அதிர்ச்சிதரும் ஒரு செய்தி! - அறம்பொருள் இன்பம்-சாரு பதில்கள் - 6

அதிர்ச்சிதரும் ஒரு செய்தி! - அறம்பொருள் இன்பம்-சாரு பதில்கள் - 6

கேள்வி: நான் உங்கள் ஆரம்ப நிலை வாசகன். இதுவரை நான் படித்த உங்கள் பதிவுகளிலோ புத்தகங்களிலோ உங்கள் புனைப்பெயாரான சாரு நிவேதிதாவிற்கு காரணம்                           தெரியவில்லை. எனக்கு உங்களை அறிமுகம் செய்து வைத்த அன்பருக்கும் தெரியவில்லை.  நீங்களாவது கூறுங்களேன்?  

சக்தி,கோவை

பதில்: இதுவரை நான் 50 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதற்கு மேலும் இருக்கலாம்.  அவ்வளவையும் ஒன்று ஒன்றாகப் படித்தால் உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்கும்.  இருந்தாலும் இப்போது மீண்டும் சொல்கிறேன்.  பதின் பருவத்தில் நான் ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தேன்.  ராஜா சர்ஃபோஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது வாரம் ஒருமுறை மௌன விரதம் எல்லாம் இருப்பேன்.  ஒரு காகிதத்தில் இன்று மௌன விரதம் என்று எழுதி எடுத்துக் கொண்டு போவேன்.  கல்லூரியில் படித்தாலும் பெரும் பகுதி நேரம் இருந்தது சரஸ்வதி மஹால் நூலகத்தில்தான்.  அதுதான் என்னை வளர்த்த இடம்.  காலையில் பத்து மணிக்குப் போனால் மாலை ஆறு மணிக்குத்தான் கிளம்புவேன்.  இடையில் ஒரு தேநீர் அருந்துவதற்குக் கூட கையில் காசு இருக்காது.  அந்தக் கால கட்டத்தில் சில சித்தர்களிடம் யோகமும் பிராணாயாமும் கற்றுக் கொண்டேன்.  அதுதான் இன்று வரை என் ஆரோக்கியத்துக்குக் காரணமாக இருக்கிறது.  ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், சேஷாத்ரி மஹரிஷி ஆகியோரின் உபதேசங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு வாசித்தேன்.   நிவேதிதா என்ற பெயரில் ஆன்மீகப் பத்திரிகைகளில் எழுதினேன்.  விவேகானந்தரின் சிஷ்யை பெயர் அது. 

ஆனால் எமெர்ஜென்ஸி காலகட்டத்தில் தலைமறைவாக இருந்த சில எம்.எல். தோழர்களைச் சந்தித்த போது எல்லாம் தலைகீழாய் மாறியது.  மார்க்சீயத்தைப் படித்தேன்.  ஏழ்மையான நாடுகளில் வாழும் இளைஞர்களை வசீகரிக்கக் கூடிய தத்துவம் அது. உடனே நிவேதிதா என்ற பெயரோடு இந்தியாவின் எம்.எல். போராளியாக இருந்த சாரு மஜூம்தாரின் முதல் பெயரைச் சேர்த்துக் கொண்டேன்.  அடுத்த இருபது ஆண்டுகள் ஆன்மீகத்தைத் துறந்தேன்.  அதன் பிறகு வட்டம் முழுமையானது.     

கேள்வி: 1. கடவுள் - பக்தன், குரு - சிஷ்யன், ஆசிரியர் -மாணவன், எழுத்தாளர் – வாசகன்.  மேற்கண்ட  உறவுமுறைகளை விளக்கவும்.இவற்றில் பக்தன்,சிஷ்யன், மாணவன், வாசகன் எப்படி இருக்க வேண்டும்? 

2. ஜோதிடத்தில் தங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

3.மன ஆற்றலை அதிகரிப்பது எப்படி? இதற்கு  எதாவது உணவு முறைகள் 

உள்ளனவா? சில நேரங்களில் இயங்க மறுக்கும் மனதை சுறுசுறுப்பு ஆக்குவது எப்படி?

