நிலா சாட்சி சொன்ன கதை

செவக்காட்டு சொல்கதைகள் 9

குற்றம் செய்தவர்கள் என்றேனும் ஒரு நாள் தான் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனையை அனுபவித்து தான் தீர வேண்டும்.

குற்றவாளி பணக்காரனாகவோ, பலசாலியாகவோ , புத்திசாலியாகவோ பெரிய பதவியில் இருப்பவனாகவோ இருந்தால் செய்த குற்றத்திற்கான தண்டனை பெறுவதில் இருந்து தற்காலிகமாகத் தப்பிக்க முடியாது என்று பொதுவாக மக்கள் நம்புகிறார்கள் , அந்த நம்பிக்கை வீண் போவதுமில்லை.

அரசு அன்று கொல்லும் , தெய்வம் நின்று கொல்லும் என்கிறது ஒரு பழமொழி அரசு குற்றம் செய்தவனுக்கு அவன் வாழ்கிற காலத்திலேயே நீதித்துறை மூலம் தண்டனை கொடுக்கும். அப்படி அரசு கொடுக்கும் தண்டனையில் இருந்து குற்றவாளி தற்காலிகமாகத் தப்பித்தாலும் தெய்வம் காலம் கடந்தாவது தண்டனை கொடுக்கும் என்பதுதான் அப்பழமொழியின் பொருள் “ என்று நீண்ட பிரசங்கம் செய்த தாத்தா இக்கருத்தை வலியுறுத்தும் கதை ஒன்றைச் சொல்லத்துவங்கினார்.

தாத்தாவை சுற்றி அமர்ந்திருந்த பிள்ளைகள் ‘ம்’ கொட்டி கதை கேட்க ஆரம்பித்தார்கள்.

ஒரு ஊர்ல ஒரு சம்சாரி இருந்தான் . அவன் மகா முரடன் , அவனுக்கு சொந்த புத்தி கிடையாது , யாராவது புத்தி சொன்னால் அதைக் கேட்கவும் மாட்டான்.

அந்தச் சம்சாரியின் எதிர் வீட்டில்  இன்னொரு சம்சாரி இருந்தான், அவன் ரொம்ப நல்லவன் , சுபாவி , யாரையும் தகாத வார்த்தைகளால் பேசமாட்டான்.

ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி பிள்ளை குட்டிகளும் இருந்தது, ரெண்டு பேருக்கும் வயலும் அக்கம் பக்கம் சேர்ந்தாள் போல் இருந்தது.

ரெண்டு பேருமே , தத்தம் வயல்களில் நெல் நடவு செய்திருந்தார்கள், நெற்பயிர் நன்றாக கரு கரு வென அடர்த்தியாக வளர்ந்து பச்சைப் பசேல் என்றிருந்தது .

ரெண்டு பேரும் பகல் நேரத்தில் புஞ்சைக் காடுகளில் உள்ள வேலை, ஜோலிகளைப் பார்க்கச் சென்று விடுவார்கள் , எனவே ராத்திரி சாப்பாட்டு வேலை முடிந்த பின் தான் குளத்தில் இருந்து வாய்க்கால் வழியாக வரும் நீரை நெல் வயலுக்குப் பாய்ச்சச் செல்வார்கள்.

அன்று பெளர்ணமி , வானத்தில் முழு நிலவு பாலாய் காய்ந்தது , நிலவின் வெளிச்சத்தில் சம்சாரிகள் ரெண்டு பேரும் தத்தம் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றார்கள்.

அப்புராணியான சம்சாரி , முதலில் போய் வாய்க்கால் நீரைத் தன் வயலுக்கு அடைத்துப் பாய்ச்சிக் கொண்டிருந்தான், பிந்தி வந்த முரட்டு சம்சாரி , தான் கொண்டு வந்த மண் வெட்டியால் , அப்புராணி ஏற்கனவே போட்டு வைத்திருந்த தடுப்பு அணையை வெட்டி குளத்து நீரை , தன் வயலுக்கு கொண்டு செல்ல வாமடை போட்டான். அப்புராணி சம்சாரி இது என்னப்பா ஞாயம்? என்று கேட்டு முரட்டு சம்சாரியைத் தடுத்தான்.

