
ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜன நாயகன், வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகின்றது.
உலகம் முழுவதும் ஜனவரி 9 ஆம் தேதி ஜன நாயகன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காததால் கடைசி நேரத்தில் வெளியீடு நிறுத்திவைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் எனப் படத்தின் சான்றிதழுக்காக அலைந்த படக்குழு, இறுதியில் வழக்கை திரும்பப் பெற்று மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பிவைத்தது.
தற்போது மறுதணிக்கை குழுவினர் படத்தை பார்த்து சான்று அளிக்காமல் தாமதப்படுத்தி வரும் சூழலில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ஓடிடி உரிமைத் தொகையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படும் அமேசான் ப்ரைம் நிறுவனம், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், படத்தின் விநியோகஸ்தர்களும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், தயாரிப்பு நிறுவனம் அல்லது ஓடிடி நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.