மா. செல்வநாதன், லண்டன் 

 பதில்: 1. பக்தன் என்றால் பிள்ளைக் கறியமுது கேட்ட சிவனுக்குத் தன் ஒரே புதல்வனை மனைவி பிடித்துக் கொள்ள அரிந்து அமுது படைத்த சிறுத்தொண்டர் ஞாபகம்தான் வருகிறது.  சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் இந்த இடம் என் மனம் நெகிழச் செய்த ஒன்று.

குஞ்சி திருத்தி, முகம் துடைத்துக் கொட்டை

அரைநாண் துகள் நீக்கி

மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி, மையும்

கண்ணின் மருங்கொதுங்கிப்

பஞ்சி அஞ்சும் மெல்லடியார் பரிந்து

திருமஞ்சனமாட்டி

எஞ்சல் இல்லாக் கோலம் செய்தெடுத்துக்

கணவர் கைக் கொடுத்தார்.

தன் மைந்தனின் தலைமயிரைத் திருத்தி, முகம் துடைத்து, கடுக்கனிலும் அரைஞாணிலும் படிந்த தூசி போக்கி, கண் சாந்து அழிந்ததற்கு வருந்தி அதை ஒதுக்கி, பஞ்சும் அஞ்சத்தக்க மென்மையான அடியை உடைய திருவெண்காட்டு நங்கை திருமஞ்சனம் (நீராடுதல்) செய்து குறையாத கோலம் செய்து கணவர் சிறுத்தொண்டரின் கையிலே மைந்தனைக் கொடுத்தார் என்கிறது இந்தப் பாடல்.

இதற்கு தமிழ் ஹிந்துவில் விளக்கம் எழுதும் போது,  ”சிறுவனின் அழகைக் கண்டதும் முத்தமிட வேண்டும் என்று எழுந்த ஆசையையும் அடக்கிக் கொண்டார்களாம், அடியவருக்குப் படைக்கப் போகும் அமுதில் தம் எச்சில் பட்டுவிடக் கூடாதே என்று!” என்று எழுதுகிறார் எஸ். ஜயலக்ஷ்மி.  அற்புதம்.

சிஷ்யன், மாணவன், வாசகன் என்ற மூன்று நிலைகளும் ஒன்றுதான்.  சமீபத்தில் ஒரு நண்பர் என்னைத் தொடர்பு கொண்டார்.  பெயர் அமானுல்லா, நாகூர் ரூமியின் நண்பர் என்றார்.  நாகூரா என்றேன்.  ”நாகூர் மட்டும் அல்ல; ரூமியின் வீட்டில் வைத்து எத்தனையோ நாட்கள் நீங்கள் இலக்கியம் பேசியிருக்கிறீர்கள்.  அதைக் கேட்டுக் கேட்டுத்தான் இலக்கியத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.  அதையேதான் கல்லூரியில் பாடமாகவும் எடுத்து இப்போது ஆங்கிலப் பேராசிரியராக இருக்கிறேன். என்னை நேரில் பார்த்தால் உங்களுக்கு அடையாளம் தெரியும்” என்றார்.   சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சில நண்பர்களுக்கு இலக்கியம் பயிற்றுவித்திருக்கிறேன் என்பது முக்கியமாகத் தெரியவில்லை.  அதை அமானுல்லா சொன்ன போது அவர் குரலில் தெரிந்த நெகிழ்ச்சி தான் என்னை ஈர்த்தது. 

இன்னொரு சம்பவம்.  என்னுடைய வாசகர் வட்டத்தில் எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமான ஒருவர் கணேஷ் அன்பு.  மனுநீதிச் சோழன் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு லஞ்ச ஊழலில் திளைக்கும் இந்தக் கலிகாலத்தில் பெயருக்கேற்ற குணம் வாய்த்தவர் அன்பு.  மீன்களிலேயே எனக்கு ரொம்பப் பிடித்தது விரால் மீன். ஏரி, கிணறு, குளங்களில் கிடைக்கும்.  கடல் விராலும் உண்டு.  ஆனால் அது கிடைப்பது அரிது. விரால் மீனை உயிரோடுதான் விற்பார்கள்.  ஆனால் பொதுவாக சந்தைகளில் இந்த மீன் கிடைப்பதில்லை என்று என் ப்ளாகில் எழுதியிருந்தேன்.  அதைப் படித்து விட்டு போரூரில் வசிக்கும் கணேஷ் அந்த மீனை வாங்கிக் கொண்டு வந்து மைலாப்பூரில் இருக்கும் என் வீட்டுக்கு வந்து கொடுப்பார்.   இதைப் பார்த்து விட்டு என் மனைவி அவந்திகா, “இப்படி ஒருவரை அலைய வைப்பது பாவம் இல்லையா?” என்றாள்.  கணேஷ் என் மகன் என்றேன்.

