேச்சி சமைக்கும் உணவை விடச் சப்பையான ஒன்று இவ்வுலகில் எதுவுமே இல்லை. தன்னுடன் சண்டையிட்டு தூரத்திலுள்ள அண்ணனின் வீட்டிற்குப் போய்விட்டிருந்தார் என்றாலும் தனது அம்மா போடுவதைப்போல் ஒரு குவளைக் காப்பி கூட இந்த 'எரணம் கெட்டவளால்' போட முடியவில்லையே என்ற ஆத்திரத்தில்தான் கர்ணன் மனைவியை அடித்து, பாத்திரத்தை உடைத்தார். ஆனால் ஓமனச் சேச்சி அற்புதமாகச் சமைக்கக் கூடியவர் என்பது எனக்குத் தெரிந்திருந்தது.   

வெய்யில் தகிக்கும் கோடைப் பகல்களில் மெலிதாய் நசுக்கிய வடுகப்புளி எலுமிச்சையிலைகளும் கருவேப்பிலைகளும் அழகாய் நறுக்கிய பச்சை மிளகாய்த் துண்டுகளும் மிதக்கும், உப்பும் புளிப்பும் பதமான நீர்மோரை ஓமனச் சேச்சியின் கையிலிருந்து எத்தனை முறை வாங்கிக் குடித்திருக்கிறேன்! இலையடை, கும்புள் ஆப்பம், மத்தி சதச்சு பற்றிச்சது, மசக்கிய கப்பையும் மீன் வற்றிச்சதும் என ஓமனச் சேச்சி சமைத்துச் சாப்பிடத் தந்த பலவகையான கேரள கிராமிய உணவுகள் இன்றும் எனது நினைவில் சுவைக்கின்றன.

ஓமனா ஓர் அழகான பெண்மணி என்பதால் பதின்பருவக் காமம் கலந்த ஓர் ஏக்கம் அவர்மேல் எனக்கு இருந்திருக்கலாம் என்பது உண்மை என்றாலும் அவரது தோற்றப்பொலிவைவிட அந்தச் சமையலின் சுவைதான் இன்றளவும் எனது நினைவில் தேங்கியிருக்கிறது. அபாரமாகச் சமைக்கும் வல்லமை கொண்டிருந்த ஒரு பெண்மணியை சமைக்கவே தெரியாதவள் என்று அடித்துக் கொடுமைப்படுத்திய கர்ணனின் பிரச்னை என்னவாக இருந்திருக்கக் கூடும்?

சிறு வயதிலிருந்தே பலவகையான சமையல்களுக்கு பழக்கப்பட்டிருந்தவன் நான். பாட்டி வீட்டு உணவுகள், நண்பர்களின் வீட்டு உணவுகள் என பல வீட்டுக் கூட்டாஞ்சோற்றைச் சாப்பிட்டு வளர்ந்தவன். எனது அம்மாவும் அப்பாவும் நன்றாகச் சமைக்கக் கூடியவர்கள். கர்ணனின் அம்மா இச்சேயி சமைத்த மிகச் சுமாரான உணவுகள் எனக்கும் பரிச்சயமானவை. அவரது சமையலின் ஒட்டுமொத்தச் சுவையின்மையை பலகாலம் முன்னே உணர்ந்திருந்தேன்.

ஆனால் பிறரின் வீடுகளிலிருந்து பச்சைத் தண்ணீரைக் கூடக் குடிக்காத குணம் படைத்த கர்ணன் அவரது நினைவுகள் தொடங்கும் காலத்திலிருந்தே தனது அம்மா சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தவர். உணவுச் சுவையின் அளவுகோலாக அவருக்கு இருந்தது தனது அம்மாவின் சமையல் மட்டுமே! சிறந்த சுவைகொண்ட உணவுகளைச் சுவையற்றவையாகவும், தனது தாயின்

சக்கைச் சமையலை சுவை மிகுந்ததாகவும் உணரும் அளவிற்குத் தாறுமாறாகத்தான் கர்ணனின் உணவு ரசனை இருந்தது.

