உரிமைக் குரல்

செவக்காட்டு சொல்கதைகள் 10

ஒரு ஊர்ல அண்ணனும் தம்பியும் இருந்தாங்க. அண்ணக்காரன் அப்புராணி, சுபமான ஆளு, பைத்தியாரன். ஆனால் தம்பி அவனுக்கு நேர் எதிர். ரொம்ப சூட்டிகையானவன். எந்த வேலையும் விவரமா செய்வான். எவ்வளவு பெரிய அதிகாரி என்றாலும், வந்திருக்கும் அதிகாரியிடம் பயப்படாமல் பேசுவான்.

 ரெண்டு பேருக்கும் கல்யாண வயசு வந்திட்டு. அவங்களுக்கு கல்யாணம் பண்ணி கண்ணாசை பார்க்கனும் என்று ஆசைப்பட்டாள்  அவர்களின் தாயார். மூத்த மகன் தன் தாயிடம் ‘அம்மா எனக்கு கல்யாணமே வேணாம் நான் இப்படியே கல்யாணம் பண்ணாமல் இருந்து கொள்கிறேன். ஒருத்தியை கட்டிக்கிட்டு வந்தால் , அவள் என்னை ‘அந்த வேலை செய், இந்த வேலை செய்’ என்னை அதிகாரம் பண்ணுவாள். நான் இப்படியே இருந்து என் காலத்தை தள்ளி விடுகிறேன்’ என்றான்.

 பெத்த மனசு சங்கடப்பட்டது, என்றாலும் கல்யாணமே வேண்டாம் என்பவனைக் கட்டாயப்படுத்தக் கூடாது. நம் பிள்ளையின்  நல்வாழ்வுக்காக, இன்னொரு பெண்பிள்ளையின் வாழ்க்கையை கெடுத்துவிடக் கூடாது ‘ என்று நினைத்து, இளைய மகனுக்கு பெண் பார்த்துக் கட்டி வைத்தாள்.

 தம்பி பொண்டாட்டி, மச்சானை ஏளனமாகப் பேசினாள். கேலி பேசுவது போல, குத்திப் பேசினாள். எனவே அண்ணக்காரன் ‘அந்த வீட்டை விட்டும் ஊரை விட்டும் போய் விடுவது’ என்று முடிவெடுத்து ஒரு நாள் நடு சாமம் போல கைச் செலவுக்கு மட்டும் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பினான்.

 இரவெல்லாம் கால் போன போக்கில் நடந்து பக்கத்து ஊரை அடைந்தான். அங்கு வேலை எதுவும் கிடைக்குமா? என்று விசாரித்தான். அந்த ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவர் ஒரு அரக்கன். வேலைக்காரர்களிடம் கடுமையாக வேலை வாங்குவார். ஆனால் அவர்களுக்கு சரியாகச் சாப்பாடும் கொடுக்க மாட்டார். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வேலைக்காரர்களைத் தந்திரமாக ஏமாற்றி விடுவார்.

 வேறு யாரும் அந்த அப்புரணிக்கு வேலை கொடுக்க முன் வரவில்லை. கடைசியில் விதியே என்று அந்தக் கொடுமைக்கார பண்ணையாரிடமே வேலைக்குச் சேர்ந்தான். அவன் காலை முதல் மாலை வரை பண்ணையாரின் தோட்டத்தில் வெலை செய்தான். பண்ணையார் அப்புரணிக்கு கால் வயிற்றுக் கஞ்சி மட்டும் கொடுத்தார். இப்படியாக ஒரு மாத காலம்  பண்ணையாரிடம் பசியோடும் பட்டினியோடும் வேலை செய்ததால் அண்ணக்காரன் ஆள் அடையாளம் தெரியாதபடி மெலிந்து போனான்.

  அண்ணக்காரன் வீட்டை விட்டு சொல்லாமல், கொள்ளாமல் போனதில் இருந்து அவன் தாய், அன்னந்தண்ணி குடிக்காமல் ’ஏ நாம் பெத்த மகனே, பைத்தியாரா... எங்கே கிடந்து தவிக்கியோ...?’ என்று புலம்பிக்கிட்டே கிடந்தாள். கடைசியில் அவளும் படுத்தபடுக்கையாகி விட்டாள்.