உங்கள் இரண்டாவது கேள்வி:  ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இருப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.  ஆனால் அதிசயிக்கத்தக்க சில ஜோதிடர்களை நான் சந்தித்திருக்கிறேன்.  ஜோதிடத்தில் எத்தனையோ வகை உண்டு.  பகுத்தறிவுவாதிகள் நினைப்பது போல் ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்தது அல்ல.  அது ஒரு விஞ்ஞானம்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதில் ஏகப்பட்ட சராசரிகளும் பொய்யர்களும் புகுந்து அதன் பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

சமீபத்தில் மூன்று ஜோதிடர்களிடமிருந்து எனக்குச் செய்திகள் கிடைத்தன.  மூன்று பேருமே என் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் மூன்றையும் கணித்துச் சொன்னார்கள்.  சிலர் கடந்த காலத்தைச் சரியாகச் சொல்லி விட்டு எதிர்காலத்தில் சொதப்பி விடுவார்கள்.  ஆனால் இவர்கள் விஷயம் அப்படியல்ல.    முதலாமவர், ப்ரியங்கா சோப்ராவின் ஆஸ்தான ஜோதிடர் கஜானந்த்.  இவரை நான் நேரில் சந்திக்கவில்லை.  இவரை அடிக்கடி சந்திக்க நேரும் என் நண்பர் இவரிடம் என் பெயரைச் சொல்லியிருக்கிறார்.  இவரிடம் பெயரும் பிறந்த நேரமும் தேதியும் சொன்னால் போதும்.   சிறிது நேரம் தியானத்தில் இருந்து எல்லாவற்றையும் படம் பார்ப்பது போல் பார்த்துச் சொல்லி விடுவார்.  என்னைப் பற்றிச் சொன்ன போது அவர் என்னைப் பார்த்திருக்கிறார்.  என் உருவம், அங்க அடையாளம் அத்தனையும் சொன்னாராம்.   எனக்கு மட்டுமே தெரிந்த சில ரகசியங்களையும் என் நண்பர் சொன்ன போது மிரண்டு போனேன்.

இன்னொருவர் கைரேகை பார்ப்பவர்.  பல்லாயிரக் கணக்கான பேருக்குப் பார்த்து விட்டதால் இப்போது பொதுமக்களுக்குப் பார்ப்பதில்லை.  மூன்றாமவர், மைலாப்பூரில் இருக்கிறார்.  கே.வி.எல்.என். ஷர்மா.  இவர் ஜாதகத்தைப் பார்த்து முக்காலத்தையும் கணிப்பவர்.  ஆச்சரியம் என்னவென்றால், திருஷ்டி, கைரேகை, ஜாதகம் ஆகிய மூன்று முறைகளிலும் என் வாழ்க்கையைக் கணித்தவர்கள் கூறிய அத்தனை விஷயங்களும் ஒன்றே போல் இருந்தன.  என் ஆயுளைக் கூட இந்த மூவரும் ஒரே மாதிரி கணித்திருக்கிறார்கள், ஒரு வருடம் கூட பிசகாமல். 

