முதல் சினிமாக்கள்

முதல் சினிமாக்கள்

முள்ளரும்பும் மரங்கள்-3      

மயிலு குஞ்சு மோன் அப்பாவின் தூரத்துச் சொந்தக்காரர். தன்னுடைய கிராமத்தில் ஒரு சினிமாக் கொட்டகைக்குள்ளே நடந்த அடிதடியில் சிக்கி அங்கிருந்து தலைமறைவாகி எங்களூருக்கு ஓடிவந்தவர். மயிரு என்பதைச் சற்றே மாற்றிய மயிலு எனும் தனது பட்டப் பெயரை அவர் வெறுத்தார்.

‘டேய் மயிலு..' என்று அழைப்பவர்களிடம் ‘பல கத்திக் குத்துக் கேசுல போலீஸு தேடிட்டிருக்கிற ஆளு நானு.. தெரியுமாடா வெண்ணைகளா?' என்றெல்லாம் வீம்புக்குக் கேட்பார். ஆனால் யாரோ கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டதில் பயந்து நடுங்கி ஊரைவிட்டே ஓடி மலையேறி வந்தவன்தான் மயில் என்று என் அம்மா சொன்னார். எங்களூரில் மற்றச் சொந்தங்கள் இருந்தும் பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் தங்கினார். நேராநேரம் ருசியாக உண்பதும் எந்நேரமும் போர்த்திக்கொண்டு தூங்குவதும் மயிலின் கட்டாயத் தேவைகளாக இருந்தன. ‘டேய் குஞ்சுமோனே.. இந்த வீட்டுல எவ்வளவு வேல கெடக்குதுடா? எதாவதொண்ணுக்கு நீயும் கொஞ்சம் ஒதவக்கூடாதா?' என்று என் அம்மா ஒரேயொரு முறை கேட்டதற்கு மயில் செய்த காரியம் தெரியுமா?

அம்மாவை ஏறெடுத்துப் பார்க்கப் பிடிக்காத ஒரு நாத்தனாரை மயில் உசுப்பேற்றி விட்டார். அந்தம்மா எங்கள் வீட்டுக்கு வந்து ‘ஏட்டீ கண்டார் வீட்டிலேந்து கட்டிக்கிட்டு ஏறிவந்த ‘கூத்திச்சீ'.. எங்க வீட்டிலல்லாம் பொம்பளைங்களுக்கில்லடீ ஆம்பளைங்களுக்குத் தான்டீ குஞ்சு இருக்கு... கைக்கோட்டும் பறம்பு வீட்டில பொறந்த ஆம்பளைங்க கிட்ட வேல வாங்க நீ வளந்துட்டியாடீ ‘...' என்று பயங்கரமான கெட்ட வார்த்தைகளைப் பேசி பெரும் பிரச்சினையைக் கிளப்பினார். அம்மா மௌனமாகி விட்டார். மயில் முன்பைவிடச் சிறப்பாக உண்டு உறங்கினார். வார இறுதிகளில் இரட்டையார் நிர்மலா, கட்டப்பன சங்கீதா, நெடுங்கண்டம் தர்சனா, தங்கமணி ஜெமினி போன்ற சினிமாக் கொட்டகைகளைச்

சென்று பார்வையிட்டு ஒன்றுவிடாமல் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த மயில்தான் ஏழே வயதான என்னை சினிமா வெறியின் அடியில்லாப் பள்ளத்துக்குள் தள்ளிவிட்டார்.

