விஜயகாந்த் - ரஜினிகாந்த் சந்திப்பு (கோப்பு படம்)
விஜயகாந்த் - ரஜினிகாந்த் சந்திப்பு (கோப்பு படம்)

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்! – ரஜினி

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவு திரையுலகிலும், அரசியலிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் மறைவை அடுத்து பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. விஜயகாந்த் அசாத்தியமான மனவுறுதி கொண்ட மனிதர். எப்படியாவது உடல்நிலை தேறி வந்துவிடுவார் என்று அனைவரும் நினைத்தோம். சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் அவர் சோர்வாக இருந்ததை பார்த்தபோது, எனக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது,வருந்தினேன்.

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்திருக்கிறோம்” என கண்கலங்கியவாறு ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.

ரஜினிகாந்த் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com