திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன் - 14

திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன் - 14

"இசை என்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியை மனதுக்குத் தருகிறது.  அந்த இன்பம் இல்லாமல் மனித குலம் எதுவுமே செய்யமுடியாது"  - கன்பியூஷியஸ்

பொதுவாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை அறிமுகப் படுத்தும் போதுதான் அவனைப் புகழ்ந்து பாடல் காட்சி அமைப்பது வழக்கம். அல்லது கதாநாயகனே ஒரு பாடலை பாடிக்கொண்டு தான் அறிமுகமாவார். 

அன்றைய எம்.ஜி.ஆர், சிவாஜி முதல்  இன்றைய விஜய், அஜீத்,  சிவகார்த்திகேயன்  வரையிலும் இது எழுதப்படாத சட்டம்.  மாற்றக்கூடாத - மாற்றமுடியாத சம்பிரதாயம்.

ஆனால்..  வில்லன் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் போது அவனைப் புகழ்ந்து - அவனது பெருமைகளைப் பேசும் வகையில் பாடல் காட்சி அமைந்த படம் "சம்பூர்ண ராமாயணம்" மட்டும்தான்.

அது மட்டும் அல்ல.  வில்லனின் அறிமுகமே ஒரு பாடல் காட்சியின் வாயிலாகத்தான்.   

ராமாயணக் கதையில் வில்லன் யார்?  ராவணன் தானே?

அந்த ராவணன் அறிமுகமாகும் முதல் காட்சியே ஒரு பாடல் காட்சிதான்.

அவ்வளவு ஏன்?  இந்தப் படத்தில் ராமனாக நடிக்கும் என்.டி. ராமாராவுக்கே பாடல் காட்சி கிடையாது. 

ராவணனுக்கு மட்டும் தான் பாடல்.  அதுவும் ஒன்றல்ல மூன்று பாடல்கள்!

ராவணனை அறிமுகப்படுத்தும் முதல் காட்சியே அவன் சிவபூஜை செய்து மனமுருக சிவபெருமானை வேண்டிப்பாடும் பாடல் காட்சியோடுதான் துவங்குகிறது. 

"தென்னாடுடைய சிவனே" என்று விருத்தமாக தொடங்கி “கண்பாரும் எனை ஆளும் கயிலை வாசா - உன் பாதம் நம்பினேன் உமா மகேசா" - என்று சிவபூஜை செய்யும்போது ராவணன் பாடுவதாக அமைந்த காட்சியே ராவணன் அறிமுகமாகும் முதல் காட்சி.  ஷண்முகப்ரியா ராகத்தில் இந்தப் பாடலை அற்புதமாக அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். 

இந்தப் பாடலை ராவணனுக்காக பின்னணியில் பாடியிருப்பவர் ராமன்.  சாதாரண ராமன் இல்லை.  ஜெயராமன்!

ஆம்.  சி.எஸ். ஜெயராமன் தான் ராவணனாக நடித்திருக்கும் டி.கே. பகவதிக்கு பின்னணி பாடி இருக்கிறார். 

இந்தப் பாடல் என்று அல்ல.  ராவணன் பாடுவதாக அமைந்த மூன்று பாடல்களையுமே இவர் தான் பாடியிருக்கிறார்.

ஒரு இசைக்கலைஞன் ராவணனின் கொலுமண்டபத்தில் அவனது முன்னிலையில் தனது யாழ் மீட்டும் திறமையை காட்டி பரிசுகளும் பாராட்டும் வாங்க நினைத்து ராவணன் முன்பாக வீணை மீட்டி அவனது பெருமைகளை - குறிப்பாக வீரமே உருவாக இருந்தாலும் இசையையே தனது உயிராக என்னும் அவனது கலைத்திறமையைப் போற்றிப் பாடும்போது இடையில் அபசுரம் ஒலிக்கிறது. 