சினிமாப் பார்வையின் கிளுகிளுப்புகளுக்கு மயில் முதலில் அழைத்துச் சென்றது பதினாறு வயதின் பாலியல் திக்குமுக்கில் அவஸ்தைப்பட்டு ஒல்லிக் குச்சியாகிப்போன தங்கனை. இரவில் இரண்டாம் ஆட்டங்கள் முடிந்தபின் மலைப்பாதைகளில் அடர்ந்து கசியும் இருட்டில் நெடுந்தூரம் நடந்து வீடுவந்து சேர மயிலுக்குத் துணை தேவைப்பட்டது. துணைபோகும் தங்கன் ‘சிலுமாக் கொட்டை‘க்கு வெளியே நின்று ஒலிச் சித்திரத்தைக் கேட்பான். மயில் விஸ்தாரமாக உள்ளே அமர்ந்து படம் பார்ப்பார். ஆனால் தங்கன் சாதாரண ஆளில்லை. பள்ளிக்கூடம் போகவில்லை என்றாலும் முக்கியமான சில ரகசியத் தகவல்கள் அவனிடம் இருந்தன. அவற்றுக்குள்ளே மயிலை வளைத்து விழவைத்து விரைவில் தங்கனும் கொட்டகைக்குள் புகுந்தான்.

தங்கனும் நானும் சிலகாலம் நெருக்கமாக-யிருந்தோம். நெல்வயல்களில் வட்டகனையும் வாழைவரையனையும் துணித்துண்டால் பிடிப்போம். குன்றோரப் புதர்களிலிருந்து சிற்றீந்துப் பழமும் துடலிப் பழமும் பறித்துத் தின்போம். அப்படி அலைந்து திரியும் நேரங்களில் தங்கன் அவனது அறிவுச் சுளைகளை எனக்கும் பகிர்ந்தான். ஊர்களுக்குள்ளே ஆணும் பெண்ணும் ஈடுபடும் சிலபல பலான நிகழ்வுகள். இவ்வாறாக ஒன்றுமே தெரியாத எனது பாலியல் கல்வி, எதுவுமே தெரியாத தங்கனிடமிருந்து தொடங்கியது! பார்க்கும் சினிமாக்களிலும் பலான சமாச்சாரங்கள் தாம் தங்கனுக்கு முக்கியம்.

சிலநாள் முன்பு பார்த்த ‘சிலுமா‘வின் கதையைத் தங்கன் வர்ணிக்கிறான். ‘யேசுவாஸுக்கு மிதக்கு மிதக்குன்னு இருக்கிற ஒருத்திகூட பயங்கரமான காதல். பாட்டு பாடிக்கிட்டு வர்ற யேசுவாஸ் அவள இறுக்கிக் கட்டிப்பிடிச்சு இச் இச்சுன்னு முத்தம் கொடுக்குறான். அதுக்கு நடுவுல கன்னங்கரேல்ன்னு ஒரு தடிமாடன் அவள ஏறிப்பிடிச்சு அவ துணியெல்லாம் கிளிச்சுக் களட்டறான். அப்பொ யேசுவாஸ் டைவ் அடிச்சு ஓடியாந்து அரையிலேந்து வாள் வலிச்சு உருவி அவன ஒரே வெட்டு. அப்றம் ரெண்டு பேரும் பயங்கரமான வாள் ப்ளெயிட். என்னா ஒரு ப்ளெயிட்...! என்னா ஒரு ப்ளெயிட்...! அதுல ஜெயிச்சதுக்கு அப்றம் யேசுவாஸும் அந்தப் பெண்ணும் சேந்து பண்ற மேட்டர்கள் இருக்கே.. அத நீ மட்டும் ஒருமுற பாத்தேன்னு வெச்சுக்கோ.. அப்றம் நீ சிலுமாக் கொட்டய விடவே மாட்ட..'

தங்கன் சொன்னதில் எனக்குப் பெரும் சந்தேகம் ஏற்பட்டது. யேசுதாஸ் சினிமாவில் வாள்ச் சண்டை போடுகிறாரா? பாடகர்தானே அவர்! தினமும் வானொலியில் கேட்கிறேனே! அவர் எப்படி

சினிமாவுக்குள்ளே வருவார்? ஆனால் தங்கனுக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ரேடியோவில் பாடும் யேசுதாஸுக்கும் படத்தில் பார்த்த யேசுதாஸுக்கும் ஒரே குரல்தான். அது யேசுதாஸ் அல்லாமல் வேறு யாருமில்லை. எனக்கோ பெருங்குழப்பம். நான் அம்மாவிடம் சென்று சந்தேகம் கேட்டேன். ‘நீயல்லாது வேறு யாராவது அந்த ‘வெடி‘யன் சொல்லறதெல்லாம் நம்புவானாடா? வாயத் தொறந்தா அவன் வெடி தானே சொல்லுவா? சினிமாவிலப் பாத்தது நஸீர் மாதிரி யாராவது நடிகராயிருக்கும்'.

