பில்லி என்னும் பேரழகி
ரவிபேலட்

பில்லி என்னும் பேரழகி

எங்கே பிறந்தாள் என்று தெரியவில்லை. கைக்குட்டிப் பருவத்திலேயே தாமிரபரணிக் கரையிலுள்ள ஊரான சேரன்மகாதேவியில் ஒரு குடும்பம் அவளை வாங்கி வளர்த்தது. அவர்கள் அவளுக்கு வைத்த பெயர் பைரவி. அதைத் தவிர ஒரு வயது வரைக்குமான அவளது வாழ்க்கை எப்படி இருந்தது என்று யாருக்கும் வெளிச்சமில்லை. ஒரு வயதானதும் அவர்கள் அவளை ஒரு நாய் வியாபாரிக்கு விற்றார்கள். அந்த வியாபாரி அவளை எனது நண்பரும் இயற்கை விவசாயியுமான ஃபெலிக்ஸிற்கு விலைபேசி விற்றார்.

பல இனத்திலான நாய்களை வளர்த்து இனவிருத்தி செய்து விற்பதையும் விவசாயத்தின் ஒருபகுதியாக செய்து வந்தார் ஃபெலிக்ஸ். தன்னிடம் வந்துசேர்ந்த அழகான அந்த லாப்ரடார் பெண் நாய்க்கு அவர் ‘பெல்லி'என்று பெயர் வைத்தார். பைரவியிலிருந்து பெல்லியாக மாற அவளுக்கு அதிகநாள் தேவைப்படவில்லை. அவளுக்கு தடுப்பூசி போட்டு ஒருவருடம் கடந்ததை அறிந்த ஃபெலிக்ஸ் அடுத்தவருடத்திற்கான தடுப்பூசி போட அவளைப் பக்கத்திலுள்ள சிறு நகரத்திற்குக் கொண்டுச் சென்றார். அத்தகைய ஒரு சூழலையோ ஆள் கூட்டத்தையே அதுவரைக்கும் பார்த்திராத பெல்லி அவரது கையிலிருந்து தப்பித்து ஓடிவிட்டாள்.

முதலில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி அமர்ந்தாள். பின் அங்கிருந்து இறங்கியோடி ஒரு மோட்டார் பைக் பயணியின் குறுக்கே பாய்ந்து அவரை நடுரோட்டில் குப்புற விழவைத்து, பலரைப் பயமுறுத்தி அங்குமிங்கும் ஓடினாள். அவளைத் துரத்திப்பிடித்து தடுப்பூசி எடுத்து வீட்டிற்குக் கொண்டுவந்து

சேர்ப்பதற்குள் அவருக்குப் பாதி உயிரே போய் விட்டது. ஆனால் வீட்டிலோ மிகவும் நல்ல பிள்ளையாக பல நாய்கள், ஆடுகள், மாடுகள், கோழிகள், வாத்துகளுடன் கலகலப்பாக வாழ்ந்தாள்.

அவள் வழியாக லாப்ரடார் நாய்க்குட்டிகளைப் பிறப்பித்து விற்பனை செய்யலாம் என்ற திட்டத்துடன் அவளை வாங்கிய பெலிக்ஸுக்கு விரைவில் ஏமாற்றமளிக்கும் அந்த உண்மை தெரிய வந்தது. குட்டிபோட முடியாத உடல் சிக்கல் கொண்டவள் பெல்லி. ஆனால் அதற்குள் அக்குடும்பத்துடன் நெருங்கிப்போன பெல்லியை அவர்கள் பாதுகாத்து வளர்த்தனர். அக்காலத்தில் ஒருநாள் அவர்களது தோட்டத்து வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்ற நான் பெல்லியைப் பார்த்து வியந்துபோனேன்.

