"கடினமாக இறுக்கமாக மூடிக்கொண்டிருக்கும் மனதின் கதவுகளையும் திறந்துவிடும் ஒரு மந்திரத் திறவுகோல்தான் இசை" -மரியா வான் ட்ராப்.
"பனித்திரை" - முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் முக்தா வி. சீனிவாசனின் இயக்கத்தில் வெளிவந்த படம்.
பிறந்தவுடனேயே தாயைப் பறிகொடுத்த ஒரு பெண்ணை ராசி இல்லாதவள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பெண் வாழ்வில் சந்திக்கும் சோதனைகளையும், வேதனைகளையும் மையமாக வைத்து படத்தை இயக்கி இருந்தார் முக்தா வி. சீனிவாசன்.
ஜெமினி கணேசன் - சரோஜா தேவி, தங்கவேலு, எம். சரோஜா, எஸ்.வி. சுப்பையா, டி.எஸ். பாலையா, சுந்தரி பாய் ஆகியோர் நடித்த இந்தப் படத்துக்கான பாடல்களை கவியரசு கண்ணதாசன் எழுத இனிமையாக இசை அமைத்திருந்தார் கே.வி. மகாதேவன்.
"ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்" - என்று தொடங்கும் பாடலை ஏ.எல். ராகவன் - பி. சுசீலா குழுவினருடன் இணைந்து பாடி இருந்தனர்.
அறுபதுகளின் இறுதிவரை ஏப்ரல் முதல் தேதி அன்று தவறாமல் வானொலியில் ஒலிபரப்பப் பட்ட பாடல் இது.
பி.பி. ஸ்ரீனிவாஸின் மனதை வருடும் குரலில் ஒரு தத்துவப் பாடல்.
"ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் - அவன்
ஏனோ மரம்போல் வளர்ந்துவிட்டான்".
அச்சமும் சந்தேகமும் அறிவை ஆக்கிரமிக்க மடமை என்னும் பனித்திரையால் அறிவை மூடும் மனிதனின் மனதுக்கு தெளிவை ஏற்படுத்தும் பாடல்.
சொல் ஒன்று செயல் வேறு என்று இருக்கும் மனித சுபாவத்தைத் தான் எவ்வளவு அழகாக கவிஞர் சரணத்தில் எடுத்துக்காட்டுகிறார்!
"பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்றும் பேசுகிறார்.
பெண் பேதைகள் என்றும் பீடைகள் என்றும் மறுநாள் அவரே ஏசுகிறார்"
கண்ணதாசனின் கருத்துக்களை மனதில் பதியவைக்கும் வண்ணம் வார்த்தைகளின் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மகாதேவன் இசை அமைத்திருக்கிறார்.
அடுத்து ஒரு டூயட் பாடல்.
"ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே" - பி. பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா இணைந்து பாடி இருக்கும் அற்புதமான பாடல்.
சாதாரணமாக ஒரு பாடலின் முதல் வரியிலேயே தாளமும் இணைந்து விடும்.
ஆனால் இந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே தாளத்தை சேர்க்காமல் ஒரு இடம் தள்ளி அதாவது ஆரம்ப வரியான ஒரே என்ற இடத்தை விட்டுவிட்டு சற்றுத் தள்ளி கேள்வி என்ற வார்த்தையின் ஆரம்பத்தில் தாளம் தொடங்குமாறு கே.வி. மகாதேவன் பாடலை தொடங்கியிருக்கும் எடுப்பு அவரது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சரணங்களில் பி.பி.ஸ்ரீனிவாஸின் குரல் உயர்ந்து ஒலிக்க - அதற்கு ஈடுகொடுப்பது போல சுசீலாவின் குரல் சற்று தணிந்து ஒலிக்கும் அழகு!
பாடல் வரிகளுக்கு ஒரு தனி கவர்ச்சியையும் கேட்பவர்களின் காதுகளுக்கு இனிமையையும் கொடுப்பதை பாடலைக் கேட்கும்போது உணர்ந்துகொள்ள முடியும்.
என்.எஸ். கிருஷ்ணன் காலத்திலிருந்து காமெடி ஜோடிக்கென்று ஒரு தனிப் பாட்டு அறுபதுகளின் இறுதிவரை எழுதப்படாத ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்தது.
அந்த வகையில் தங்கவேலு-எம்.சரோஜா ஜோடிக்கென்று ஒரு பாடல்.
"மாமியாருக்கு ஒரு சேதி – இதை
மதிச்சு நடந்தா மரியாதி" - சீர்காழி கோவிந்தராஜனும் டி.வி. ரத்னமும் இணைந்து பாடி இருந்தனர். தவறு - கலக்கி இருந்தனர்.
படம் அப்படி ஒன்றும் பெருவெற்றி பெறவில்லை என்றாலும் சுமார் ரகத்தைச் சேர்ந்ததாக அமைந்துவிட்டது.
அடுத்து "எல்லாம் உனக்காக" - நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிகையர் திலகம் சாவித்திரியும் இணைந்து நடித்த படம்.
பி. புல்லையா அவர்கள் திறம்பட இயக்கி இருந்தார்.