தங்கன் சொல்வதையெல்லாம் நம்புவதை அத்துடன் நிறுத்திக்கொண்டேன் என்றாலும் தங்கனும் மயிலும் சொல்லும் சினிமா அனுபவங்களைக் கேட்டு எனக்குத் தூக்கமே போய்விட்டது. எப்படியாவது ஒரு சினிமா பார்த்தே ஆகணுமே. ‘என்னயும்

சினிமாக்குக் கூட்டிட்டுப் போ.. என்னயும் சினிமாக்குக் கூட்டிட்டுப் போ..' என்று மயிலிடமும் தங்கனிடமும் நான் மாறிமாறிக் கெஞ்சிக் கொண்டிருந்தேன். அந்த நாட்களில்தான் தங்கமணி கிராமத்திலுள்ள ஜெமினி கொட்டகையில் ‘ஸ்னாபக யோஹன்னான்' என்ற மலையாள பக்திப் படம் வந்தது. ‘ஏசுவோட கைல ஆணி அடிச்சு எறக்கறதெல்லாம்.. ஹோ.. பயங்கரம்..' வெள்ளிக்கிழமை முதல்காட்சியையே பார்த்துவிட்டு வந்த மயில் கதைச் சுருக்கத்தைக் கொஞ்சமாக வெளிப்படுத்தினார். இந்தப் புண்ணிய புராணப் படத்தையாவது பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா?

என்னுடைய கெஞ்சல்களும் அடமும் தாங்க முடியாமல் கடைசியில் மயில் எனது அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னார். ‘நல்ல பஸ்டு சினிமா. ஒண்ணாம் தரம் வைவிள் கத. சின்னப் பசங்க பாக்கவேண்டிய படமாக்கும். வேணும்னா எல்லாத்தையும் கூட்டிட்டுப் போய் நான் காட்டிட்டு வர்றேன்'. அது பலித்தது. அனுமதியும் பணமும் வழங்கப்பட்டது. அந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பெண்களும் குழந்தைகளுமாக நாலைந்துபேர் மயிலு குஞ்சு மோனின் தலைமையில் தங்கமணி ஜெமினியை நோக்கிப் புறப்பட்டனர். முதன்முதலாக ஒரு சினிமா பார்க்கப்போவதன் குதூகலத்தில் எனது கால்கள் தரையில் உறைக்கவில்லை.

நீலிவயல் குன்றுக்கு இப்புறத்தை அடைந்தபோது தங்கமணி ஊரின் தாழ்நிலத்திலிருந்து காற்று வடிகட்டி அனுப்பிய பாட்டு காதில் விழுந்தது. ‘காற்று வந்நூ.. கள்ளனெப் போலெ..' படம் கரகாணாக் கடல். இசை தேவராஜன். பாடியது பி சுசீலா. நாள் முழுவதும் ரேடியோவின் முன்னால் அமர்வதால் அந்தத் தகவலெல்லாம் அப்போதே எனக்குத் தெரியும். கூரைப் புல் வேய்ந்து முளைப் பாய்களால் சுவர்கட்டி சாம்பல் நிறத்தில் நீண்டு கிடந்தது அக்கொட்டகை. நாலா பக்கமும் மக்கள் குவிந்திருந்தனர். முளைகளாலான கூரைக் கூண்டின்மேல் உயரத்தில் கட்டி வைத்திருக்கும் வெள்ளி நிறமான கூம்புவடிவ ஒலிபெருக்கியில் பாடல்கள் உரத்து ஒலித்தன. மின்சாரம் உருவாக்கும் இயந்திரத்தின் ஓலம் பின்னால் எங்கேயோ ஒலிக்கிறது. கொட்டகையின் முன்னால் பெட்டி மாதிரி கட்டியிருந்த ஒற்றையறைக் கட்டடத்தின்மேல் உள்ளே ஒரு கை செலுத்தும் அளவிற்கு வளைத்த ஓட்டைகள். கசேர ஒரு ரூபா, சாருபெஞ்ச் எழுபத்தஞ்சு பைசா, பென்ச் அறுபது பைசா, தறா நாற்பது பைசா என்று எழுதி வைத்திருந்தார்கள். மயில் நுழைவுச் சீட்டுகளை வாங்கி வந்தார். இளம் நீல வண்ணத்தில் சிறிய காகிதத் துண்டு! இதற்கா எழுபத்தைந்து பைசா? அதற்கு தேனாலியின் சாயைக் கடையில் பதினைந்து தோசை கிடைத்திருக்குமே!