அதனை கனிவாக ராவணன் சுட்டிக்காட்டும் போது சபா மண்டபத்தில் உள்ள அனைவரும் ராவணனே யாழ் மீட்டிப் பாடவேண்டும் என்ற தன்  ஆவலை வெளிப்படுத்துகின்றனர்.  ராவணன் யாழ் மீட்டி பாடுகிறான்.  அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

மருதகாசி என்னும் அற்புதக் கவிஞர் அருமையான பாடலை வடித்துக் கொடுக்க சரணத்தில் வரிக்கு வரி ராகம் மாறும் ராகமாலிகையாக இந்தப் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

திருச்சி லோகநாதன், சிதம்பரம் எஸ். ஜெயராமன் ஆகியோர் இந்தப் பாடலைப் பாடி இருக்கின்றனர்.

"வீணைக் கொடியுடைய வேந்தனே.  வீரமே உருவாகினும் இசை வெள்ளமே உயிரெனவே நினைந்து உலவும் - வீணைக் கொடியுடைய வேந்தனே"  - என்று திருச்சி லோகநாதனின் குரலில் மோகன ராகத்தில் பாடல் துவங்குகிறது.  

தொடரும் சரணத்தில் அடாணாவுக்கு மாறுகிறது பாடல்.

"ஆனந்த காண அமுத மழையே ..”  என்று அடாணாவில் திருச்சி லோகநாதன் பாடும்போது நம்மையும் அறியாமல் இசை மழையில் மனது லயிப்பதை நம்மால் தடுக்க முடியாது.

அடுத்து "சங்கீத சௌபாக்யமே.." என்று சி. எஸ். ஜெயராமன் துவங்கும் போது குரலில் தெறிக்கும் ராஜ கம்பீரம்.  (வானொலியில் பாடலைக் கேட்டபோது இருந்த  இந்த வரிகள் நீளம் கருதி படத்தில் நீக்கப் பட்டிருக்கின்றனவோ.  பாடலைக் காட்சியாக பார்க்கும் போது இந்த சரண வரிகள் நீக்கப் பட்ட பிரதிகளே புழக்கத்தில் இருக்கின்றன.)  

"ராகங்களின் தன்மை குறித்து அறிய ஆவலாக இருக்கிறோம்.  பதிலும் ராகத்தின் வடிவிலேயே அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று மகோதரன் கூறிவிட்டு "காலையில் பாடும் ராகம் என்ன?"  என்று கேட்க உடனே ஒரு ஒரு ஸ்வரத்தின் வாயிலாக ராகத்தை கோடி காட்டிவிட்டு பாடிவிட்டு "பூபாளம்" என்று பதில் சொல்கிறான் ராவணன்.

தொடர்ந்து ஒவ்வொருவராக கேள்விகளை தொடுக்க   அந்தந்த ராகங்களின் வாயிலாகவே பதிலளிக்கிறான் ராவணன்.  வரிக்கு வரி ஒவ்வொரு ராகங்களின் சொரூபமும் தன்மையும் வெளிப்படும் வகையில் ஒரு கோடி காட்டிவிட்டு அந்தந்த ராகங்களின் பெயரோடு முடிக்கும் அழகே அழகு. 

பொதுவாக ராகமாலிகை அமைக்கும் போது ஒரு சரணம் முழுவதும் ஒரு ராகத்திலும் அடுத்த சரணம் முழுவதும் வேறு ராகத்திலும் என்று அமைப்பதுதான் வழக்கம்.

கர்நாடக இசையிலும் இப்படித்தான்.  பிரசித்தி பெற்ற பாடலான "பாவயாமி ரகுராமம்"  இப்படி சரணத்துக்கு சரணம் ராகம் மாறும் பாடல்தான்.

ஆனால்... கர்நாடக இசையிலும் வரிக்கு வரி ராகம் மாறும் பாடல்கள் இருக்கின்றன.  "ஆரபிமானம் வைத்தென்னை ஆதரிப்பாய் ஆனந்த பைரவி." என்ற பாடல் இப்படி வரிக்கு வரி ராகம் மாறும் பாடல்தான்.