எஸ்.வி. ரங்காராவ், டி.எஸ். பாலையா, வி. நாகையா போன்ற அனைத்து நடிகர்களும் ஏற்று நடித்த கதாபாத்திரமாகவே மாறி இருந்தனர்.
கூடவே கே.வி. மகாதேவனின் இனிமையான இசை.
கண்ணதாசன், மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கு.மா. பாலசுப்ரமணியம், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர்.
ஆனால் தவறான நட்சத்திரத் தேர்வு படத்தை வெகுவாகப் பாதித்தது.
"பாசமலர்" படத்தில் அண்ணன் தங்கையாகப் பார்த்த சிவாஜிகணேசனையும் சாவித்திரியையும் இந்தப் படத்தில் கணவன் மனைவியாக ரசிகர்கள் - குறிப்பாக பெண்கள்- ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்த காரணத்தால் படம் வந்த வேகத்திலேயே சுருண்டுபோனது.
என்றாலும் பாடல்களில் "கொஞ்சி வரும் நெஞ்சில் இந்தக் கோபம் என்னடா" என்ற சுசீலாவின் இனிமை பொங்கும் குரலில் அமைந்த பாடல் சிலோன் வானொலியின் புண்ணியத்தால் அறுபதுகளின் இறுதிவரை நம் செவிகளை நிறைத்துக்கொண்டிருந்தது. மகாதேவனின் திறமைக்கு மற்றுமொரு சான்று.
ஏ.கே. வேலனின் இயக்கத்தில் எஸ்.எஸ்.ஆர் நடிப்பில் வெளிவந்த படம் "பணம் பந்தியிலே".
இந்தப் படத்தில் கவிஞர் கா.மு. ஷெரீப் அவர்கள் எழுதிய
"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே.
பிழைக்கும் மனிதனில்லே." - என்று ஒரு அருமையான பாடலை சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அற்புதமாக வடிவமைத்துக் கொடுத்திருந்தார் கே.வி.மகாதேவன்.
இப்படி இசை அமைத்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடி வாங்கிக் கொண்டே இருந்தால் எப்பேர்ப்பட்ட ஜாம்பவானும் ஒரு பெரிய சரிவைச் சந்திக்க நேரிடும்.
ஆனால் அப்படி ஒரு சரிவைச் சந்திக்க நேரிடாமல் கே.வி. மகாதேவனைக் காப்பாற்றிவிட்டது அடுத்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கதை வசனத்தில் ஆதூர்த்தி சுப்பாராவ் என்னும் ஏ.சுப்பாராவ் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் மகத்தான வெற்றிப்படமாக அமைந்து விட்டது.
இத்தனைக்கும் எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று பெரிய ஸ்டார் வால்யூ எதுவும் இல்லாமல் ஒரு "மீடியம்" பட்ஜெட் படமாக அமைந்த படம் இது.
அந்த நாட்களில் குறைந்த செலவில் படம் எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யும் நடிகராக எஸ்.எஸ். ராஜேந்திரன் இருந்துவந்தார். அவருடன் விஜயகுமாரி, எம்.ஆர். ராதா, பி.எஸ். சரோஜா, சௌகார் ஜானகி, எஸ்.வி. ரங்கராவ் ஆகியோர் அற்புதமான நடிப்பால் பின்னி எடுத்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு மகாதேவன் இசை அமைத்த அனைத்துப் பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்து அவரை முந்தைய படத்தின் தோல்விகளால் பாதிப்படைய விடாமல் செய்துவிட்டன.
அந்தப் படம்தான் "குமுதம்".
இந்தப் படத்தின் வெற்றிப்பாடல்களைக் குறித்து ஒரு முக்கியமான தகவல்.
படத்தின் இயக்குனர் ஏ. சுப்பாராவ் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய விதம் பற்றிக் குறிப்பிடும்போது கே.வி.மகாதேவன் இப்படிச் சொல்கிறார்:
"இவர் படத்துக்கு காதல் டூயட் போடு, சோகப்பாட்டு போடு என்று சொல்லமாட்டார். காட்சிகளை விவரிப்பார். "இந்தச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி ஒரு மெட்டைப் போடுங்கள்" என்பார். டியூனைக் கொடுத்ததும் ஒகே செய்துவிடுவார். இது சரியில்லை மறுபடி வேறு டியூன் போடுங்கள் என்பதை எல்லாம் இவரிடம் காணவே முடியாது."
கொடுக்கும் முதல் மெட்டு எதுவோ அதுவே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும்.
இப்படி இருக்கும் பட்சத்தில் முதல் மெட்டையே சிறப்பாகக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஒரு இசை அமைப்பாளர் எவ்வளவு கவனமாகச் செயல்படவேண்டியதிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
கவனத்துடன் நிதானமாக அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இசை அமைப்பாளர் செயல்பட்டே ஆகவேண்டும்.
இந்த நிலையை லாவகமாகக் கையாள்வதில் தனித்திறமை பெற்றிருந்தார் கே.வி. மகாதேவன்.
அந்த வகையில் "குமுதம்" படத்தில் இடம்பெற்ற இன்றளவும் நம் செவிகளை நிறைத்துக்கொண்டு நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே முதல் டியூனிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடல்கள் தான்.