மணல் விரித்த கொட்டகையின் தரைக்குமேல் மங்கலான வெளிச்சம் வெளிறிக் கிடந்தது. நாரங்ஙா முட்டாயி, மூட்டைப் பூச்சி, வேர்க்கடலை, பீடிப் புகை அனைத்தும் கலங்கிப் புழுங்கிய ஒரு வாடை அடித்தது. உரத்துத் தெளிவற்று ஒலிக்கும் பாடல்.

சாருபெஞ்ச் தேடிப்பிடித்து ஒருவழியாக அமர்ந்தோம். டப்பு.. டுப்பு... என்று வெடிக்கும் சத்தத்துடன் பாடல் நின்று இருந்த வெளிச்சமும் அணைந்துபோனது. ‘அதோ அந்த வெள்ளையா தெரியுதே.. அதான் ஸ்ரீன்...' என்று மயில் சொன்னார். முன்பக்கமாக இழுத்துக் கட்டியிருந்த வெள்ளைத் துணியில் மின்னலும் மினுங்கலுமாக வெளிச்சம் பரவியது. ‘தங்கமணி ஜெமினியின் வெட்டித் திளங்கும் வெள்ளித் திரை' என்று துண்டுப் பிரசுரங்களில் எழுதியிருந்த அதே திரை!

வாய் பிளந்து நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது திரையில் சாம்பல் நிறத்தில் ‘பாப்பர பாப்பர பாப்பர ப்ராய்ய்ய்ய்...' போன்ற ஓர் இசையின் அகம்படியுடன் ஒரு பூமிப் பந்து சுழல ஆரம்பித்தது. அதற்கு மேலே கோவணம் மட்டுமே கட்டி வெளுவெளுத்த உடலும் கையில் வேலுமாய்ப் பகவான் பாலமுருகன். அவருக்குக் கீழே மெறிலேன்ட் ஸ்டுடியோவின் வணிக முத்திரை. பகவானின் பின்னால் கறுப்பு வண்ணத்தில் ஒரு பெரிய மயில். என் பக்கத்திலிருந்த மயிலை ஒரு நிமிடம் பார்த்தேன். முதன்முதலில் ஒரு திரைப்படம் பார்ப்பவரைப்போல் கண்களைத் திரையில் ஒட்டவைத்துப் படம் பார்த்துக்கொண்டிருந்தார்! முருகர் மறையும் முன்னே ‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது' என்ற விவிலிய வாசகம் ஒலிக்கத்தொடங்கியது.

