ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 14

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 14

நாய்களாகட்டும், மீன்களாகட்டும், புறாக்கள் வாத்துகள் எந்த வளர்ப்புப் பிராணியாக இருந்தாலும் எங்கள் பகுதியில் உள்ள வளர்ப்புப் பிராணி ஆர்வலர்கள் தங்களால் வளர்க்க முடியவில்லை என்றால் 'டாக்டர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு அங்கே கொண்டு போய் விடுவோம்' என்று தான் முதலில் நினைப்பார்கள். என் கணவரின் 'டிராக் ரெக்கார்ட்' அப்படி. பல மிருகங்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர். வீட்டு விலங்குகள் தான் என்றில்லை, கூட்டிலிருந்து தவறி விழுந்த பறவைகள், கண் திறக்காத கிளிக் குஞ்சுகள் இவற்றை சில காலம் வைத்து வளர்த்து மீண்டும் பறக்க விடுவார் (அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கும். பச்சைக் கிளிகளை வீட்டில் வைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதன் சிகிச்சை முடிந்தவுடன் பாதுகாப்பாக இயற்கையுடன் சேர்த்து விடப்படும்!). அவர் அறிவுரைப்படி நாங்களும் சிரிஞ்சு மூலமாக பால் கொடுப்பது, ஸ்பூனால் சத்துமாவு கொடுப்பது என்று டைம்டேபிள் போட்டு வேலை செய்வோம். ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியாக அணிற்பிள்ளைகள் பலவற்றை வளர்த்து விட்டிருக்கிறோம். அவை இன்னும் எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு அணிலைப் பார்த்தால், 'இது நாம வளர்த்து விட்ட அணிலா?' என்று என் குழந்தைகள் கேட்பார்கள்.

 இப்படித்தான் ஜாக் என்ற English Bullmastiff என்ற பெரிய நாய் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று ஒருநாள் எங்கள் வீட்டிற்கு வந்தது. வசதி படைத்தவர்கள் தங்கள் பண்ணை வீடுகளில் அதற்கென்றே தனியாக ஆளைப் போட்டு அதனை வளர்ப்பார்கள் என்று சொல்வார்கள். ஒரு முறை சென்னையில் ஒரு நாய்க் கண்காட்சிக்குப் போயிருந்த போது இந்த வகை நாய்களுக்கு என்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் இவை கொண்டு வரப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். சின்ன நாயே கன்றுக்குட்டி சைஸில் இருக்கும்.

 ஒருநாள் பிற்பகலில் நான் பணி முடித்து திரும்பிய போது நான்கு நாய்கள் சேர்ந்து ஒரே குரலில் குரைப்பது போன்ற ஒரு பயங்கர ஒலி எங்கள் வீட்டிலிருந்து வந்தது. வியர்க்க விறுவிறுக்க, முகத்தில் கடும் சிந்தனையோடு ஒரு இங்க்லீஷ் புல்மஸ்டிஃப் முன் நின்று கொண்டிருந்தார் என் கணவர். ஒரு நண்பர் வீட்டில் வாங்கியிருக்கிறார்கள் வளர்க்க முடியவில்லை, அதனால் நமக்குத் தந்திருக்கிறார்கள் என்றார். எங்கள் மூன்று நாய்களும் சாப்பிடும் உணவை ஒரே வாயில் லபக்கிவிட்டு இன்னும் கொண்டா என்று கேட்டுக் கொண்டிருந்தது அது. அதை ஒப்பிட்டுப் பார்த்தால் டேனியே சிறிய அளவாகத் தோன்றியது. ஜேக் முன்பிருந்த வீட்டிலிருந்தே அதனுடைய தட்டு ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்கள். அதைச் சரியாகக் கழுவவில்லை என்று டேனியின் தட்டில் என் கணவர் உணவை வைத்திருக்கிறார். நிமிடங்களில் இரண்டு தட்டுக்களுக்கும் உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டது ஜேக். கட்டைக் கழுவலாம் என்று எடுக்கப் போன என் கணவரையே கடிக்க வந்துவிட்டது ஜேக். யாரையும் அருகே அண்ட விடவில்லை. கொஞ்ச நேரத்தில் தோட்டத்தில்  நிறைய செடிகளைப் பிய்த்து போட்டு விட்டது. அது வந்த நிமிடமே எங்கள் வீட்டு நாய்கள் மூன்றும் ஒற்றுமையாகப் போய் திறந்து கிடந்த பாத்ரூமுக்குள் போய் உட்கார்ந்து கொண்டன.



