உணர்வுகளின் கொந்தளிப்பிலோர் சமகால ஆவணம்..

இதமாய் பெய்யும் மழை 2

கொனாரக்பாட்டியின் ஊன்றுகோல்

கவிதை : த . பழமலய்

' சனங்களின் கதை ' ' குரோட்டோன்களோடு கொஞ்ச நேரம் ' போன்ற சாதனை தொகுப்புகளை தந்து இலக்கிய உலகில் மிகவும் பரவலாக , உன்னிப்பாக பேசப்பட்ட கவிஞர் பழமலய் தந்திருக்கும் பத்தாவது கவிதை தொகுப்பு ' கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்.."
ஒரு படைப்பாளிக்கு கவிதைக்கான விதை எங்கிருந்து கிடைக்ககூடும் ?
எதிலிருந்து தான் எல்லாவற்றிலிருந்துதான் என்பதை பதிலாக்கி
தொகுத்திருக்கும் - 64 - கவிதைகளும் வேறு வேறு செய்திகள் குறித்து -
தனி மனித விசாரம் , சமூக அரசியல் விமர்சனம் என பேசுகின்றன.
ஒரு குறிப்பிட்ட களத்தை மையமாகக் கொண்டு அந்த கருப்பொருள் சார்ந்த , அந்த அனுபவம் சார்ந்த கவிதைப் பதிவுகளே இது காணும் பழமலய் பாணியாக அறியபட்டு வருகிறது , அவர் வகுத்த விதியை அவரே மீறியிருக்கும் தொகுப்பு இது. கவிஞரின் படைப்பு உத்தி பலரும் அறிந்தது தான் உரை நடைக்குள் கவிதை பொதிந்த வெளிப்பாடுதான் அது.
தொகுப்பின் முதல் கவிதையான 'எழுத வேண்டிய கவிதை : இவைக் குறிப்புகள் ' என்பதில் செய்திக் குறிப்பு துண்டுகளே கவிதையென முன் வைக்கபடுகின்றன ,அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ் மீது செய்தியாளர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவத் தொகுப்புகளை தந்து இறுதி வரிகளாக எழுதுகிறார்.

" அல் - ஜெய்தியின் ஷூவை அழித்துவிட்டார்களோ
இருக்கிறதோ - அதற்கு பிறகும் செருப்புகளே இல்லாமல் போய்விடுமா என்ன..! - என்ற கேள்விக்கு பின்னாளில் விடையாகிறது ' வரிபுலி ' சிதம்பரத்தின் மீது வீசப்பட்ட செருப்பு , அதே நேரம் ஈராக்கிய செய்தியாளர்களின் சுரணையோடு , இந்திய குறிப்பாக தமிழக செய்தியாளர்களின் சூடு , சுரணை குறித்து அமைதியாக கேள்வி
எழுப்புகிறது.கவிஞரின் மூப்பும் , வயோதிகமும் உருவாக்குகிற அனுபவப் பதிவுகளும் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளன.
காலம் அழைத்து கொண்ட தந்தை தொடங்கி , செடிகளோடு பிரியங்காட்டும் பெயரன் சித்தார்த் வரை உறவுகளுக்கான ஏக்கம், உறவுகள் மீதான பெருமிதம் பொங்கி வழிந்தாலும், அதனுள்ளே நிலவுடைமை சிந்தனையின் தாக்கம் மறைந்திருப்பதையும் மறைக்க இயலவில்லை.


" அப்பா இல்லாத குறைக்கு - இவர்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறது ! " (பக் : 35)

" பேரப்பிள்ளைகளை பிரிந்திருப்பவர்களுக்கு
ஒட்டும் உறவுமே உண்டாக்கி விடுகின்றன
இழுத்து பிடித்து மடியில்
இருத்திக் கொள்ளத் தோன்றுகிறது " ( பக் : 31)
பலவற்றையும் பகுத்தறிவால் கேள்வி கேட்பவர்தான், கேள்வியேயின்றி அம்மா
சொன்னவுடன் ஓடைக்கரை கருப்பையும் , காத்த ஆயியையும் " குவார்ட்டர் கூட இல்லாமல் கல்பூரம் ஏற்றி கும்பிட்டு வருகிறார்.
திராவிட இயக்கம் விதைத்த பெருஞ்சிக்கலிது ! பெருதெய்வ வழிபாட்டை
மறுப்பவர்கள் , சிறு தெய்வங்களை கொண்டாடுவதின் பொருள் எமது
பகுத்தறிவுக்கு புலனாக வில்லை..
மக்கள் மழிப்பகம் - முதுமையின் முக்கிய பிரச்சனை ஒன்றினை நையாண்டியோடு
பேசுகிறதெனில் ' புறமுதுகு ' கவிதையில் நக்கல் வழிகிறது.
" ஏறக்குறைய அரைமுதுகுக்கு
இறங்கி அறிகிறார்கள்
இங்கு, வெயில் மழை படுவதில்
இருக்கிறதா எதாவது நன்மை.?