நான் வளர்த்துவந்த தாமோதரன் (தாமி) என்கின்ற ராஜபாளையம் ஆண் நாயின் குண இயல்புகளுக்கு நேர்மாறானவளாக பெல்லியைக் கண்டேன். தாமிக்கு ஒன்று முழுமையான அன்பு அல்லது முழுக் கோபம், இரண்டு மட்டுமே. இவளோ சாந்த

சொரூபி. கோபம், சத்தமாகக் குரைத்தல், உறுமல் எதுவுமில்லை. ஆயிரம் வார்த்தைகள் பேசும் அழகான கண்கள். என்னை முதலில் பார்த்தவுடன் தனது உணவுப் பாத்திரத்தைக் கடித்து எடுத்து வந்து என் முன்வைத்துவிட்டு 'இதுல ஏதாவது சாப்பாடு போடுங்க பிரதர்' போன்றதொரு பார்வையோடு என்னைப் பார்த்தாள். ஃபெலிக்ஸ் அவளுக்கு சரியாகச் சாப்பாடு போடுவதில்லை என்றே ஒரு கணம் எண்ணினேன். அவரிடம் இதைக் கேட்டபோது ‘எத்தனைமுறை சாப்பாடு வைத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவாள். முடிந்தவுடன் மீண்டும் கேட்பாள்' என்று சொன்னார்.

என்னிடமிருந்து சாப்பாடு எதுவுமே வரப்போவதில்லை என்று அறிந்த உடனே விளையாட்டுப் பொம்மை போன்ற ஏதோ ஒன்றைக்கடித்து எடுத்து என்னிடம் வந்து துள்ளிக்குதித்து விளையாட அழைத்தாள். உள்ளே அமர்ந்து அக்குடும்பத்துடன்  உணவருந்தும் நேரத்தில்கூட எனது மனதில் பெல்லி மட்டுமே ஓடிக் கொண்டிருந்தாள். அவளை எனக்குத் தர இயலுமா என்று ஃபெலிக்ஸிடம் கேட்க விரும்பினேன். ஆனால் அவர் அதை எதிர்மறையாக எடுத்தால் என்ன செய்வது? நான் கேட்கவில்லை.

அந்த நாட்களில் நான் தொடர்ந்து பயணங்களில் இருந்தேன். வீட்டில் இருப்பது மிகக் குறைவு. வயதுக்கு வந்த தாமியின் அட்டூழியங்கள் எல்லை கடந்தது. வீட்டுச் சுவரைக் குதித்து தெருவில் இறங்கி சரவேகத்தில் ஓடுவான். பிற நாய்கள், பூனைகள், மேலே பறக்கும் பறவைகள் எதையுமே அவனுக்குப் பிடிக்காது. காதடைக்கும் ஓலத்துடன் குரைத்துக் கொண்டு நாலா பக்கமும் ஓடுவான். அவன் பாய்ந்து வருவதைக்கண்டு பயந்தோடிய சில குழந்தைகள் சறுக்கி விழுந்து கைகால் அடிபட்டது. கட்டிப்போடும் தோல்வாரை கணநேரத்தில் கடித்து முறிப்பான். திடமான சங்கிலியில் கட்டிப்போட்டாலும்  அதையும் எப்படியாவது உடைப்பான். உடைக்க முடியவில்லை என்றால் அவிழ்த்து விடும் வரை ஓ....வ் ஓ....வ் என்று கத்திக்கொண்டே இருப்பான்.

வீட்டிலிருப்பவர்களால் அவனைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒருமுறை மும்பையில் வேலை விஷயமாகச் சென்ற என்னை தாமியின் அன்றைய பயங்கரச்செயல்களைச் சொல்லி பதற்றத்துக்கு ஆளாக்கி, வேலையே செய்ய விடாமல் பாதியில் திரும்பி வரவைத்தனர். இதை நான் ஃபெலிக்ஸிடம் சொன்னபோது விசாலமான இடத்தில் ஓடியாடி விளையாடவேண்டிய ராஜபாளையம் நாயை  சென்னை மாநகர வீட்டின் சிறு முற்றத்தில் அடக்கி வைக்க முடியாது என்றும் அவனைக் கடையநல்லூர் பக்கத்திலுள்ள தனக்குத் தெரிந்தொருவரின் நண்பருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் தென்னை மரத்தோப்புக்குள்ளே கொண்டுபோய் விடலாம் என்றும் ஆலோசனை சொன்னார். தாமியைப் பராமரித்து வீட்டிலேயே இருப்பதா இல்லை வேலைக்குப் போவதா என்ற நிலைமையில் நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு அவனை அங்கேயே விடலாம் என்று முடிவெடுத்தேன்.

