பிரியங்களுடன் கி.ரா – 28

4.12.86

33/9, C.P.W.D.குவாட்டர்ஸ்

கே.கே.நகர், சென்னை – 78

பிரியம் நிறைந்த நண்பர் அவர்களுக்கு

வணக்கம்.

முகவரியைப் பார்த்து திகைக்க வேண்டாம். இப்போது காயிதம் இடைசெவிலிலிருந்துதான் எழுதுகிறேன். சனிக்கிழமை 6ம் தேதி மாலை நெல்லை எக்ஸ்பிரஸில் கணவதியுடன் இந்த முகவரியில் தங்கியிருக்கப் போகிறோம்.

ஊரில் விவசாயம் கிடையாது. அதோடு இந்த வருஷம் மழையும் இல்லை. இனிபெய்து புரோஜனமும் இல்லை. பிரபு இப்போதைக்கு கோவையில் இருக்கிறான். ஒரு ரண்டு மூனுமாசம் மெட்ராஸில் இருக்கலாம் என்று நினைத்துப் புரப்படுகிறோம்.

“மெட்ராஸ் காற்று” ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிந்தால் பாதியிலேயே திரும்பி வந்தாலும் வந்துவிடுவோம். ஒரு வேளை மெட்ராஸ் வாசியாகவே ஆனாலும் ஆகிவிடும்வோம். எதுவும் நம்கையில் இல்லை.

மெட்ராஸில் யாரோடும் தொடர்பு கொள்ளாமல் யாரையும் பார்க்காமல் இருந்து கொண்டு முதல்க்காரியமாக “ரண்டாம்பாகம்” நாவலை எழுதி முடிக்க விருப்பம். எங்கே போய் உட்கார்ந்தாலும் இடைசெவல்க்காரனாக இருக்க முடிந்தால்தான் எனக்கு எதுவும் ஓடும். எப்படி என்று பார்ப்போம்.

64 ஆண்டுகள் இந்த ஊரில் இருந்துவிட்டேன். இன்னொரு இடத்தில்ப் போய் வேர்விடுவது என்பது லேசுபட்ட காரியமில்லை. ஆனாலும் என்னை எதுவோ, போ என்று சொல்லுகிறது; கிளம்பிவிட்டேன்.

பிரபுவை சென்னையில் காலூன்ற வைக்கத்திட்டம். நான் ஏற்கனவே உங்களிடம் சொன்ன அந்த மானேஜர் (ஸ்டேட்பாங்க்) ராமமூர்த்தியும் அவரது பிரியமுள்ள மனைவி பாரதியும் செய்துள்ள ஏற்பாடுகள்தான் இவையெல்லாம். நாம் சந்திக்க நேரும்போது இவைபற்றியெல்லாம் விபரமாகப் பேசலாம். இப்போதைக்கு விடை தாருங்கள்.

எப்பவும் உங்கள்,

கி.ரா.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com