
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கவும் நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார்.
ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தரப்பில் படத்துக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் உள்ளிட்ட ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், ஜன நாயகன் படத்துக்கு எதிராக தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் மறுஆய்வுக் குழுவுக்கு இந்தப் படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
படத் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்குரைஞர் விஜயன் சுப்ரமணியன், படத்தை முதலில் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் உள்ளது. படம் பாா்த்த உறுப்பினர்கள் பரிந்துரை வழங்க முடியுமே தவிர புகாராளிக்க முடியாது. படத்தைப் பார்த்த 5 உறுப்பினர்களில் பெரும்பாண்மை உறுப்பினர்கள் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர்.
பெரும்பாண்மை இல்லாவிட்டால் மட்டுமே மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்ப முடியும். எனவே, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைத்த, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ‘ஜன நாயகன்’ படத்தை ஜன.9-ஆம் தேதி வெளியிட முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, வழக்கின் தீர்ப்பை வியாழக்கிழமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்க முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜன நாயகன் படத்துக்கு உடனே தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட்டார்.
உடனே இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்றார்.