அந்த அடங்காப் பிடாரியை ஒரு பகல் முழுவதும் காரில் அடக்கி வைத்துக்கொண்டு பயணித்து மாலை நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். அங்கே சென்றபோது எல்லாமே தலைகீழாகத் தெரிந்தது.பெரிய தென்னந்தோப்பு ஒன்றை ஒட்டி முள்வேலி கட்டிப் பிரித்த அம்பதுக்கு அம்பது அடிக் கொட்டாய் ஒன்றில் கசாப்புக்கான ஆடுகளை கூட்டமாக நிறுத்தியிருந்தனர். அவற்றை திருடர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஒடுங்கிப்போன இரண்டு நாட்டு நாய்களையும் தடித்த ஒரு ராட்வேய்லர் நாயையும் கட்டிப்போட்டிருந்தனர்.

அவற்றைப் பார்த்தவுடன் தாமி ஆகாயம் நடுங்கக் குரைக்க ஆரம்பித்தான். அந்நாய்களும் விட்டபாடில்லை. எட்டுத்திக்கும் ஒரே நாய் குரைத்தல் சத்தம் மட்டுமே எதிரொலித்தது. ‘இதுவா ரெண்டு ஏக்கர் தென்னந்தோப்பு? ராஜபாளையம் நாயால மற்ற நாய்களுடனே இருக்க முடியாதுன்னு தெரியாதா‘? என்று நான் கேட்டதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஃபெலிக்ஸுக்கும் மிகுந்த ஏமாற்றம். அவரிடம் சொன்னது ஒன்று நேரில் நடந்தது இன்னொன்று. இதனிடையே என்னுடைய உதவியாளர்கள் தாமியை அந்த ஆட்டு மந்தைக்குள்ளே கட்டிப்போட்டார்கள். இரண்டு நிமிடத்தில் அந்தச்சங்கிலியை அறுத்து உடல் முழுவதும் பதைபதைத்து நடுங்கிக்கொண்டு என்முன் பாய்ந்து வந்து நின்றான். அவன் என் முகத்தைப் பார்த்த பார்வை இருக்கே! ‘என்னை இங்கே தள்ளிவிட்டுப் போகக் கொண்டு வந்தியாடா நாயே‘? பேச்சிருந்தால் நிச்சயமாக அப்படித்தான் கேட்டிருப்பான். நான் அவனை ஆரத்தழுவி கைகளில் தூக்கிக்கொண்டு காரில் ஏறி திரும்பி சென்னைக்கே கிளம்பினேன். அந்தப் பயணம் ஏற்படுத்திய பதற்றத்திலிருந்து வெளியேறி இயல்பு நிலைக்குத் திரும்பத் தாமிக்குப் பல வாரமாகியது. வாடகைக் காரில்தான் தாமியைக் கொண்டுபோனோம். தன்னால் நண்பனின் முப்பதாயிரம் ரூபாயும் மூன்று நாட்களும் வீண்போனதே என்ற குற்றவுணர்வு ஃபெலிக்ஸுக்கு.

விரைவில் ஒருநாள் என்னை அழைத்தார். ‘அடுத்து இந்தப்பக்கம் எப்ப வர்றீங்க?' அடுத்தவாரம் மதுரை வருகிறேன் என்று சொன்னதும் ‘காரில் தானே வர்றீங்க. நேரா வீட்டுக்கு வாங்க. பெல்லியைக்கூட்டிட்டுப் போயிடுங்க. அவளை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று தெரியும். தனிமைதான் தாமியை இவ்வளவு பிரச்னை பண்ண வைக்குது. ஒரு பெண் நாய் வந்தால் எல்லாம் சரியாயிடும்' என்று சொன்னார். எனக்கு எல்லையற்ற சந்தோஷம். தாமியின் தனிமை தீருதோ இல்லையோ பெல்லி எனக்குக்கிடைக்கப் போகுதே! மதுரை பயணத்தை சற்றே முந்திவைத்துக்கொண்டு கடையத்துக்குச் சென்று பெல்லியைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.