‘திரி கொளுத்துவின்...' என்று யேசுதாஸின் குரலில் பாடல் முழங்கியபோது வானத்தில் கால்களில்லாத இறைத் தூதிகள் ஒழுகி வந்தனர். கீழே ஆட்டு இடையர்கள் தூக்கம் கலைந்து விரைந்தெழுந்தனர். ‘பெத்லஹேமின்டெ திருமடித் தட்டிலெ...' என்று பி லீலா பாடத்தொடங்கும் நேரத்தில் எதிர்பாராமல் ‘தடுப்ப்... துடுப்ப்...' என்ற ஒரு பெரும் ஒலியுடன் அந்த வெள்ளித்திரை இரண்டாகக் கிழிவதுபோல் பிரிந்து வெளிச்சம் அணைந்துபோனது. ‘பிலின் அறுந்து போச்சு! இனி ஒட்டணும். பத்து பன்னிரெண்டு ஆண்டு பழைய காப்பி அல்லியோ! அறுந்துதான் ஆகும்' என்று சொன்னார் மயில். அன்று படம் முடிவதற்குள் எத்தனையோ முறை அப்படி படச்சுருள் முறிந்தது! கொஞ்சநேரம் முறியாமால் ஓடினாலும் நடுவே 10 9 8 X Y Z என்றெல்லாம் மின்னி சினிமா நின்றுபோகும். ‘ட்றீல் மாத்துறாய்ங்க..' மயில் விளக்கம் அளிப்பார்.

படம் ஓடும் நேரம் முழுவதுமே மயிலின் விளக்கவுரை இருந்தது. ‘அதோ.. அதுதான் திக்குறிசி, அங்கிட்டு நிப்பது மிஸ் குமாரி, மற்றது எஸ் பி பிள்ள..'

விசேஷமான இசையின் அகம்படியுடன் ரோமாப் படைநாயகன் வேடத்தில் ஓர் ஆணழகன் தோன்றியபோது அதோ நஸீர்.. அதோ நஸீர்.. என்று ஆவேசமானார் மயில். ஜோஸ் பிரகாஷ் என்ற நடிகர்தான் புனித யோவான். ‘இய்யாள் எல்லாப் படத்திலும் கொடூரமான வில்லன். இப்படத்தில் மட்டும் புனிதன்..' என்று சொன்னார் மயில். ஆனால் ஸ்னானக யோவானின் பெயர்கொண்ட அப்படத்தில் யோவானுக்குப் பெரிதாக எந்த வேலையும் இருக்கவில்லை. ஏன், யோவானை விட அதிக நேரம் திரையில் வந்த யேசு கிருஸ்துவின் முகத்தை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்று மக்கள் அமர்ந்தும் நின்றும் படுத்தும் முயன்றபோதிலும் முடியவில்லை. யேசுவின் முகம் எப்போதுமே திரைக்கு வெளியேயோ இருட்டிலோ இருந்தது!

மாபெரும் அரசமாளிகை. அதற்குள்ளே நிகழும் ஆடல் பாடல்கள், கதாநாயகனும் நாயகியும் நிகழ்த்தும் கிளுகிளுப்புக் காட்சிகள், கதாநாயகியும் தோழிகளும் நடத்தும் விசாலமான நீச்சல் குளியல் காட்சி, அரசுக்கு எதிராக வில்லன்கள் கூட்டுச் சதித் திட்டம், குதிரைப் படையோட்டங்கள், வாள் சண்டைகள் என ஒரே கலகலப்பு. விழித்திருக்கும்போதும் மிகத் தெளிவாகக் கனவுகள் காண்பதுபோல் திரையில் பார்த்த அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்துப் போயின. கனவிலும்கூட நினைக்க முடியாத காட்சிகள் உயிருள்ள

சித்திரங்களாக இதோ என் கண் முன்னே. ஆனால் படச்சுருள் அறுந்துபோவதும் இருக்கைகளின் இடையே நெருக்கியடித்து வேர்க்கடலை, இஞ்சி முட்டாயி, பீடி சிகரெட் விற்க ஆட்கள் வந்ததும் அந்த சினிமாக் கனவுக்கிடையே புகுந்த இடையூறுகள். குமுகுமுவெனப் பொங்கிவந்து கொண்டேயிருந்த பீடிப் புகையில் சினிமா இயந்திரத்திலிருந்து படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் ஒளிக்கீற்றுகள் ஏறியிறங்கி மின்னுவதும் கூட ஒரு மாயத்தோற்றம்போல் காட்சியளித்தது. சினிமா ஒரு வாதையாக எனக்குள் புகுந்து விட்டது. அன்றிரவு கடும் தூக்கக் கலக்கத்திலும் தொய்விலும் தள்ளாடி மலைப்பாதைகளில் திரும்பி நடக்கும்போது அடுத்து ஒரு சினிமா எப்போது பார்க்க முடியும் என்ற ஒரே கவலைதான் எனக்குள் நிரம்பியிருந்தது.

