விடாது நடிப்பு!

விடாது நடிப்பு!

இருபத்தைந்து வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருந்தாலும் நான் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான 'மோகமுள்' திரைப்படத்தின் பாபு கேரக்டர்தான் என்வாழ்நாளில் மறக்கமுடியாத கேரக்டர். அந்த நேரத்துல அது எவ்வளவு ஆழமான அழுத்தமான கேரக்டர்னு எனக்குத்தெரியல. ஆனால், அதன் சிறப்பு தெரிந்தபிறகு அது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான, மகிழ்வு தரக்கூடிய கேரக்டராக மனசுல நிறைஞ்சிருக்கு. அடுத்து, 'பதினாறு' திரைப்படத்தில் நான் நடித்த கேரக்டரும் அழகான, அழுத்தமான கேரக்டர். அதற்கடுத்து 'பென்சில்' திரைப்படத்தில் நான் நடித்த கேரக்டரும் மனசைவிட்டு என்றும் அகலாத கேரக்டர். அதன் கிளைமாக்ஸ் என்றைக்கும் எல்லா ஜெனரேஷனுக்கும் சரியாக இருக்கும்னு நினைக்கிறேன். அதனாலயே அது ஒரு நிறைவானதாக மனசுல பதிந்திருக்கு.

இதனுடன் ரணசிங்கம், துப்பறிவாளன், ஆம்பள இந்த படங்களில் என்னோட கேரக்டர்களை நல்ல பதிவாகத்தான் நினைக்கிறேன். அடுத்து, சின்னத்திரையிலும் நிறைய கேரக்டர்கள் புதுப்புது முயற்சிகள் பண்ணிட்டேன். அதிகபட்சமா பத்தாயிரம் எபிசோடுகளுக்கும் மேலே என் முகம் வந்திருக்கு. இன்னும் என்னை மக்கள் ரசிக்கறாங்க என்பது பெரிய ஆறுதலா இருக்கு. அதனாலயே இப்ப புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹரீஷாக செஃப் கேரக்டரில் நடிச்சிக்கிட்டிருக்கேன். கோலங்கள் தொடருக்குப்பிறகு மீண்டும் தேவயானியுடன் நடிப்பது மகிழ்வான அனுபவமா இருக்கு.

இயல்பில், நடிப்புங்கிறது எனக்கு வெறித்தனமான ஃபேஷன். இந்தியில இதை கீடான்னு சொல்வாங்க. கீடா என்றால் கிருமின்னு அர்த்தம். நடிப்புக்கிருமி உள்ளே வந்துவிட்டால் விடவே விடாது. சாகறவரைக்கும் இருந்துக்கிட்டே இருக்கும். அதனால் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டா நஸ்ருதீன்ஷா, நாசர், பிரகாஷ்ராஜ் மாதிரி தொடர்ந்து நடிக்கனும்னு ஆசைப்படறேன்.

 ஆகஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com