பெல்லி என்கின்ற பெயர் எனக்குப் பிடிக்கவில்லை. ஆங்கிலத்தில் வயிறு,தொப்பை,வீக்கம் என்றெல்லாம் பொருளுடைய சொல். பெயரை மாற்றவேண்டும். பைரவியிலிருந்து பெல்லி ஆக மாறியவளை இன்னொரு பெயர் வைத்து கொடுமைப்படுத்தவும் எனக்கு மனமில்லை. ஆதலால் பெயர் மாறியதாக அவளுக்குத் தெரியாதவண்ணம் ‘பில்லி ஹாலிடே' என்று  பெயரிட்டேன். அது எனது அபிமான அமெரிக்கப் பாடகியின் பெயர். இவளும் குறைந்தவளா என்ன? கனடா நாட்டைச் சேர்ந்த நீற்று நாய்கள் (Canadian waterdogs) தானே லாப்ரடார்களின் மூதாதையர்கள். பில்லி என்கின்ற பெயர் கனக்கச்சிதமாக அவளோடு ஒட்டிக்கொண்டது. பில்லி.... என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் பாய்ந்து வருவாள். அப்போது நமது கையில் உணவு வகைகளோ விளையாட்டுப் பொருட்களோ இருந்தால் மகிழ்ந்து குதிப்பாள்.

பில்லியின் வருகை ஆரம்பத்தில் தாமிக்குச் சற்றும் பிடிக்கவில்லை. பலமுறை அவளைக் கடித்துக் குதறினான். ஒருமுறை அவளது அழகாகத் தொங்கும் இடது காதைப் பலமாகக் கடித்துக் காயப்படுத்தினான். அதற்குப் போட்ட களிம்பு மருந்து பலன் தராமல் காது அழுகத்தொடங்கியது. இறுதியில் அக்காதின் கீழ்ப்பகுதியை அறுவை சிகிச்சை செய்து நீக்கவேண்டியதாயிற்று. பின்னர் எப்போதோ தாமி பில்லியின்மேல் காதலில் விழுந்தான் எனப்பட்டது. ஆனால் அடிக்கடி அவனது ஆணாதிக்கமும் அக்கிரமமும் தலைதூக்கியவண்ணமே இருந்தன. பில்லி அவனை ஒருபோதும் காதலித்ததாக எனக்குத் தோன்றவில்லை. இருந்தும் தனக்குக் குழந்தைகள் பிறக்கவேண்டும் என்று அவள் மிகவும் ஆசைப்பட்டாள் என்றே படுகிறது. கருத்தரிக்கவே முடியாதவள் என்று சொல்லப்பட்ட பில்லி இரண்டுமுறை கருத்தரித்து குட்டிபோடும் நேரம் நெருங்குவதுபோன்ற அறிகுறிகளைக்காட்டினாள்! மண் தோண்டி தனது குட்டிகளை பத்திரமாக வைக்க இடத்தையெல்லாம் தயார் செய்தாள். ஆனால் இருமுறையும் அவளுக்குக் கருக்கலைந்துபோனது.

பில்லியின் விடா முயற்சி இறுதியில் பலனளித்தது. ஐந்து குட்டிகளைப் பெற்றெடுத்தாள். ஆனால் பரிதாபமாக அளவில் மிகச் சிறிய, சுண்டெலியின் எடைகொண்ட குட்டிகள்பிறந்தன. எல்லாமே செத்துப் போயின. அக்குட்டிகளை அங்கிருந்து அகற்ற பில்லி எங்களை  அனுமதிக்கவில்லை. கோபம் காட்டவில்லை என்றாலும் தனது உடலால் அவற்றை மறைத்துக்கொண்டே படுத்தாள். ஒரு வழியாக நான்கை அகற்றினோம். ஐந்தாவது குட்டியை விட்டுத் தராமல் இரவுமுழுவதும் அவளே கடித்துப் பிடித்துக்கொண்டிருந்தாள். பின்வந்த ஓரிருநாட்கள் சோகத்தில் கழித்தாளென்றாலும் விரைவில் மீண்டும் கலகலப்பானாள்.