எது எப்படியோ , நம் பெண்களுக்கு இதில் , இவ்வளவு இளகிய மனம் கூடாது."பெண்ணியம் பேசுகிற பெரும்பாலோர்க்கு மிகப் பொறுமையுடன் பதில் சொல்ல வேண்டியிருக்கும் படைப்பாளி.
" என்று தொலையும் " - கவிதை இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்தை நாடக தன்மையோடு பதிவு செய்கிறது .
' ஒப்படைத்தல் ' - நூல்களைச் சேமிப்பவர்களின் வயிற்றில் புளி கரைப்பது !
எனக்கு பிறகு இந்த நூல்கள் யாருக்கு போகும் . என்ன வாகும் ? ஒவ்வொரு நூல் நேசருக்கும் உருவாகும் கவலை இங்கு கவிதையாகி இருக்கிறது.


' பருவ மழை - கவிதை மழையின் கோரத்தாண்டவத்தை பதிவு செய்து
" வட கிழக்கு பருவமழையில்
இடியும் சுவர்கள் தான் எத்தனை.!
மக்கள் - இளையர்கள் - முதியார்கள்
சிக்கி மடிகிறார்கள்
பார்க்கையில் , படிக்கையில்
நசுங்குகிறேன் நான்.."
(பக் : 65) என கவிஞரின் ஆற்றாமையை பதிவு செய்கிறது.
" அடுத்தவர் கவலையும்
என் கவலையாக இருக்கிறது "
" ஓ நீங்கள் கவிஞரா...? " (பக் ; 33)
என கவிஞனின் கவிமனம் பிடிபடும் தருணத்தில் இன்னொரு கவிதை வந்து வாசகனின் கன்னத்தில் அறைகிறது.
" கூரை ஒழுகலாம், சுவர்கள் இடியலாம் !
காய்வது நனையலாம், கால்நடை சாகலாம்,
மழை ! மழை. அது பெய்யட்டும்..!
ஆப்கன் , ஈழம் போன்ற சமகால வரலாற்றுத் துயரங்கள் பலவும் பதிவாகி
இருக்கின்றன இத்தொகுப்பின் உன்னதமான வரிகள் மிளர்கின்றன. அவ்வரிகள்
" கரிய மையால் எழுதுவது தான் சரி.
துயரத்தை இருட்டால் தான்
மொழிபெயர்க்க முடியும் " என்ற
கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல் - ஒரு காவியத் தன்மையோடு எழுதபட்ட சிறந்ததொரு படைப்பு.
2002 ல் தொடங்கி 2008 வரை எழுதியவற்றையெல்லாம் தொகுக்கும் ஆவலில் ' பழமலய் தடம் ' பாதைமாறியதை உணர முடிகிறது.
பின்னட்டைபடி , இந்நூல் கவிஞரின் பத்தாவது கவிதை தொகுதி , உரை நடை சேர்த்து பதினான்காம் நூல் .
பக் : 128ன் கணக்குபடி கவிதையாய் ஒன்பதாவது நூலாகவும் , மொத்தத்தில் 17 வது நூலாகவும் திகழ்கிறது , சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்கிற கவிஞரின் தயாரிப்பில் குறைவரலாகாது என்ற ஆதங்கத்தில் எழுதபட்டதிது.
சமகால நவீனக் கவிதைகள் புரிவதில்லை , புரியும் படி எழுதவில்லை என்ற
குற்றசாட்டுகளுக்கு பதிலாக ஓர் சமகால ஆவணமாக ,அணைவர்க்கும் திறக்கும்
கதவாக இருக்கிறது இந்த நூல், ஊன்றிப் படிக்கும் ஒவ்வொரு வாசகனுமிதை
உணரக்கூடும்.

- அன்பாதவன்

அன்பாதவனின் சொந்த ஊர் விழுப்புரம். கவிதை, சிறுகதை ,கட்டுரை என்று பரந்துபட்டு இயங்கும் அன்பாதவனின் எழுத்துக்களை சிறுபத்திரிக்கைகளில் அடிக்கடி பார்க்க முடியும்.அன்பாதவன் மதியழகன் சுப்பையாவோடு இணைந்து 'அணி' என்கிற கவிதைக்கான சிற்றிதழை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com