’கேப்டன் கூல்’

’கேப்டன் கூல்’

ஆட்டத்தை முடிப்பவன் 3

டி20 கிரிக்கெட் 2007-ல் மிகவும் புதிய வடிவம். இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. சச்சின், கங்குலி, திராவிட் போன்ற மூத்த வீரர்கள் நாங்கள் ஆட்டத்துக்கு வரவில்லை என்று ஒதுங்கிக் கொண்டனர். சில காலம் அணிக்கு வெளியே இருந்த சேவாக், இர்பான் பதான், ஹர்பஜன் ஆகிய வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இந்த போட்டியின் அணிகள் நான்காகப் பிரிக்கப்பட்டன. இந்தியா பாகிஸ்தான் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் ஒரே குழுவில் இருந்தன. பாகிஸ்தான் ஸ்காட்லாந்தைத் தோற்கடித்தது. ஸ்காட்லாந்து இந்தியா இடையிலான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் பாகிஸ்தானை வென்றே ஆகவேண்டிய நெருக்கடி இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே எப்போதும் நெருக்கடிதான். இதற்கிடையில் ராகுல் திராவிட் வேறு பெங்களூருவில் திடீரென தான் ஒரு நாள், டெஸ்ட் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.

கேப்டனாக தோனியின் முதல் ஆட்டமே பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான போட்டியாக அமைந்துவிட்டது. நான்கு விக்கெட்டுகளை 36 ரன்களுக்கு இழந்த இந்திய அணியை ராபின் உத்தப்பாவும் தோனியும் மீட்டு 141 என்ற சுமாரான ரன்களுக்கு இட்டுச் சென்றனர். பாகிஸ்தான் அடுத்து ஆடியபோது ஆரம்பத்தில் சுமாராக ஆடி கடைசியில் 14 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. அப்பாடி வென்றுவிடலாம் என்றிருந்தபோது, கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் அகர்க்கர் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். அடுத்தது அதாவது கடைசி ஓவரில் நான்காவது பந்தில் ஸ்கோர் சமன் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு பந்தில் ஒரு ரன் எடுத்தால் போதும் வெற்றி! பந்து போட்டது ஸ்ரீசாந்த்! முதல் பந்தை காப்டன் மிஸ்பா தவறவிட்டார். அடுத்த பந்தில் ரன் அவுட்!

ஆட்டம் ட்ரா ஆனதால் சூப்பர் ஓவர். ஒவ்வொரு அணியும் ஆறு பந்துகளை ஸ்டெம்ப் நோக்கி வீசவேண்டும். சரியாக குறிபார்த்து ஸ்டெம்புகளை அடிக்கும் அணிக்கு வெற்றி! இப்படி ஒரு நகைச்சுவையான முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை! பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட, இந்திய வீரர்கள் குறிபார்த்து ஸ்டெம்புகளை வீழச் செய்தார்கள். ஒரு வழியாக தோனியின் கையில் வெற்றி வந்து சேர்ந்தது!

அடுத்து சூப்பர் எட்டு சுற்று அதற்கு இந்தியா தகுதிபெற்று முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. அடுத்த ஆட்டம் இங்கிலாந்துக்கு எதிராக. இந்த ஆட்டத்தை மறக்கவே முடியாது. யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் ப்ராடின் ஓவரில் ஆறு பந்துகளிலும் ஆறு சிக்ஸர்களை அடித்தார்! 218 ரன்கள் ஸ்கோர்! இங்கிலாந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோற்றது!

அடுத்து தென்னாப்பிரிக்காவுடனான போட்டி. இந்தியா எடுத்தது 153 ரன்கள். தென்னாப்பிரிக்கா அதுவரை இந்த கோப்பைப் போட்டிகளில் தோற்காத அணி. 126 ரன்கள் எடுத்தால் போதும் அரையிறுதிக்குத்தகுதி பெற்றுவிடலாம் 153 எடுத்து ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லை.

முன்னதாக யுவராஜ் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை. ரோகித் சர்மா என்ற இளம் வீரர்(!) அவருக்குப் பதிலாக முதல்முறையாக ஆடும் வாய்ப்பை பெற்றார். அவர் பொளந்து கட்டி 50 ரன்களை எடுத்ததால்தான் 153 ரன்களை இந்தியா எடுக்க முடிந்தது.

தென்னாப்பிரிக்கா ஒன்பது விக்கெட் இழப்புக்கும் 116 ரன்கள்  மட்டுமே எடுக்க முடிந்தது. ஆர்பி சிங் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சரி.. இப்போது அரை இறுதி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உத்தப்பா, யுவராஜ், தோனி மூவரும் சிறப்பாக ஆடி, 188 ரன்கள் எடுக்கப்பட்டன. ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் கோட்டை விட்டது.

இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது பாகிஸ்தான். திரும்பவும் ஒரு அதி அழுத்த ஆட்டம்! ’கேப்டன் கூல்’ மீது அதிக வெப்பம் பாய்ச்சப்பட்டது!

(மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை அலசும் இத்தொடர் புதன் தோறும் வெளியாகும்)

மே   02 , 2019  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com