  தாயின்  நிலமையை பார்த்த தம்பிக்காரன், அண்ணனைத் தேடிப் புறப்பட்டான். நாலைந்து நாளில் விசாரித்து அண்ணக்காரன்  வேலை செய்யும் பண்ணையார் தோட்டத்திற்கு வந்தான். அங்கு அண்ணன் படுகிற பாட்டையும், அண்ணன் இருக்கிற கோலத்தையும் பார்த்து பரிதாபப் பட்டு, அண்ணா நீங்கள் ஊருக்கு வாருங்கள் என்று கூப்பிட்டான்.

பண்ணையார், ’ நான் உன் அண்ணனை ஒப்பந்தம் செய்துதான் வேலையில் சேர்த்திருக்கிறேன். ஒப்பந்தத்தை மீறீ நீ, உன் அண்ணனை கூட்டிக் கொண்டு போக முடியாது’ என்றார்.

 வெளியூரில் வந்து நாம் விவகாரம் பேசி ஜெயிக்க முடியாது என்று நினைத்த தம்பிக்காரன் உமக்கு வேலைக்காரன் தானே வேண்டும் என் அண்ணனுக்கு பதில் நான் வேலை செய்கிறேன் என்னை, வேலைக்காரனாக வைத்துக் கொண்டு என் அண்ணனை விட்டு விடும் ‘ என்றான்.

 ‘சரி’ என்று பண்ணையார் சம்மதித்தார். அண்ணக்காரனை அடிமைத் தலையில் இருந்து விடுவித்து நீ ஊருக்குப் போய் அம்மாவையும் , என் மனைவியையும் கவனித்துக் கொள். நான் இரண்டொரு நாளில் வந்து விடுகிறேன்’ என்றான்.

  பண்ணையார் வழக்கம் போல் தம்பிக்காரனுக்கு கடுமையான வேலை கொடுத்தார். இன்று ஒரு வாழைத் தோட்டத்தைத் துப்புறவு செய்ய வேண்டும் என்றார். தம்பிக்காரன், திருவாத்தான், வாழை மரங்கள் அனைத்தையும் வெட்டி ஒரு பள்ளத்தில் போட்டு அதன் மேல் மண்ணை அள்ளிப் போட்டு மூடி விட்டான்.

அன்றிரவு பண்ணையாரின் வீட்டு சமையல் காரனை மிரட்டி வயிறு நிறைய சோறு வாங்கிச் சாப்பிட்டான். காலையில் வாழத் தோப்பிற்குச் சென்று பார்த்தார் பண்ணையார், அங்கு வளர்ந்திருந்த வாழை மரங்களை எல்லாம் காணவில்லை. பண்ணையார் தம்பிக்காரனைப் பார்த்து ‘என் வாழை மரங்கள் எல்லாம் எங்கே? ‘ என்று கேட்டார். நீங்கள் தானே வாழைத் தோப்பை துப்புறவு செய் ‘ என்று சொன்னீர்கள். எனவே தான், வாழைத்தோப்பில் உள்ள  வாழை மரங்களை எல்லாம் வெட்டி துப்புறவு செய்து விட்டேன்’ என்று விளக்கம் கூறினான்.

 இத்தனை நாளும் ஏழை, எளிய வேலைக்காரர்களை ஏமாற்றி நாம் வாழ்ந்தோம். இன்று இவன் நம்மையே ஏமாற்றி விட்டானே! என்று மனதிற்குள் நினைத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ’ம்’ அப்படியா சேதி’ என்று தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு சென்று விட்டார்.

 மறு நாள் பண்ணையார், ரெண்டு காளை மாடுகளையும் , கலப்பையையும் கொடுத்து மேகாட்டு புஞ்சையை உழுதுவிட்டு வா’ என்றார். தம்பிக்காரன், மேகாட்டு புஞ்சைக்கு சென்று உழுது கொண்டு இருந்தான். சாயங்கால நேரம், அந்த வழியாக ஒரு மாட்டு வியாபாரி சென்றான். அவனிடம் தம்பிக்காரன், ’ஐயா உங்களுக்கு காளை மாடுகள் விலைக்கு வேண்டுமா..? ‘  என்று கேட்டான் வியாபாரி காளைமாடுகளை வாங்கத்தான் சந்தையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்றான். தம்பிக்காரன், விலை பேசி உழவு மாடுகள் ரெண்டையும் வியாபாரியிடம் விற்று விட்டு, பணத்தை வாங்கி ஒரு மரத்தடியில் புதைத்து வைத்து விட்டு உழுத கலப்பையை மட்டும் தோளில் சுமந்து கொண்டு பண்ணையாரின் வீட்டிற்கு வந்தான்.