திருப்தியான சாப்பாடு, ஓடியாடி விளையாட்டு. இதுதான் பில்லியின் உலகம். கறி, முட்டை, பால், தயிர், தேங்காய் போன்றவை மிகவும் பிடிக்கும் என்றாலும் எல்லாக் காய்கறிகளையும் சாப்பிடுவாள். வாழைப்பழத்தோல், சாறு பிழிந்த பாகற்காய் சக்கை போன்றவற்றைக்கூட விட்டுவைக்க மாட்டாள்.ஒருமுறை அவள் மிகவும் குண்டானதைப் பார்த்து அதிர்ச்சியாகி அவளுக்குக் கொடுக்கும் உணவின் அளவைக் குறைக்கத்  தொடங்கினோம். பின்னர் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொண்டோம்.

பில்லிக்குக்கோபமே வராது. மற்ற விலங்குகளையும் குழந்தைகளையும் அன்போடு அரவணைப்பாள். பசும்புல் நிலங்களுக்குமேல் தாழப்பறக்கும் சின்னஞ்சிறிய வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் ஆசையாசையாய் நடந்து செல்வாள். எல்லாவற்றிடமும் எல்லோருடனும்அவளுக்கு அன்பு... அன்பு... அன்பு மட்டுமே. அணுக்கத்தையும் கொண்டாட்டத்தையும் தவிர எதுவுமே அவள் கண்களில் பார்க்கக் கிடைக்காது.நெருக்கத்தின் அடையாளமாக வால் ஆட்டிக்கொண்டேயிருப்பாள். யாராவது வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கணும் அவளுக்கு. வந்தவர்கள் வெளியே போகக் கூடாது என்று அவர்களது ஒற்றைச்செருப்பை எங்காவது கொண்டுபோய் பதுக்கி வைப்பாள். நானுமே வீட்டிலிருந்து வெளியே கிளம்பப் போகிறேன் என்று உணர்ந்தால் எனது செருப்பும் காணாமல் போய்விடும். இரவில் அவளுக்குத் தூக்கம் குறைவு. எவ்வளவு தாமதமாக நான் வந்தாலும் கேட்டில் வந்து நிற்பாள். வால் ஆடிக்கொண்டேயிருக்கும். காலைச் சுற்றிச் சுற்றி வருவாள். பின் அமைதியாகச் சென்று படுப்பாள்.

கடந்த ஆண்டு அவளுக்கு ஏழுவயதானது. லாப்ரடாருக்கு அது நடுத்தர வயது. ஆரோக்கியமாகவும் அழகாகவும் ஐந்தாண்டுகாலம் எங்கள் வீட்டின் ஞானத்தோழியாக, எனது மகளின் சகோதரியாக, எனது அன்புக் குழந்தையாக வாழ்ந்தாள் எங்கள் பில்லி. சிலமாதம் முன்பு ஒருநாள் அவளது இடது காதுக்குள்ளே புண்வந்து சீழ் வழியத்தொடங்கியது. மிகுந்த வலியில் துடித்தாலும் சத்தமே போடாமல் என் மடியில் தலைவைத்து ‘ரொம்ப வலிக்குது. என்னைக் காப்பாற்ற முடியுமா?' போன்று ஒரு பார்வையைப் பார்த்தாள். கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்ற சிறந்த சிகிச்சையால் ஒரு வாரத்தில் குணமானாள். மீண்டும் உணவு, உற்சாகம் என்று பழைய வழக்கத்திற்குள் வந்தாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் திடீரென்று எழுந்து நிற்க முடியாமல் பில்லி திணறித் திணறி விழுவதைக் கண்டேன். ஓடிச்சென்று பார்த்தேன். அவளது உடம்பின் பின்பகுதி தளர்ந்து போனது போலவும் முன்பகுதி நடுங்கிக்கொண்டிருப்பதுபோலவும் உணர்ந்தேன். கால்நடை மருத்துவ நண்பர்களின் ஆலோசனையில் சில மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளக் கொடுத்தேன். பயனளிக்கவில்லை. உணவு உணவு என்று எப்போதும் குதூகலித்துக் கொண்டிருந்தவள் உணவையும் தண்ணீரையும்கூட வெறுத்தாள்.