கைரேகை மூலமும் முகத்தை வைத்தும் கணிக்கக் கூடிய இன்னொருவரையும் எனக்குத் தெரியும். சில பிரபலங்களின் ஜாதகங்கள் நமக்குக் கிடைக்கின்றன அல்லவா, அதை இவரிடம் பெயர் சொல்லாமல் கொடுப்போம்.  மிகச் சரியாக சொல்லி விடுவார்.  பலமுறை இதை சோதித்துப் பார்த்திருக்கிறோம்.  ஒரு மூத்த அரசியல் தலைவரின் ஜாதகத்தைக் காண்பித்தோம்.  கிட்டத்தட்ட அவருடைய வாழ்க்கை வரலாற்றையே சொன்னவர் முடிவாக, அவருக்குப் பதவி எதுவும் கிடைக்காது என்றார்.  அதற்குப் பிறகுதான் அவரிடம் நாங்கள் பெயரையே சொன்னோம்.  எல்.கே. அத்வானி.    இப்பேர்ப்பட்டவரிடம் ஒரு கெட்ட குணம் என்னவென்றால், நன்மை தீமை இரண்டையும் பாரபட்சம் இல்லாமல் சொல்லி விடுவார்.  அப்படி அவர் சொன்ன ஒரு ஆரூடம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு மிக அதிர்ச்சியான மரணச் செய்தியை சந்திக்கும்.  அரசியல் சார்ந்தது அல்ல என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன். 

இன்னொரு முக்கிய விஷயம்.  நான் யாருக்கும் ஜோதிடர்களை அறிமுகப்படுத்துவதில்லை.  ஏனென்றால், இன்றைய வாழ்வில் மனிதன் அறத்தை இழந்து விட்டான்.  பணத்துக்கு அடிமையாகி விட்டான். நம்பவே முடியாத அளவுக்கு சுயநலமி ஆகி விட்டான்.  ஜோதிடர்களைப் பார்த்து எனக்கு எப்போது பணம் கிடைக்கும், என் மகளுக்கு எப்போது திருமணம், என் மகன் எப்போது பங்களா கட்டுவான் என்றே கேட்கிறார்கள்.   தான் வாழ்கின்ற இந்த பூமிக்கும், தன்னோடு கூட வாழும் மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் நாம் என்ன செய்கிறோம்? நான் பிச்சைக்காரனைப் பார்க்கும் போதெல்லாம் ஐந்து ரூபாய் போடுகிறேன் என்பது அறம் அல்ல.  அப்படியானால் எது அறம்?

பண்டரீபுரத்தில் ராக்கா என்ற குயவர் வாழ்ந்து வந்தார்.  மனைவி பெயர் பாக்கா.  ஒருநாள் இவர் சூளையில் பானைகளை அடுக்கி விட்டு பாக்காவிடம் சூளைக்குத் தீ மூட்டுமாறு சொன்னார். மறுநாள் வந்து பார்த்த போது ஒரு தாய்ப்பூனை சூளையைச் சுற்றிச் சுற்றி வந்து அழுது கொண்டிருந்தது.  ஒருவேளை சூளைக்குள் இதன் குட்டிகள் இருக்குமோ என்று சந்தேகம் அடைந்து தான் வணங்கும் பாண்டுரங்கனிடம் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்களைக் காப்பாற்றியது போல் இந்தப் பூனைக்குட்டிகளைக் காப்பாற்று; அப்படிச் செய்தால் நான் இந்தத் தொழிலையே விட்டு விடுகிறேன்  என வேண்டினார். இரண்டு நாட்களும் அதே பிரார்த்தனையில் இருந்தார். மூன்றாம் நாள்  சூளை வெந்து தணிந்ததும் பார்த்த போது ஒரு பானையில் பூனைக்குட்டிகள் பத்திரமாக உயிரோடு இருந்தன. 