நான்காவது படிக்கும் காலத்தில் ஒருநாள் குழந்தைகளை அடித்தும் மிரட்டியும் கிழித்த கோட்டின்மேல் நிறுத்தும் ரோசா எனும் ஆசிரியை எங்கள் நாற்பது பேரை இரண்டு மைல் தொலைவிலுள்ள கொட்டகைக்குக் கொண்டுசென்றார். அங்கே திரையிடப்படும் ‘நாழிகக் கல்லு' குழந்தைகள் அவசியம் பார்க்கவேண்டிய படமாம். பிரேம் நஸீர் தான் இங்கேயும் கதாநாயகன். நாயகியின் பெயர் ஷீலா. புத்தகங்களைப் பிடித்துக் கொண்டு கல்லூரிக்குப் போகும் கதாநாயகன் நாயகியின் பின்னால் பாட்டுப்பாடித் திரிகிறான். அவன் அந்தப் பெண்ணின் சேலையைப் பிடித்து இழுக்கிறான். அவளை நடக்கவிடாமல் வழிமுடக்கி நிற்கிறான்.. கால்கொலுசு கிலுக்கி முன்னும் பின்னும் இளக்கி நடந்துபோகும் கதாநாயகி கோபத்தைக் காட்டுகிறாள். ‘உனக்கு வெட்கமே இல்லையா..? நான் யாரென்று உனக்குக் காட்டித்தாரேன்..' என்றெல்லாம் பாட்டிற்கிடையே பேசும் அப்பெண்மணி அவ்வப்போது ரகசியமாக வெட்கப்படவும் புன்னகைக்கவும் செய்கிறாள்! படத்தில் வரும் மற்றுமொரு பெண்மணி ஆண்களுடன் அமர்ந்து

சிகரெட் புகைக்கிறாள்! தண்ணியடிக்கிறாள்!! பணம் வைத்துச் சீட்டு ஆடுகிறாள்..!!!

கடும் காமச்சுவை கொண்ட ஒரு பாடலைப் பாடிக்கொண்டு ஆணும் பெண்ணும் கட்டியணைத்து முத்தமிட்டு விளையாடுகிறார்கள். குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! தங்கன் இருந்திருந்தால் அவனுக்கு ரொம்பப் பிடித்திருக்கும். ரோசா ஆசிரியைக்கு கடுமையான கோபம் வந்தது. படம் முடியும் முன்னே அவர் எங்களைக் கொட்டகையிலிருந்து வெளியேற்றி அடித்து ஒதுக்கி பள்ளிக்கூடத்திற்கே திரும்பக் கொண்டுபோனார். எட்டுவயதுக் குழந்தைகளான எங்களை அன்றைக்கு அப்படம் பார்க்க எதற்காகக் கொண்டு

சென்றார்கள் என்று இன்றுவரைக்கும் எனக்குப் புரியவில்லை.

