வாரத்தில் ஒரு நாளில் கொஞ்ச நேரம் கவிதைக்கு

கவிதையின் கால் தடங்கள் - 40

இன்னொரு பிறவி இருந்தால் சங்கீதம் கேட்கவும் கவிதை படிக்கவும் வாரத்தில் ஒரு நாளில் கொஞ்ச நேரம் ஒதுக்குவேன்.

# சார்லஸ் டார்வின் 

கோகுலகண்ணன் கவிதைகள்

கோகுலகண்ணன் கவிதைகளில் சில:

01

நீருக்குள் 

நீர் வாசலில் நிற்கிறோம் 

நீருக்குள் நுழைவது எப்படி? 

நீரின் கதவு எங்கே? 

யோசனையில் காலம் கழியும்போது 

நம்மைத் தொட்டுப் போகும் 

ஒளி

நீர்க் கதவின் சாவியாய்

நீளுகிறது 

ஒளியை எப்படித் தொடருவது

என்று எண்ணத்தில் நிற்கும்போது 

புன்முறுவலாய் நெளிகிறது

நீரில் 

ஒளி. 

 02

நனைவது 

நானும்

நீயும்

ஒரே மழையில் 

நீ

குளிருகிறது என்றபோது

நானும் 

குளிருகிறது என்றேன் 

ஒரே மழை

ஒரே நேரத்தில்

குளிர்விக்கிறது

வெவ்வேறாய் இருக்கும்

ஒன்றை 

 03

நீர்க்குழந்தைகள் 

குழந்தைகள் விளையாடுகின்றன 

தனித்தனியாய்

ஒன்றுடன் ஒன்று கூடி

விதவிதமாய் விளையாடுகின்றன 

பக்கத்தில் இருக்கும் என்னைக் கவனிக்காமல்

இருக்க முடியாது 

குழந்தைகளை உற்றுப் பார்த்தபடி இருக்கிறேன் 

அப்போது ஒவ்வொரு குழந்தையும் நீராய் மாறித் தரையில் பரவுகிறது 

எவ்வளவு சிறு அலைகள்

எவ்வளவு குமிழிகள்

எவ்வளவு தளும்பல்கள் 

யார் அள்ளிப் பருக

யார் நனைய

என் பாதங்களைச் சுற்றிச் சுழித்தோடுகின்றன

நீர்க்குழந்தைகள்?

04

புதிதாய் 

புத்தம் புதியதாக

சுவை அறியாத

பழம் ஒன்று 

உணவு மேசை மேல் இருந்தது 

கையில் எடுக்கும் சிறுமி

தோலைத் தடவிப் பார்க்கிறாள்

பிறகு பழத்தை மெல்ல முகர்ந்து பார்க்கிறாள்

கண்களை விரித்துக்கொண்டு 

அவளுக்குப் புதியதாய் இருக்கிறது

துடைத்துவிட்டது போல் வெளியே இருக்கும் வானம்

வசந்த காலப் பறவையின் அழைப்பு 

சன்னல் வழி உள்ளே நுழையும் வெளிச்சத்தின் ஒரு விரல்

உணவு மேசை மேல் ஏறி அவளை நோக்கி நீள்கிறது

வெளிச்சத்தின் விரலுக்கும்

தன் விரல்களுக்கும்

இடையிலிருக்கும் பழத்தை

மாறி மாறிப் பார்த்தபடி இருக்கிறாள். 

05

நிழலைத் தேடியவன் 

அவனுடைய ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு நிழல் இருந்திருக்கிறது

வெவ்வேறு இடங்களில் அவை தங்கிவிட்டன 

கைவிடப்பட்டதால் அல்ல

முடிவற்றுத் தொடரும் பிரயாணத்தில் அயற்சியுற்ற யாத்ரீகர்கள் அங்கங்கே தங்கிவிடுவது போல் 

முன்சென்றுகொண்டே இருப்பவன் 

ஒரே சமயத்தில் 

முன் செல்லும்பொழுது

பின்னாலும் செல்கிறான் 

சதா நிழல்களைத் தேடிக்கொண்டிருக்கிறான்

நிழலற்ற வெற்றிடங்கள் அவனைக் குழப்புகின்றன

ஒரு முறைக்கு இருமுறை இடங்களைச் சரிபார்த்துக்கொள்பவனுக்குப் புரியவில்லை

நிழல்கள் எங்கே போகக்கூடுமென

அப்போது பார்க்கிறான்:

ஒரு தாவலில் பல காலடிச்சுவடுகளைத் தொடரும் மிருகமொன்று

நிழலைத் தின்பதை

ஆயிரம் நிழல்களை ஒரே விழுங்கலில் அழித்துவிடுவதை 

நிழலைத் தின்னும் மிருகமே

என்னை மட்டும் ஏன் மீதம் வைத்தாய்

என்று கேட்டான்

மெல்ல உறுமிய மிருகம் சிந்தியது ஒரு கண்ணீர்த் துளியை 

அதில்

மூழ்கிக்கொண்டேயிருக்கிறான்

அவனும்

இன்னும்

அவனும்.

06

தொலைவில்

குற்றவாளிகளுக்கும் 

எனக்கும்

இடையே

கண்ணாடித் திரைகளோ

காகித வனங்களோ

சுவர்களோ 

அவர்கள் எல்லாவற்றையும் ஊடுருவி

அருகே வர விழைகிறார்கள் 

கறுத்துவரும் கையால்

அவர்கள் கரங்களைப் பற்றவும்

தோளில் சாய்த்துக்கொள்ளவும்

தயாராய் இருக்கிறேன்

என் முன் அவர்கள் தலைகுனிந்து நிற்க வேண்டாம் 

ஆனால் எனக்குத் தெரியும்

அவர்கள் என்னை முகர்ந்து பார்க்கவே விரும்புகிறார்கள்

அதில் என்ன வியப்பு! 

ஒரு நாள் கனவில் வந்த மனிதரிடம் 

மிகவும் மோசமான வாசனை வீசியது

என் மூக்கு முகத்திலிருந்து கழன்று விழுந்துவிடும் என்று பயந்தேன்

எப்படியாவது அந்த இடத்திலிருந்து அகன்றுவிடவே விரும்பினேன்

கனவென்னும் இடத்தை விட்டு விலக முடியவில்லை 

கடவுளைப் போலத் தொலைவில் இருக்கவே விரும்பினேன்

குற்றவாளிகளைப் போலவும். 

07

காலி

ரயில் வண்டிக்குள் 

பனிமூட்டம்

ஒவ்வொரு பெட்டியாக 

யாரைத் தேடுகிறது? 

08

ஹைக்கூ கவிதைகள்

சேவல்கூவியது

கண் விழித்தான்

கசாப்புக்கடைக்காரன். 

*

குப்பையில் கிடக்கிறது

கிழித்து எறியப்பட்ட

நேற்று. 

*

அன்னையர்தின வாழ்த்து அட்டை

விற்றுக்கொண்டிருக்கிறாள் 

அனாதைச் சிறுமி. 

*

பள்ளிக்கூடமணியோசை

வேகமாய் நடக்கும்சிறுவன் 

டீக்கடை வேலைக்கு. 

கவிதைத் தொகுப்புகள்:

1. “இரவின் ரகசியப் பொழுது” தொகுப்பு", காலச்சுவடு வெளியீடு

2. “மரம் பூக்கும் ஒளி தொகுப்பு", காலச்சுவடு வெளியீடு 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com