அடுத்தநாள் அதிகாலையில் பில்லியை மருத்துவக் கல்லூரிக்கே கொண்டுச் சென்றேன். நண்பர்களின் உதவியினால் உடனுக்குடன் அவசரச் சிகிச்சையும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. கிட்டத் தட்ட ஆறுமணிநேரம் பரிசோதனைகள்எடுக்கப்பட்டன. பல மருத்துவர்கள் கலந்தாலோசித்து இறுதியில் பில்லியின் இதயம் பெரிதாகவும் பலவீனமாகவும் இருப்பதாகக் கண்டடைந்தனர். அவளது இதயம் சரியாகச் செயல்படாததால் மூச்சுப்பையும் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள். இவற்றின் அறிகுறி எதுவுமே முன்பு எப்போதும் வெளிப்படாமல் இப்போது ஒரே அடியில் தீவிரமாக வெளிப்பட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் சொன்னார்கள். மிகவும் விலை உயர்ந்த உயிர் காப்பாற்றும் மருந்துகள் பலவற்றை வாங்கிவரச் செய்தார்கள்.

சிகிச்சை பலனளிப்பதாகவே தோன்றியது. மூன்றாவது நாளிலிருந்து ஓரளவு சாப்பிடத் தொடங்கினாள். சுற்றிவரவும் வாலாட்டவும் தொடங்கினாள். அப்போதும் தண்ணீர் குடிக்க மறுத்தாள். க்ளூகோஸ் தண்ணீரைப் பீச்சாங்குழலில் வைத்து வாயில் பீச்சினோம். மருந்துகளை பலவந்தமாக ஊட்டினோம். பத்துநாட்கள் கடந்து விட்டன. பில்லி தேறி வருவதைக்கண்டு நிம்மதியுடன் வேலைவிஷயமாக ஒரு பயணத்துக்குக் கிளம்பினேன். ஆனால் நான் ஊரில் இல்லாதபோது அவள் மருந்துகளை உட்கொண்டு கொஞ்சநேரத்திலே வாந்தியெடுப்பதாகச் சொன்னார்கள். இருந்தும் குறைந்த அளவிலாவது சாப்பாடும் தண்ணீரும் எடுக்கிறாள், கவலைப்படவேண்டாம் என்றும் வீட்டில் சொன்னார்கள்.

மூன்று நாட்கள் கழித்து நான் திரும்பி வரும்போது பில்லி மிகவும் பலவீனமாகக் காணப்பட்டாள். அன்றிரவு பாதித் தூக்கத்தில் ‘பில்லி இறந்துபோவாள், அவள் இனிமேல் நமக்குக் கிடைக்கமாட்டாள்' என்று நான் உளறியதாகச் சொன்னார்கள். அடுத்தநாள் காலையில் வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் கற்றாழைச் செடிகளுக்குப் பின்னால் மூக்கிலிருந்து ஊதா வண்ண நுரை வடிந்தபடி பில்லி இறந்து கிடந்தாள். அவளை ஒரேகணம் பார்த்து இதயம் வெடிக்கும் வலியோடு அழுதேன். பில்லீ.. பில்லீ.. என்று எனது மகள் கதறி அழுதாள். எனது உதவியாளர்கள் அவளைத் தூக்கிச் சென்றார்கள். ஏரிக்கரைக்காட்டின் ஆழ்மண்ணில் எங்கோ புதைந்து இயற்கை திரும்பினாள் எனது பில்லி.

நான் உன்னைக் காண்பேன்

அழகான கோடைப் பகல்களில்

எளிதாய் ஒளிரும் அனைத்திலும்உன்னைக் காண்பேன்

காலை வெயிலொளியில் உன்னைக் கண்டடைவேன்

புத்தம்புது இரவின் நிலவைப் பார்க்கும்போது

உன்னை மட்டுமே நான் காண்பேன்.*

(பில்லியின் பெயருக்குக் காரணியான அமெரிக்கப் பாடகி பில்லி ஹாலிடேயின் பாடல்)

shajichennai@gmail.com

ஏப்ரல், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com