ஜேக்கின் உடல் மொழியே பயங்கர ஆக்ரோஷமாக இருந்தது. ஏதேதோ செய்து வழிக்குக் கொண்டுவர முயன்றும் அது யாரையும் நெருங்க விட வில்லை. பயங்கர கொடூரமான நாயாக இருந்தது. மாலை வரை அதை வசப்படுத்துவதற்கு முயன்று பார்த்தும் முடியவில்லை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த என் குழந்தைகளையும் கேட்டைத் திறக்க விடாமல் குரைத்தது. இத்தனைக்கும் அப்போது தான் அவருக்கு எட்டு மாதம் முடிந்திருந்தது. தெரியாமல் அதன் பல் பட்டுவிட்டால் கூட பெரும் காயம் ஏற்படுவது நிச்சயம் என்று தோன்ற, ஜேக்கை அதன் உரிமையாளரேயே வந்து அழைத்துப் போகச் சொல்லிவிட்டோம். ஓரிரு வாரங்கள் சமாளித்துப் பார்த்த அவர்களும் அதை ஒரு தோப்பு வீட்டுக்கு அனுப்பியதாகக் கேள்வி.

ஜேக் வந்து போன ஒரு சில நாட்கள் வரை பூப்பி, டேனி, டெடி மூவரும் பேரமைதியுடன் இருந்தார்கள். அதன்பின்பே இயல்புக்கு வந்தார்கள். எத்தனையோ கண்டங்களைத் தாண்டி உயிர் பிழைத்து வந்த டேனி வயது மூப்பின் காரணமாக ஒருநாள் இறந்து போனது. பெரிதாக எந்த நோயும் இல்லை, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உணவைக் குறைத்துக் கொண்டே வந்தது. மற்ற நேரங்களில் அதற்கு எத்தனையோ மாத்திரை, மருந்துகள் ஊசிகள் கொடுத்திருக்கிறோம். ஒருகட்டத்தில் இனிமேல் எந்த சிகிச்சையும் தேவையில்லை என்ற எண்ணம் தானாகவே எங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் தோன்றிவிட்டது. ஒருநாள் உறக்கத்தில் அமைதியாகத் தன் உயிரை விட்டான் டேனி. இப்போது பூப்பி சீனியராகவும், டெடி ஜூனியராகவும் இருந்தார்கள். டேனி இல்லை, நான் தானே இனிமேல் காவல் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று முடிவு செய்தது போல் கொஞ்சம் கொஞ்சமாக பூப்பி வந்து முன் வாசலில் படுத்துக்கொண்டது. தன் உடல் மொழியால் தான் பதவியேற்று விட்டதைப் பிறருக்கு உணர்த்தவும் செய்தது. இருந்தாலும் அதன் நடை உடை பாவனைகளில் ஒரு விதத் தயக்கமும் அந்த திருட்டுமுழியும் எப்போதும் இருக்கும்.

 ஓரிரு வருடங்களுக்கு மேல் இரண்டு நாய்களுடனே கழிந்தது. மற்ற உயிரினங்கள் மேலான கவனம் கூடியது. இந்த கட்டுரைத் தொடருக்கு இன்னும் கொஞ்சம் கன்டென்ட் கொடுக்கிறேன் என்று இன்னொரு விருந்தாளி ஒருவர் சிலகாலம் வந்து போனார். அவர் பெயர் சார்லி. அதைப் பார்த்தால் டாபர்மேன்- நாட்டு நாய் க்ராஸ் போலத் தெரிந்தது. சார்லி எங்கள் வீட்டிற்கு வரும்போதே மூன்று வயதுக்கு மேல் இருக்கும். 'அடிக்கடி ஓடிப் போய் விடுகிறது, இப்போது கூட தெருநாயிடம் போய் கடி வாங்கி விட்டு வந்திருக்கிறது' என்று முகத்தில் காயத்துடன் தான் அதன் உரிமையாளர் அதைக் கொண்டு வந்து கொடுத்தார். ஒரு நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தவர் அவர். தன் முதலாளி வெளிநாடு சென்று விட, தான் வளர்க்க முயன்று முடியவில்லை என்று எங்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்.  சார்லி ஆரோக்கியமான, அமைதியான சொல் பேச்சு கேட்கும் நாயாக இருந்தது. தடுப்பூசிகள் எல்லாம் சரியாகப் போட்டிருந்தார்கள். உட்கார் என்றால் உட்கார்ந்தது, இங்கே வா என்றால் வந்தது ஆனால் ஊர் சுற்றும் பழக்கத்தை மட்டும் அதனால் நிறுத்த முடியவில்லை. காயம் ஆறும் வரை கால்களை வைத்துக் கொண்டு சும்மாக் கிடந்த சார்லி, கொஞ்சநாளில் அடிக்கடி வெளியே போய் வர ஆரம்பித்தது. அதனால் பிற நாய்களுக்கு தொற்று ஏற்படுமோ என்ற பயம் எங்களுக்கு.