ராத்திரி பத்துமணிக்கு மேல் இருக்கும் , வயல் காட்டில் வேறு யாரும் இல்லை, இவர்கள் ரெண்டு பேர் மட்டும் தான் இருந்தார்கள் , ஏற்கனவே இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராரை தீர்த்து வைக்க அங்கு யாரும் இல்லை, இவர்களின் சண்டையை வானத்தில் இருந்த முழு நிலவு மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தது.

ரெண்டு பேருக்கும் வாய்த்தகராறு முற்றி , சற்று நேரத்தில் அது கைச்சண்டையாகிவிட்டது, , கோவத்தில் முரட்டுச் சம்சாரி , அப்புராணியான நோஞ்சானை தன் கையில் இருந்த மண் வெட்டியால் ஒரே போடாகப் போட்டு விட்டான் பாவம், அப்புராணி மண்டை உடைந்து ரெத்தம் கொட்டிச் சாகப் போகிற போது வானத்தில் இருக்கும் நிலவைப்பார்த்து அதோ. வானத்தில் இருக்கும் நிலவு , கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லி உனக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கும் என்று சொல்லி விட்டு தன் உயிரை துறந்தான்.

முரடன் , வானத்தில் இருந்து நிலவு பூமிக்கு இறங்கி வந்து சாட்சி சொல்கிறதைத்தான் பார்ப்போமே என்று தனக்குத்தானெ சொல்லிக்கொண்டு , இறந்து விட்ட சம்சாரியை , ஒரு காட்டிற்குத்தூக்கிச் சென்று அங்கு ஒரு புதரின் ஓரமாக ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்தவிட்டான்.

மறு நாள் அப்புராணியின் மனைவி , ஊர்க்காரர்களிடம் “ என் கணவரைக் காணோம் “ என்று முறையிட்டாள், எந்தத் துப்பும் கிடைக்கவில்லை, காவல் நிலையம் சென்றும் முறையிட்டாள் , காவலர்களாலும் ,எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை, திக்கற்றவர்களுக்குத் தெய்வம் தான் துணை என்று நினைத்துக் கொண்டு   கடைசியில் கடவுளிடம் முறையிட்டு விட்டு ஆகவேண்டிய காரியத்தைப் பார்த்தாள்.

முரடன், தான் செய்த கொலையை மறைத்து விட்டதாய் நினைத்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தான்,

ரெண்டு , மூணு , வருசம் கடந்துவிட்டது , ஒரு நாள் , முரடனின் மனைவிக்கும் , முரடனுக்கும் சண்டை வந்துவிட்டது , வாய்ச்சண்டை முற்றியது , பக்கத்து வீட்டுக்காரர்கள் போய் சண்டையை விலக்க நினைத்தார்கள் முடிய வில்லை.

முரடன் தன் பொண்டாட்டியை கண்முன்  தெரியாமல் உதைத்துக் கொண்டிருந்தான், ஊரே கூடி அவர்களின் சண்டையை விலக்க முயன்றது முடியவில்லை,

கோவம் தலைக்கேற, முரடன் அருகில் கிடந்த மண்வெட்டியைக் கையில் எடுத்து ஓங்கிக் கொண்டு ; பார் உன்னை எதுத்த வீட்டு அப்புராணிப்பெயலை ஒரே போடாய் மண்வெட்டியால் போட்டுக் கொன்றதைப் போல் உன்னையும் கொல்கிறேன். என்று தன்னை அறியாமல் சொல்லிவிட்டான்.

அப்போது தற்செயலாக , கூட்டத்தைக் கலைக்க வந்த காவலர்கள் , முரடன் சொன்ன வாக்குமூலத்தைக் கேட்டு , அப்புராணியைக் கொலை செய்த குற்றத்திற்காக முரடனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டர்கள்,

நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது , கடைசியில் முரடன் தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டதால் , அவனைத் தூக்கில் போடச் சொன்னார்கள் , தூக்கு மரத்திற்குச் செல்லும் போதுதான் முரடன் , யாரும் அற்ற இரவில் பெளர்ணமி வெளிச்சத்தில் அந்த அப்புராணி ‘ நிலவு வந்து சாட்சி சொல்லும் ‘ என்று சொன்ன சொல் நினைவுக்கு வந்தது.

உண்மைதான் ஜெயிக்கும், சில நேரம் உண்மை ஜெயிக்க காலதாமதமாகும் என்றாலும் கடைசியில் வாய்மையே வெல்லும் என்று கதையைக் கூறி முடித்தார் சுப்புத் தாத்தா.

(இன்னும் சொல்வார்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com