இந்த மாதிரி ராகமாலிகை அமைப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல.  அந்த வரிக்குள் அடங்கும் வார்த்தைகளுக்குள் அந்த ராகத்தின் ஸ்வரங்களை கையாண்டு அந்த ராகத்தின் பூரண சொரூபத்தையும் வெளிக்கொணர வேண்டும். 

அந்த வகையில் இந்தப் பாடல் கே. வி. மகாதேவனின் இசை ஞானத்துக்கு ஒரு பரிபூரண சாட்சியாக அமைந்த பாடல். 

(இதுபோல வரிக்கு வரி ராகம் மாறும் ராகமாலிகைப் பாடல்களை அனாயாசமாக கையாள்வதில் அவருக்குள்ள திறமை பிற்காலத்தில் அவர் இசை அமைத்த பல படங்களில் வெளிப்பட்டிருக்கிறது.  அந்த விவரங்களை பின்னால் பார்ப்போம்.)

ராம - ராவண யுத்தம்.  முதல் நாள் போரில் அனைத்தையும் இழந்து "இன்று போய் நாளை வா" என்று ராமனால் அனுப்பி வைக்கப்பட்ட ராவணன் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை திரும்புகிறான்.

எப்படி திரும்புகிறான்?....

அதுவரை கம்பீரமாக நிமிர்ந்தே நின்று பழக்கப்பட்ட அவன் முதல் முதலாக பூதலம் என்னும் நங்கை தன்னையே நோக்கி போர்க்களத்திலிருந்து திரும்பிகிறான்.

அவனது மனநிலையை கம்பனின் அடியொற்றி எளிய வார்த்தைகளில் மருதகாசி அற்புதமாக வடிவமைக்கிறார்.

"இன்று போய் நாளை வாராய் என 

எனை ஒரு மனிதனும் புகலுவதோ 

மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும்

நிலை இன்றே ஏன் கொடுத்தாய்.." என்று சிவபெருமான் முன்னால் கசிந்துருகி தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்க்கிறான் ராவணன்.

"திலங்" ராகத்தில் இந்தப் பாடலை கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் விதமும், அதை  சி.எஸ். ஜெயராமன் பாடி இருக்கும் அழகும் அலாதி.

ஒரே வார்த்தையில் இருபொருள் தொனிக்கும் "சிலேடை" வகையில் மருதகாசி வார்த்தையில் விளையாடி இருக்கிறார்.

"மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்?" என்று ஆண்டவனிடம் ராவணன் கேட்கிறான்.

சாதரணமாக "மண்மகள்" என்ற வார்த்தை பூமாதேவியைக் குறிக்கும்.  "நிலம் நோக்கி தலை குனிந்து வரும் நிலையை எனக்கு ஏன் கொடுத்தாய்?" என்று ராவணன் குமுறுவதாக பொதுப்படையாக பார்த்தால் அர்த்தம் தொனிக்கும்.

ஆனால் கம்பன் ராவணன் நாணத்தால் வருந்தக் காரணம் என்று சொல்வது எதைத் தெரியுமா?

வானவர் சிரிப்பார்கள்.  மண்ணில் உள்ள அனைவரும் நகைப்பார்கள்.  தனது கட்டுப்பாட்டில் உள்ள பகைவர்கள் எல்லாரும் தனது தோல்வியைக் கண்டு கைகொட்டிச் சிரிப்பார்களே என்று அதற்கெல்லாம் ராவணன் வருந்தவில்லையாம்.

"வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த

சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்"

தான் கவர்ந்து வந்த சீதை ராமனிடம் முதல் நாள் போரில் தான் தோற்றதை அறிந்தால் சிரிப்பாளே என்றுதான் அவமானத்தால் புழுங்கினான் ராவணன் - என்கிறான் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

இப்போது மருதகாசியின் பாடல் வரியை மறுபடி பார்த்தால்..

