முதல்வருடன் போஸ் கொடுத்து பிரபலமான பெண் அஸ்வினி கைது!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே முதலமைச்சர் ஸ்டாலினுடன் போஸ் கொடுத்து பிரபலமடைந்த அஸ்வினி என்பவர், இன்னொரு பெண்ணைக் கத்தியால் கிழித்துவிட்டதாக இன்று கைதுசெய்யப்பட்டார்.
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர், இளம் பெண் அஸ்வினி. கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மாமல்லபுரம் அனந்தசயனப் பெருமாள் கோயில் அன்னதான நிகழ்வில் இவருக்கும் பழங்குடியினரான இவரின் உறவினர்களுக்கும் அவமதிப்பு இழைக்கப்பட்டது. அதை அப்போது அஸ்வினி தட்டிக்கேட்டது சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது.

அதையடுத்து, இந்து சமயத் துறை அமைச்சர் சேகர்பாபு அந்த இடத்துக்குச் சென்று, அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். பின்னர், அதே ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் ஸ்டாலின், அஸ்வினியின் குடியிருப்புக்கு திடீர்ப் பயணம் மேற்கொண்டு அதிர்ச்சி அளித்தார். முதலமைச்சருடன் படம் எடுத்துக்கொண்டதால், அஸ்வினிக்கு அதிக அளவில் பிரபலம் உண்டானது.
அதை வைத்து அவர் பல இடங்களில் பிரச்னை செய்வதாக அவ்வப்போது புகார்கள் கூறப்பட்டன. ஆனால், அவர் அவற்றை மறுத்துவந்தார். முதலமைச்சரே தங்கள் வீட்டுக்கு வந்து உணவருந்தியதைப் பொறுக்கமுடியாமல், இப்படி சொல்வதாக அஸ்வினி கூறினார்.
இந்த நிலையில், நந்தினி எனும் இன்னொரு பெண்ணுக்கும் அஸ்வினிக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதில், ஒரு கட்டத்தில் அஸ்வினி தன்னிடமிருந்த சிறு கத்தியால் நந்தினியின் உடலில் குத்திக் கிழித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் நந்தினியின் புகாரின்படி அஸ்வினியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.