சுவையான சமையல் குறிப்புகள் - 9
முருங்கைக்காய் சாம்பார்
முருங்கைக்காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. இதனைப் பலரும் பலவிதமாக செய்வதுண்டு. முருங்கைக்காய் உணவில் சேர்க்கப்படுவதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண், கண்நோய், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும். இப்போது எப்படி செய்வது என்பதைக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
வெந்த துவரம்பருப்பு - 2 கப்
சாம்பார் வெங்காயம் - அரை கப்
முருங்கைக்காய் - 2
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
காய்ந்த மிளகாய் - 2
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 4 -6
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை கப்
செய்முறை:
எண்ணெய் காய்ந்ததும் வறுத்து அரைக்கக் கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக வறுத்து ஆறவைத்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்
அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் இவற்றை தாளிக்கவும். பினன்ர் சாம்பார் வெங்காயம், நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது வதங்கியபின் புளியைக் கரைத்து உப்பிட்டு வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். காய் முக்கால்பதம் வெந்தது, அரைத்த விழுது, வெந்தபருப்பு இவற்றை சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விட்டு தளதளவென கொதி வந்ததும் இறக்கவும்.
(தொகுப்பு: பொடிசி)
(மெனு ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் செல்லம்மாள், தமிழகத்தின் பாரம்பரிய சமையல் உணவுகளின் நிபுணர். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அவர் அந்திமழை வாசகர்களுக்கு வழங்கும் சுவையான சமையல் குறிப்புகள் வெள்ளி தோறும் வெளியாகும். சமைத்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு எழுதலாம்)