ஒருமுறை வழியோரத்தில் கிடந்த ஒரு துண்டுப் பிரசுரம் என் கையில் சிக்கியது. ‘பிரம்மாண்டமான சினிமாத் திரையிடல். படம் ஆபிஜாத்யம். நடிகர்கள் மது,

சாரத, அடூர் பாஸி. சனிக்கிழமை மூன்று மணிக்கும் ஏழு மணிக்கும் இரண்டு காட்சிகள். இடம் எழுகும்வயல் ஜெய்மாதா பள்ளிக்கூடம். எழுகும் வயலுக்கு மேலேயுள்ள கூம்பன் மலை எனும் இடத்தில்தான் அம்மிணிப் பேரம்மாவின் வீடு. அம்மாவின் மூத்த அக்கா. கறாரான ஆனால் அன்பான பெண்மணி அவர். சனிக்கிழமை காலையிலேயே நான்கு மைல் தொலைவிலுள்ள பேரம்மாவின் வீட்டிற்கு விரைந்தேன். போகும் வழியில் ‘ஆபிஜாத்யம்' என்பது என்ன மாதிரியான சினிமாப் பெயர்? அதன் அர்த்தம்தான் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

சென்றவுடன் பேரம்மாவிடம் ‘பேரம்மா.. பள்ளிக்கூடத்துல சினிமா பாக்கப் போகட்டுமா?' என்று கேட்டேன்.

‘சினிமா பார்க்க பள்ளிக்கூடமாடா? பள்ளிக் கூடத்துல படிக்காத்தானே போவாங்க! நல்ல பசங்க சினிமா பாக்கற மாதிரி

அசிங்கமான வேலையெல்லாம் செய்ய மாட்டாங்க.. இங்கே பசங்களெல்லாம் மிளகு தோட்டத்துல பேரப்பனோடு வேல செய்யப் போயிருக்காங்க. நீயும் வேண்னா அவங்ககூடப் போ. இல்லேன்னா எங்கேயாவது ஒரு மூலயில அடங்கி ஒக்காந்துக்கோ'. நான் மனமுடைந்துபோனேன். பேரம்மா  சொன்னால் அது முடிவுதான். அனுமதியும் இல்லை, பணமும் இல்லை! எப்படியாவது ஆபிஜாத்யம் பார்க்கணுமே! எனக்குப் பதற்றம் அதிகரித்தது. மேற்கொண்டு என்ன செய்வது? ‘பேரம்மா.. அப்டீன்னா நான் வீட்டுக்குப் போறேனே.. அப்பாட்ட சொல்லாமத்தே வந்தேன்.. சாயங் காலத்துக்கு முன்னெ திரும்பலன்னா அடிப்பாரு'. ‘சொல்லாம கொள்ளாம ஏன்டா வந்தே..? சரி சீக்கிரம் போயிடு. இருட்டுக்கு முன்னே வீடுபோய்ச் சேரு' என்று அவர் சொல்லி முடிக்கும்முன் நான் இறங்கி ஓடினேன்.

‘ஊஞ்சாலா.. ஊஞ்சாலா...' தூரத்திலிருந்தே சினிமாப் பாட்டு காதில் விழுந்தது. மின்சார உற்பத்திக்கான இயந்திரத்தின் ஃபட்ட் ஃபட்ட் சத்தம் காதைக் கிழித்தது. பள்ளிக்கூடத்தின் முன் நல்ல கூட்டம். அனைவரது கைகளிலும் நுழைவுச் சீட்டுகள் தெரிகின்றன. சீட்டில்லாமல் உள்ளே கடக்கலாமா? திருட்டுத்தனம் செய்யப் பெரும் பயம் ஒருபுறம். ஆனால் படம் பார்க்காமல் இருக்கவே முடியாது. காட்சி ஆரம்பிக்கப் போகிறது. உள்ளே செல்லத் துடிக்கும் கூட்டம் பள்ளிக்கூட வாசலில் அலைமோதுகிறது. உயரமும் எடையும் குறைந்து உருவத்தில் சிறியவனாக இருந்த நானும் அக்கூட்டத்தில் ஏறி நின்று நெருக்கியடித்தேன். அந்த நெரிசலில் எப்படியோ உள்ளே சென்றேறினேன். கையிலும் காலிலும் பலத்த உதையும் மிதியும் விழுந்தாலும் சினிமா மோகத்தில் நான் வலியை உணரவேயில்லை.