மண்மகள் என்ற வார்த்தைக்கு "மண்ணின் மகள்" - அதாவது பூமாதேவியின் மகளான சீதா தேவி என்ற அர்த்தம் கிடைக்கிறதல்லவா?

அதாவது  "மண்ணின் மகளான சீதாதேவியின் இளக்காரமான நகைக்கும் முகத்தைக் கண்டு மனம் அவமானத்தால் கலங்குகிறதே. இந்த நிலையை ஏன் கொடுத்தாய்?" என்று ராவணன் குமுறுகிறான். 

அந்தக் குமுறலை படத்தைப் பார்க்காமலே துல்லியமாக கேட்பவரை உணரவைக்கும் வண்ணம் இசை அமைத்திருக்கிறார் என்றால்.. அதுதான் கே.வி. மகாதேவன்.

பாடலின் சரணத்தைக் கே.வி. மகாதேவன் அமைத்திருக்கும் விதமோ..

"எண்திசை வென்றேனே..." என்று பாடலை அவனது உயர்வைக் காட்டும் விதமாக உச்சத்துக்கு கொண்டு சென்றவர் மெல்ல மெல்ல கீழிறங்கி கடைசியில் "மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்"  என்ற வரிகளுக்கு மீண்டும் வந்து.. முடிக்கும் போது அவனது மனக்குமுறலை பிரதிபலிக்கும் வண்ணம் மறுபடி உச்சத்துக்கே கொண்டுபோய் நிறுத்தி பாடலை அப்படியே முடித்திருக்கிறார் மகாதேவன்.   திலங் ராகத்தையே உச்சத்துக்கு ஏற்ற அவருக்கு சி.எஸ். ஜெயராமனின் குரல்வளம் பேருதவி புரிந்திருக்கிறது.  

இன்றளவும் படத்தின் பெயர் சொன்னால் போதும்.. உடனே நினைவுக்கு வரும் பாடலாக "இன்று போய் நாளை வாராய்"  பாடல் நிலைத்திருப்பது ஒன்றே பாடலின் பெருவெற்றிக்கு சாட்சி.

சம்பூர்ண ராமாயணம் படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் கே.வி. மகாதேவன் தமிழ்த் திரை உலகில் தவிர்க்கமுடியாத இசை அமைப்பாளராகிவிட்டார்.

தொடர்ந்து வெளிவந்த "பொம்மைக் கல்யாணம்",  "மனமுள்ள மறுதாரம்” ஆகிய படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றாலும் மகாதேவனின் இசை அமைப்பில் சில பாடல்கள் இன்றும் நம் நினைவில் நிற்கும் வண்ணம் அமைந்து விட்டன.

இதில் "பொம்மைக் கல்யாணம்" படத்தில் சிவாஜி கணேசனுக்கான பாடல்களை ஏ.எம். ராஜாவைப் பாடவைத்தார்.  

"அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே" - என்ற ஏ. எம்.ராஜா - ஜிக்கி பாடும் பாடல் இன்றளவும் பிரபலமான ஒரு பாடல்.

"மனமுள்ள மறுதாரம்" -  முரசொலி மாறன் கதை வசனம் எழுதிய படம்.  பாலாஜி - சரோஜா தேவி இணைந்து நடித்த படம்.

இந்தப் படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலித்த "இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு" என்ற மருதகாசியின் பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம் பெற்ற ஒரு பாடல்.

இப்படி வெளிவந்த படங்களில் எல்லாம் வெற்றிப்பாடல்களைக் கொடுத்தபடி வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தார் கே.வி. மகாதேவன்.

இந்த நிலையில் ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்து வளர்த்துவிட்ட "மாடர்ன் தியேட்டர்ஸ்" நிறுவனத்தோடு மீண்டும் இணையும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.

அந்தப் படத்தில் அவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக மாறி காலத்துக்கும் அவரது பெயரை நிலை நிறுத்திவிட்டன.

அந்தப் படம்தான்  "வண்ணக்கிளி"

(இசைப் பயணம் தொடரும்..)

(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

ஜுலை   14 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com