------

சென்னையில் அசலான வங்காள நாட்டார் உணவு வகைகள் கிடைக்கும் ஓர் உணவகம் இருந்தது. எழும்பூரில் உள்ள அன்னபூர்ணா என்னும் மிகச்

சிறிய உணவுக்கடை அது. நண்பர் அருணனுடன் ஒருமுறை மதிய உணவிற்கு அங்கு சென்றேன். மாச்சேர் தேலா ஜொல் (கொழுத்த மீன் குழம்பு), கொஷா மாங்க்‌ஷோ (ஆட்டுக்கறி வறுவல் குழம்பு), துயீ மாச் (மீன் ரெட்டை வறுவல்), சோலார் தால் ஃபாத் (நீர்த்த பருப்புக் குழம்பும் சோறும்) என ருசித்துப் புசித்து நான் கட்டு கட்டும்போது திடீரென்று அருணனைக் காணவில்லை! அவ்வுணவுகள் ஏற்படுத்திய குமட்டலினால் வாந்தியெடுக்கப் போயிருந்தார்! வங்க உணவின் முக்கிய செய்பொருளான கடுகு எண்ணெயின் சுவையை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

மேற்கு வங்காளத்திலும் வங்க தேசத்திலும் இருபத்தைந்து கோடிக்கும் அதிகமான மக்கள் விரும்பிச் சாப்பிடும் அந்த உணவு வகைகள் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச்

சேர்ந்த அருணனுக்கு ஒரே கணத்தில் குமட்டலை ஏற்படுத்தியது கடுகு எண்ணெய்! இதை விட அதிகமாகக் குமட்டலை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பழக்கங்கள் கொண்ட கேரளப் பகுதியிலிருந்து வருபவன் நான். ஆனால் உணவுத் தேடல் எனும் ஒன்றே என்னை வங்காள உணவுகளின் ரசிகனாக்கியது.

இந்தத் தேடல் என்பதுதான் இங்கு நிகழ்வதேயில்லை. உலக உணவுகளின் தலைநகரம் என்றழைக்கப்படும் பாரீஸ் நகரில் சென்று இறங்கியுடன் தமிழ்நாட்டு சைவ உணவைத்தேடி ஓடுகிறார்கள் தமிழர்கள்! அதிசயமான அராபிய உணவுகளுடைய வளைகுடா நாடுகளில் காலங்காலமாக வாழ்ந்தும் பழுப்பு நிற உருண்டை அரிசிச்

சோற்றுக்காகவும் தேங்காய் எண்ணெயில் குளிப்பாட்டிய மீன் வறுவலுக்காகவும் ஏங்குகிறார்கள் மலையாளிகள்!

நமது பழக்கத்திற்கும் பரிச்சயத்திற்கும் உள்ளடங்காத எதுவுமே சுவையாக இருக்காது என்பதிலும், ஒருவேளை சுவையாக இருந்தாலும் அது நமக்குச் செரிமானமாகாது என்பதிலும் பெரும்பாலானோருக்கு எந்தச் சந்தேகமுமில்லை!

உணவின்மேலான இந்தச் சுவையும் சுவையின்மையும்தான் மனிதனின் அடிப்படை ரசனையுமே! தங்களது ரசனையைச் சார்ந்திருக்கும் இத்தகைய புரிதல்களுக்கு எதிரான புதிய ஆக்கங்களும் கருத்துகளும் வரும்போது அவன் திணறிப் போகிறான். ஆனால் அந்த ரசனைப் புரிதல்கள் விடுபடமுடியாதவை என்று வெறுமனே அவன் நினைத்து வைத்திருக்கும் வெற்றுப் பழக்கங்கள் மட்டுமே.

உதாரணமாக ஆழ்ந்த கடவுள் பக்தியோடு இருக்கும் ஒருவரிடம் 'கடவுள் என்பது ஒரு கற்பிதம், அப்படி எதுவுமே இல்லை' என்று இன்னொருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். திடீரென்று அங்கு உருவாகும் கோப தாபங்களுக்குக் கடவுளுடன் எந்தத் தொடர்புமே இருக்காது! ‘ஆமாம்.. நீ மட்டும் பெரிய அறிவாளி! பரம்பரை பரம்பரையாகக் கடவுள் பக்தர்களாகயிருக்கும் நானும் எனது தாய்தந்தையரும் முட்டாள்களா என்ன?'' என்கின்ற கடும் கோபம்தான் அந்த பக்தனுக்கு மேலோங்கும்!