அப்போதுதான் எங்கள் வீட்டில் நாட்டுக்கோழிகள் வரிசையாக முட்டையிட ஆரம்பித்திருந்தன. எத்தனையோ உயிரினங்களை வெற்றிகரமாக வளர்த்திருந்தும் கோழிவளர்ப்பு அப்போதுதான் பிடிபட்டிருப்பது. அதற்கு முன்பு பலமுறை கோழி வளர்ப்பை முயன்று பல்பு வாங்கியுள்ளோம். பல கோழிக்குஞ்சுகள் முக்கால்வாசி வளர்ச்சியை அடைந்த நிலையில் அவற்றை நோய் வந்து இழந்திருக்கிறோம், பூனைகள் பிடித்து சாப்பிட்டிருக்கின்றன, எங்கு போனது என்றே தெரியாமல் தொலைந்து போயிருக்கின்றன. சார்லி வந்த நேரம் எல்லாம் சரியாக வந்து, மூன்று கோழிகள் முட்டையிடும் பருவத்திற்கு வந்திருக்க, அந்த முட்டைகள் எல்லாவற்றையும் உடைத்து உடைத்துக் குடித்தான் சார்லி. 'எவ்வளவு நல்ல நாயா இருந்தாலும் சின்ன வயசுலேருந்து நாமளே வளர்க்காத நாய் நமக்கு என்னைக்குமே சரிவராது' என்பதை மீண்டும் ஒருமுறை உணர்ந்தோம்.

என் கணவரின் சித்தப்பா அம்பாசமுத்திரம் அருகிலுள்ள தன் தோட்டத்திற்கு ஒரு நாய் வேண்டும் என்று கேட்டிருக்க, சார்லியை அனுப்பி வைத்தோம். அவரது நண்பர்கள் இரண்டு பேர் வந்து டூவீலரில் சார்லியை ஏற்றிக் கொண்டு போனார்கள். வண்டியில் ஏறவே மாட்டேன் என்று அடம் பிடித்தது சார்லி. "கொஞ்ச நாள் தான் இருந்துச்சு. அப்படியும் நம்ம வீட்ல இருந்து போறதுக்கு மனசு வரமாட்டேங்குது பாரேன்" என்று பெருமைப்பட்டுக் கொண்டார் என் கணவர். அங்கு போய் இறங்கிய அடுத்த நிமிடமே ஒரு காட்டு முயலைத் துரத்திப் பிடித்து சாப்பிட்டதாம் சார்லி. கம்பி வேலியுடன் கூடிய தோட்டம் அது. இரண்டு மூன்று நாட்களில் வேலிக்கடியில் மண்ணைத் தோண்டி விட்டு எங்கோ தப்பித்துப் போய்விட்டதாம். அருகில் இருக்கும் கிராமங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்றார் என் சின்ன மாமனார்.

நாய் வளர்ப்பில் எங்களை எல்லாம் விட அனுபவசாலி அவர். நாங்கள் யூஜி டிகிரி என்றால் அவர் டாக்டரேட் என்று சொல்லலாம். அவ்வளவு தெரியும். தொழில் முறையாக நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து வியாபாரமும் செய்வார். 'அவருக்கே டகால்டியைக் குடுத்துட்டுப் போயிடுச்சே சார்லி.. சரியான ஊர்சுத்திக் கழுதைதான்' என்று நினைத்தோம். இதற்கு முன்பும் சார்லி இப்படி பல நாட்கள் காணாமல் போய் திரும்பி வந்திருக்கிறதே, எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்ளும் சக்தி அதற்கு இருக்கிறது என்று தெரிந்ததால் நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. இப்போதும் அந்த ஊருக்குச் செல்லும் போது அங்கிருக்கும் கிராமங்களில் நிற்கும் நாய்களை நோட்டமிடுவோம். எங்காவது கண்ணில் தென்படுகிறதா என்று. இதுவரை தென்படவில்லை. 'ஆம்பூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை  நாய்க்குதான் கிடைக்கணும்னு இருந்தா அதை மாத்தவா முடியும்?' என்ற காமெடியைப் பார்க்கும்போது சார்லியின் நினைவு வரும். எங்கோ பிறந்து எங்கெங்கெல்லாமோ சுற்றித் திரிந்து இப்போது அம்பை அருகே உள்ள ஏதோ ஒரு கிராமத்தில் இருக்கிறது.

 மீண்டும் இரு நாய்களுடன் எங்கள் பயணம் தொடர்ந்தது. நாங்கள் சும்மாயிருந்தாலும் காலம் சும்மா இருக்க விடாது போலும். முதன்முறையாக எங்கள் வீட்டிற்கு ஒரு பெண் நாய் வந்து சேர்ந்தது. புகைப்படங்களிலும் காணொலிகளிலும் நாங்கள் ஆசைப்பட்டு ரசித்துப் பார்த்த சிறிய வகை நாய் இனம் அது. அந்த இனத்திலிருந்து அப்படி ஒரு அழகான திருத்தமான நாய் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.. (அது என்ன இனமாக இருக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்!)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com