பாக்கா தொழிலை விட்டு விட்டு தன் உடமைகளையெல்லாம் தானம் செய்து விட்டு ஒரு குக்கிராமத்தில் எளிய வாழ்க்கை வாழத் துவங்கினார்.  அப்போது ராக்காவும் பாக்காவும் ஒரு காட்டில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.  அந்தச் சுள்ளியின் அடியில் மாணிக்க வளையல் ஒன்று கிடந்தது.  உடனே பாண்டுரங்கன் தான் நம்மைச் சோதிக்கிறான் என்று ராக்காவும் பாக்காவும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.  உடனே பாண்டுரங்கன் அவர்களுக்குக் காட்சி கொடுத்தான் என்கிறது கதை.  ஆனால் இந்த பாண்டுரங்க தரிசனத்தைத் தவிர மற்ற எல்லா விஷயங்களையும் நான் மேற்கத்திய நாடுகளில் பார்த்திருக்கிறேன்.  அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படாமல், அடுத்தவரை இம்சிக்காமல் வாழ்ந்தால் அதுவே பெரும் அறம் என நாம் கற்க வேண்டும்.   வீட்டில் ஒரு பூரான் வந்தால் கூட அதை அடிக்கக் கூடாது.  இந்த உலகில் நம்மைப் போல் அதற்கும் வாழ உரிமை இல்லையா?  ஒரு குச்சியால் எடுத்து வெளியே போட்டு விட்டால் அது பாட்டுக்குப் போய் விடும்.  பாம்பு விஷயமும் அப்படியே.  இப்படிப்பட்ட விஷ ஜந்துக்களை விட மனிதனின் விஷம்தான் கொடுமையானது என்று நினைக்கிறேன். ஒருசில விதிவிலக்குகளையும் பார்க்கிறேன். மெரினா கடற்கரையில் தினமும் ஒருவர் கை நிறைய தானியங்களை வைத்துக் கொண்டு காகங்களுக்கும் புறாக்களுக்கும் போட்டுக் கொண்டிருப்பார்.  தினமும் இந்தக் காட்சியை காலையில் காந்தி சிலை அருகே காணலாம். இப்படிப்பட்ட பல்லுயிர் ஓம்பும் பண்பாளர்கள் மட்டுமே ஜோதிடரை அணுகலாம்.  ஆனால் அப்படிப்பட்ட பண்பாளர்களுக்கு ஜோதிடர்கள் தேவையில்லை என்பதுதான் நகைமுரண். 

நாகேஸ்வர ராவ் பூங்காவில் இன்னொரு அற்புதக் காட்சி.  ஒருவர் தினந்தோறும் ஒரு மணி நேரம் கையில் மௌத் ஆர்கனை வைத்துக் கொண்டு ட்சைக்காவ்ஸ்கியையும் (Tchaikovsky), தெபூஸியையும் (Debussy) இன்னும் பல மேற்கத்திய சாஸ்த்ரீய கலைஞர்களையும் வாசித்துக் கொண்டிருப்பார். (அதன் பெயர் மௌத் ஆர்கன் அல்ல; ஹார்மோனிகா என்று சொன்னார்.)  ஒருநாள் அவர் ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது ராகவன் அவரிடம் சென்று இது ட்சைக்காவ்ஸ்கியின் ஸ்வான் லேக் தானே என்று கேட்டதும் அவர் நெகிழ்ந்து விட்டார்.  அந்த மனிதர் எதற்காக இதையெல்லாம் வாசிக்கிறார்?  அந்தப் பூங்காவில் உள்ள அத்தனை விருட்சங்களுக்காகவும்தான்.  அந்த விருட்சங்கள் அவருடைய சங்கீதத்தை ரசிப்பதை நான் உணர்கிறேன்.  அவரும் அந்த விருட்சங்களும் நானும் ராகவனும் ஒன்றாக இணையும் அற்புதத் தருணம் அந்தக் காலை நேரம்… 

நாம் வாழும் பூமிக்கு நன்றி தெரிவிக்காதவர்கள் எந்த ஜோதிடரையும் அணுகிப் பிரயோஜனம் இல்லை.   

மன ஆற்றல், உடல் ஆற்றல் எல்லாவற்றுக்குமான ஒரே வழி, ஒரே தீர்வு யோகா தான்.  பூங்காக்களில் பலரும் நடைப் பயிற்சி செய்யும் போது எனக்கு மிகவும் விசனமாக இருக்கும்.  ஏனென்றால், நடைப் பயிற்சியை விட பல மடங்கு உடல் ஆரோக்கியத்தைப் பேணக் கூடியது யோகா.  இன்றைய முக்கியப் பிரச்னைகளான ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரழிவு போன்ற எல்லாவற்றையும் இல்லாமல் ஆக்கி விடக் கூடியது யோகா.  மன ஆற்றலுக்குக் கீழ்வரும் யோகாவைப் பயிற்சி செய்யுங்கள்:

துணி விரித்து அதன் மேல் கால்களை சம்மணம் இட்டு அமருங்கள்.  முடிந்தால் பத்மாசனத்தில் அமரலாம்.  கண்கள் மூடி இருக்க வேண்டும்.  இப்போது கைகள் இரண்டையும் தோள்களுக்குச் சமமாக உயர்த்துங்கள்.  பிறகு இரண்டு கைகளையும் ஒரு சேர மேலே ஆறு இஞ்ச் அளவுக்கும் உடனே கீழே ஆறு இஞ்ச் அளவுக்கும் பறவை இறக்கைகளை விரித்துப் பறப்பது போல் மேலும் கீழும் வேகமாக ஆட்ட வேண்டும்.  மெதுவாக அல்ல; வேகமாக.  முதலில் ஒரு நிமிடமும் பிறகு 3, 5, 7 என்று உயர்த்திக் கொண்டு போகலாம்.  பறவை காற்றில் எப்படி மிதக்கிறதோ அதேபோல் நம் மனமும் மிதக்கும் என்பது இந்த ஆசனத்தின் தத்துவம்.

மன ஆற்றலைப் பெருக்குவதற்கு இன்னொரு அற்புதமான வழி அஷ்டாங்க யோகா.  இதை யாராவது ஒரு குருவிடம் கற்றுக் கொள்ளுங்கள்.  அல்லது, பாபா ராம்தேவின் அஷ்டாங்க யோகா பயிற்சியை யூட்யூபிலிருந்து பலமுறை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  இது ஒன்றே போதும், ஆரோக்கிய வாழ்வுக்கு.  பாபா ராம்தேவ் ஒரு பிரமாதமான யோகா ஆசிரியர்.  இந்தியாவில் இவர்தான் நம்பர் ஒன் என்று சொல்வேன்.  ஆங்கிலம் தெரிந்திருந்தால் நம் தமிழ் சாமியார்களை மிஞ்சி சர்வதேச அளவில் பிரபலமாகியிருப்பார்.   ஆனால்  இந்தியில் பேசுவதால் வட நாட்டில் மட்டுமே பிரபலம்.  அதுவும் அதிக நேரம் பேசுகிறார்.  அலுப்பாக இருக்கும்.  அப்படி இருந்தால் வேறு ஏதேனும் யூட்யூப் இணைப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.  பேரழகிகளான இந்தியப் பெண்கள் பலர் வெளிநாடுகளில் அஷ்டாங்க யோகா கற்பிக்கிறார்கள்.  நீங்கள் லண்டனில் இருப்பதால் சொன்னேன்.  ஆனால் அங்கெல்லாம் கன்னாபின்னா என்று பணம் பிடுங்குகிறார்கள்.  அதனால் யூட்யூபிலேயே தேடிப் பாருங்கள் அஷ்டாங்க யோகாவை.

சரி, இவ்வளவு சொல்லி விட்டு நான் ஏன் காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு நடைப் பயிற்சிக்குப் போகிறேன் என்று கேட்கிறீர்களா?  நான் நாள் முழுவதும் எழுதிக் கொண்டோ படித்துக் கொண்டோ என் அறையிலேயேதான் அடைந்து கிடக்கிறேன்.  இல்லாவிட்டால் சமையல் அறை.  இதைத் தவிர வெளியே செல்வதே கிடையாது.  யாரையும் சந்திப்பதும் இல்லை.  அவ்வப்போது நடக்கும் வாசகர் வட்டச் சந்திப்பு தவிர வேறு மனித நடமாட்டமே என் வாழ்வில் இல்லை.  அதனால் வெளிக் காற்றை சுவாசிக்கவும், மனிதர்களையும் விருட்சங்களையும் பார்க்கவும்தான் காலையில் நடைப் பயிற்சிக்குப் போகிறேன்.  இன்னொரு காரணம், ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன்.  எக்ஸ்ட்ரா பிட், மஹாமுத்ராவின் அற்புதமான காஃபி.   