புரிந்து வைத்திருப்பவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபடும் கருத்துகளை திறந்த மனத்தோடு பரிசீலிக்க இயலாமல் அவற்றை முன்வைத்தவர் மீது ஒருவகை தனிமனித விரோதத்தை வளர்த்தெடுக்கிறான் மனிதன். அவ்விரோதத்தைத் வெளிப்படுத்த மொழி, பிராந்தியம், சாதி, மதம், இனம், தனிமனித வாழ்க்கை என எதை வேண்டுமானாலும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறான்.

கடந்தகால ஏக்கங்கள்தாம் பலசமயம் மனிதனின் ரசனையைத் தீர்மானிக்கிறது என்பது ஓர் உண்மை. 'நேற்று என்பது மறைந்து விட்டது, நாளையோ கண்ணுக்குத் தெரியாத தொலைவில். ஆதலால் இந்த இரவை மட்டும் கடக்க எனக்கு உதவுங்கள்...' என்கிறார் க்ரிஸ் கிரிஸ்டஃபர்சன் தனது உலகப் புகழ்பெற்ற பாடலில். சென்றகாலம் சென்று விட்டது ஆனால் நாளை நம்முடையது என்பது மற்றுமொரு கருத்து. இந்த இரண்டு கருத்துகளிலும் நேற்று என்பது முடிந்துபோன விஷயம்.

‘இந்தக் கணத்தை நினைத்து மகிழ்வாயிருங்கள். ஏனெனில் இந்தக் கணம்தான் உனது வாழ்க்கையே' என்கிறார் ஒமார் கய்யாம்! ஆனால் 'இந்தக் கணம்' என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே அக்கணமும் அதற்கடுத்த பல கணங்களும் முடிந்து விடுகின்றனவே! நொடிநேரத்தில் பாய்ந்தோடிப் பழையதாகிக் கொண்டேயிருக்கும் காலத்திலிருந்து இந்தக் கணத்தைப் பிடித்து அதில் வாழ்வது எப்படி?

'நடந்தது நடந்து முடிந்தது, ஆகவேண்டியதைப் பார்ப்போம்' என்று வருங்காலத்தைப் பற்றி சிந்திக்கலாம்தான். ஆனால் வருங்காலம் என்று ஒன்று இல்லவே இல்லையே! ஒவ்வொரு நொடியிலும் வருங்காலம் நிகழ்காலமாகி, நிகழ்காலம் கடந்தகாலமாகிக் கொண்டேயிருக்கிறது என்பதால் கடந்தகால ஏக்கங்களிலிருந்து விடுபட்டு ஓடவேண்டும் என்பதில் பொருளில்லை. ஆனால் அந்தக் கடந்தகால ஏக்கம் நமது நிரந்தரச் சுவையாக, ரசனையாக மாறி வாழ்க்கையின் மீதும் கலையின் மீதும் ஒவ்வொருநாளும் வளரவேண்டிய நமது சுவையைச் சீரழிக்கக் கூடாது.  

எனது கடந்தகால ஏக்கங்களின் கிளையொன்றில் கழுத்தில் இறுகிய சேலை விளிம்பில் பிணமாகத் தொங்கியாடுகிறார் ஓமனச் சேச்சி. ரசனையற்ற மனிதருடன் வாழ்வதைவிட தற்கொலைச் சாவு மேலானது என்று அவர் நினைத்தாரா? இல்லை தனது ரசனைக்கு ஒத்துப்போகாதவள் செத்துப்போவது நல்லது என்று கர்ணன் முடிவெடுத்தாரா? இன்றுவரை யாருக்குமே வெளிச்சமில்லை.

(வளரும்...)

டிசம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com