 பண்ணையார் தம்பிக்காரனை பார்த்து ‘உழவு மாடுகள் எங்கே..? என்று கேட்டார். தம்பிக்காரன், நான் உழுது கொண்டிருக்கும் போது நரி ஒன்று வந்தது. நரியை கண்டதும் காளை ரெண்டும் காட்டிற்குள் ஓடி விட்டன’ என்றான்.

   பண்ணையாருக்கு புள்ளிக்காரன் நம்மையே ஏமாற்றுகிறான் என்பது தெரிந்து விட்டது. ‘சரி இவனை இனியும் இங்கே வேலைக்கு வைத்துக் கொண்டால் முதலுக்கே மோசம் வந்து விடும் ‘ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, வாய் வார்த்தையாக ’அப்படியா சரி’ என்றார்.

 பண்ணையாரிடம் வேலை செய்த மற்ற வேலைக்காரர்கள் எல்லோரும் அன்றிரவே வந்து தம்பிக்காரனிடம் யோசனை கேட்க கூடி விட்டார்கள். தம்பிக்காரன் அவர்களுக்கு எல்லாம் தைரியம் சொல்லித் தேற்றினான். ‘துணிந்தவனுக்கு துக்கம் இல்லை’ என்பது பழமொழி. நீங்கள் நாள் முழுவதும் உழைத்து விட்டு ஏன் அரைவயிறு கஞ்சி குடிக்கிறீர்கள்.? என்று கூறி உங்களின் உரிமையை நிலை நாட்ட இனி நான் போராடப் போகிறேன். நீங்கள் எல்லோரும் என் பின்னால் நில்லுங்கள் என்றான். மற்ற வேலைக்காரர்களும் ‘சரி’ என்றார்கள்.

 மறு நாள் வேலைக்காரர்கள் எல்லோரும் ஒன்று கூடி, இனிமேல் நாங்கள் உங்கள் பண்ணையில் வேலை செய்யப் போவதில்லை!’ என்று ஒற்றுமையாகக் குரல் கொடுத்தார்கள்.

 பண்ணையாருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, ’பயிர்கள் எல்லாம் நாசமாகப் போய் விடுமே!.. என்று பயந்தார். தம்பிக்காரனை கூப்பிட்டுப் பேசினார். தம்பிக்காரன் உழைப்பவர்கள் வயிற்றில் அடித்துப் பிழைப்பது பாவம். அவர்கள் மனம் நொந்து அழுதால் உம் செல்வம் எல்லாம் அவர்கள் வடிக்கும் கண்ணீரால் எரிந்து போகும். இனிமேலாவது நியாமாக வேலை வாங்கி உரிய கூலியை கொடும் என்றான். பண்ணையாரும் ’சரி’ என்றார். மறு நாள் வேலைக்காரர்கள் எல்லோரும் சந்தோசமாக பண்ணையாரின் தோட்டத்திற்கு வேலைக்குப் போனார்கள்.

 தம்பிக்காரன் உம்மை திருத்ததான் நானும் வாழைத்தோப்பை அழித்தேன் – உம் உழவு மாடுகளை விற்றேன். அவைகள் என் அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய கூலிக்கு சரியாய் போச்சி என்று பண்ணையாரிடம் சொல்லி விட்டு தன் ஊர் வந்து சேர்ந்தான்.

அன்று முதல்  பண்ணையாரும் தன் பண்ணையில் வேலை செய்பவர்களை பிரியமாக வைத்துக் கொண்டார், என்று கதையைக் கூறி முடித்தார் சுப்பு தாத்தா.

 (இன்னும் சொல்வார்) 

ஆகஸ்ட்   16 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com