கேள்வி: ஃபிலிஸ்டைன் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறீர்களே, அதன் பொருள் என்ன?

ஜெ. ராஜசேகர், மதுரை.

பதில்: Philistines என்ற வார்த்தை பைபிளில் பழைய ஏற்பாட்டில் நியாயாதிபதிகள் என்ற அத்தியாயத்தில் வருகிறது.  “என் ஜீவன் பெலிஸ்தரோடே கூட மடியக் கடவது” என்று சாம்ஸன் சொல்கிறான்.  இந்த பெலிஸ்தர் தான் ஃபிலிஸ்டைன்.  கவிஞர் மாத்யூ ஆர்னால்ட் தான் முதல் முதலில் இந்த வார்த்தையை புத்திஜீவிகளுக்கு எதிரான சராசரி என்ற பொருளில் பயன்படுத்தினார்.  யாரெல்லாம் கலை, இலக்கியத்துக்கு எதிரானவர்களோ, கலாச்சார சுரணை உணர்வு இல்லாதவர்களோ அவர்கள் ஃபிலிஸ்டைன்.  அந்த வகையில் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமே ஃபிலிஸ்டைன் என்கிறேன் நான்.  சில விதிவிலக்குகள் இருக்கலாம்.  ஆனால் பெரும் நீதிமான்கள், கல்வியாளர்கள், அறிவியல் அறிஞர்கள், அதிகாரிகள் போன்றவர்களே இலக்கியம் பற்றி எதுவும் தெரியாத சமூகமாக இருக்கிறது தமிழ்நாடு என்பதுதான் என் கவலை. 

சகாயம் ஐஏஎஸ் என் மதிப்புக்குரியவர்.  என் ஹீரோ என்றே சொல்லுவேன்.  பணமும் ஊழலும் அதிகாரத்துக்கு ஜால்ரா போடுவதுமே லட்சியமாகி விட்ட இன்றைய சூழலில் இது எல்லாவற்றையும் தனி ஆளாக எதிர்த்து நின்று வாழும் அதிகாரி அவர்.  அப்பேர்ப்பட்ட ஹீரோக்களே காமெடியன்களாக மாறும் ஃபிலிஸ்டைன் சூழல் நம்முடைய சூழல்.  ”இன்று தமிழ்நாட்டில் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாத்து வருவது எழுத்தாளர்களோ, பேச்சாளர்களோ, இலக்கியவாதிகளோ அல்ல. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் தமிழ்மொழியை தொடர்ந்து கற்று, அதனை அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். தமிழ் வழிக் கல்வியை அவர்கள் கற்பதன் மூலம், தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பேணிப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றி வருகிறார்கள்” என்று பேசியிருக்கிறார் சகாயம் ஐஏஎஸ். 

வெறுமனே தமிழ் எழுதத் தெரிந்தால் தமிழ் வளர்ந்து விடும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய அறியாமை.  தமிழ் இன்று செம்மொழியாக நிலைத்து நிற்பதற்குக் காரணம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் படித்த மாணாக்கர்கள் இல்லை;  அரசர்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்த சங்கக் கவிஞர்கள்.  தொல்காப்பியனும் வள்ளுவனும் கம்பனும் இளங்கோவும் ஆண்டாளும் ஆழ்வார்களும் வளர்த்த தமிழ் இது.  வேறு எந்தப் புடுங்கியும் அல்ல.  குறைந்த பட்சம் 5000 ஆண்டு இலக்கியப் பாரம்பரியம் கொண்ட தமிழை நவீனப்படுத்தியவன் பாரதி.  அவனுடைய பந்தத்தை ஏந்திக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பவர்கள் இன்றைய எழுத்தாளர்கள்.  இவர்களால் மட்டுமே தமிழ் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  சகாயம் நேர்மையான அதிகாரி.  ஆனால் இலக்கிய அறிவு இல்லாத ஒரு ஃபிலிஸ்டைன் சமூகத்திலிருந்து உருவானவர்.  தமிழ்நாட்டை நினைத்தால் கவலையாக இருக்கிறது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com