பள்ளிக்கூடத்தின் ஜன்னல்களெல்லாம் இலக்கொம்புகளாலும் கறுப்புச் சீலை-களாலும் மூடப்பட்டிருந்தன. உள்ளே வெளிச்சம் மிகக்குறைவு. எதுவும் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஒருவழியாகத் திரைக்குப் பக்கத்தில் தரையில் அமர்ந்திருக்கும் மற்ற பையன்களுடன் சென்று அமர்ந்தேன். எனது சீட்டைக் கிழிக்க யாராவது வருவாங்களா என்று பயந்துகொண்டே. படத்தைத் திரையிடும்

சிறிய இயந்திரம் ஃபிர்ர்ர்ர்ர்ர்ர்..என்ற ஒலியுடன் ஓடத்துவங்கியது. கொட்ட-கைகளில் காணப்படும் திரைச்சீலையின் கால்வாசி கூட அகலமோ உயரமோ இல்லாத திரையில் படம் ஓட ஆரம்பித்தது. நகைச்சுவை நடிகர் அடூர் பாஸியும் சில குழந்தைகளும் சேர்ந்து ஓடாமல் வழியில் கிடக்கும் ஒரு பேருந்தைத் தள்ளிக்கொண்டு சென்று பாடும் ஒரு நகைச்சுவைப் பாடல். ஒரு பேருந்தை நேரில் பார்த்தவர்கள் மிகக்குறைவாகயிருந்த எங்களது ஊரில், முழுவதும் பேருந்தில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சி ஓர் அதிசயமாகவே பார்க்கப்பட்டது.

படச்சுருள் மாற்றும் இடைவேளையில் சீட்டில்லாத என்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். நானிருக்கும் வரிசைக்குப் பின்னால் அதோ அமர்ந்திருக்கிறான் சாபு! அம்மிணிப் பேரம்மாவின் செல்ல மகன். மிளகுத் தோட்டத்தில் வேலைக்குப் போயிருப்பதாகச் சொல்லப்பட்டவன்! அவனும் சீட்டில்லாமல்தான் உள்ளே நுழைந்திருந்தான்! படம் முடிந்து வெளியே வரும்போது இருவருக்கும் கொலைப் பசி. சாபுவின் கையில் பணமிருந்தது. அதை வைத்து நாங்கள் பப்பட போளியும் உண்டம்பொரியும் வாங்கிச் சாப்பிட்டோம். வயிறு நிரம்பியதும் எனக்கொரு புது எண்ணம். அடுத்த காட்சியையும் பார்த்தால் என்ன? மீண்டும் சீட்டெடுக்காமல் உந்தித் தள்ளி உள்ளே

சென்றோம். மறுபடியும் அந்தப் படத்தைப் பார்த்தோம்.

எல்லாம் முடியும்போது இரவு ஒன்பதரை மணி. கல்லும் கரடுமான மலை வழிகளினூடாக இருட்டில் தப்பியும் தேடியும், சறுக்கி விழுந்து காயங்களிலிருந்து ரத்தம் சொட்டியும் ஒருவழியாகச் சாபுவின் வீட்டை அடைந்தோம். பேரம்மா கவலையோடு

 சாபுவுக்காகக் காத்திருந்தார். அவன் கூட என்னைப் பார்த்ததும் பேரம்மாவிற்கு எல்லாமே புரிந்துபோனது. பெரிய மர அகப்பை ஒன்றை எடுத்து சாபுவை அவர் அடித்துத் துவைத்தார். எனக்கும் போதிய அளவிற்கு அடி விழுந்தது. ‘ஆபிஜாத்யம்' என்றால் உயர்வான இடத்தில் பிறந்து உயர்வாக வாழ்தல் என்று பொருள். சினிமா பார்ப்பதற்காக இளவயதில் நான் கையாண்ட இத்தகைய ‘உயர்வான' காரியங்கள் தாம் எனது நாற்பதாண்டுகால சினிமா வெறியின் தொடக்கப் புள்ளிகள்....

(வளரும்...)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com