பி. சுசீலாவின் தேன்குரலில் "கல்யாணம் ஆனவரே சௌக்யமா" ஒரு குறும்பு தெறிக்கும் பாடல் என்றால் மருதகாசி அவர்களின் அருமையான காதல் டூயட் பாடலான "என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?" பாடலோ என்னதான் முயன்றாலும் நம் மனசை விட்டு ஓடிப்போக மறுக்கிறதே!
சீர்காழி கோவிந்தராஜனும் - பி.சுசீலாவும் இணைந்து பாடிய இந்தப் பாடலில் பல்லவியிலும் முதல் சரணத்திலும் சுத்த தன்யாசி ராகத்தைக் கையாண்டு இசை அமைத்த கே.வி. மகாதேவன் "மணமாலை சூட்டி" என்ற இறுதிச் சனரத்தின் துவக்கத்திலேயே பாடலில் நடைபேதம் செய்து ராகத்தையும் மாற்றி "ஆபேரி"க்கு தாவி கடைசியில் சுசீலாவின் ஹம்மிங்கோடு மறுபடியும் சுத்த தன்யாசிக்கு மாறி... அப்பப்பா.. ரசவாதம் தான் செய்திருக்கிறார்.
இன்று வரை "குமுதம்" என்று பெயர் சொன்னாலே மறுகணமே நம் நாக்கு உச்சரிக்கத் தொடங்கி விடும் பாடலைப் பற்றிச் சொல்லாவிட்டால் எப்படி?
"மாமா மாமா மாமா" - டி.எம். சௌந்தரராஜனும், ஜமுனாராணியும் பாடி இருக்கும் இந்த ஜனரஞ்சகப்பாடல் - இந்தக் காலப் பாஷையில் சொல்லவேண்டும் என்றால் செம குத்துப்பாடல்.
சிவரஞ்சனி ராகத்தை லாவகமாக இவ்வளவு எளிமைப்படுத்திக் கொடுத்து பட்டி தொட்டி எல்லாம் பரவவிட்ட மகாதேவனின் மகத்தான திறமை சிலிர்க்கத்தான் வைக்கிறது.
டி.எம்.எஸ். - ஜமுனா ராணியின் குரல்களில் தெறிக்கும் போதை நம்மையும் தொற்றிக்கொள்கிறதே.
தபேலா, வயலின், ஹார்மோனியம் ஆகிய மூன்றே மூன்று இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு இப்படி ஒரு பாடலை எப்படி கே.வி. மகாதேவனால் கொடுக்க முடிந்தது என்று பிரமிக்க வைக்கிறது பாடல்.
மழலைக்குரல் எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலில் "மியாவ் மியாவ் பூனைக்குட்டி". இது ஒரு குழந்தைப் பாடல் அல்ல. படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வரும் சௌகார் ஜானகி பாடி இருக்கும் பாடல்.
உவமைக் கவிஞர் சுரதாவின் கற்பனையில் மாமல்லபுரத்துச் சிற்பக் கலையின் மகத்துவத்தைச் சொல்லும் பாடல்
"கல்லிலே கலை வண்ணம் கண்டான் - இரு
கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை செய்தான்" - சீர்காழி கோவிந்தராஜனின் வெங்கலக் குரலில் ஒரு மகத்தான பாடல். ஜோன்புரி ராகத்தின் அடிப்படையில் கே.வி. மகாதேவன் கொடுத்திருக்கும் இந்தப் பாடலின் சிறப்பை நான் சொல்லித்தான் வாசகர்கள் உணரவேண்டுமா என்ன?
இப்படி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் "குமுதம்" படப் பாடல்கள் அமைந்து படத்தை மகத்தான வெற்றிப் படமாக்கி விட்டன.
அதோடு நிற்கவில்லை.
"குமுதம்" படம் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட்டபோது ஏ.நாகேஸ்வரராவ் - சாவித்திரி ஆகியோர் தமிழில் எஸ்.எஸ்.ஆர்.-விஜயகுமாரி ஏற்ற வேடங்களைச் செய்திருந்தனர்.
தமிழில் படத்தை இயக்கிய ஏ.சுப்பாராவ் அவர்களே தெலுங்கிலும் இயக்கினார்.
கே.வி. மகாதேவனின் இசையால் பெரிதும் கவரப்பட்ட அவர் தெலுங்குப் படத்துக்கும் கே.வி.மகாதேவனையே இசை அமைக்க வைத்தார்.
"மஞ்சி மனசுலு" என்ற அந்தத் தெலுங்குப் படத்தின் மூலம் அதுவரை பெண்டியாலா, அட்டபள்ளி ராமராவ் போன்ற ஜாம்பவான்கள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த தெலுங்குப் பட உலகிலும் மகத்தான சாதனைகள் பலவற்றைப் படைக்க - தனது இசைச் சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரிவுபடுத்த - முதன்முதலாக கால் பதித்தார் தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டத்தில் பிறந்த கிருஷ்ணன் கோவில் வெங்கடாசலம் மகாதேவன்.
(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)
செப்டம்பர் 01 , 2014