பாவத்த... பசுமாட்டின் வயிற்றில் இருந்து 40 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்!

பாவத்த... பசுமாட்டின் வயிற்றில் இருந்து 40 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்!
Published on

சாலையில் சுற்றித் திரிந்த பசு மாட்டின் வயிற்றிலிருந்து சுமார் 40 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கால்நடை மருத்துவர்கள் அகற்றி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகரங்களில் சுற்றித் திரியும் மாடுகள் காகிதங்களை உணவுப் பொருள் என நினைத்து உட்கொள்வதைப் பார்த்திருப்போம். அதேபோல், பிளாஸ்டிக் பைகளில் வீசப்படும் உணவுகளை உட்கொள்ளும் மாடுகள் கூடவே பிளாஸ்டிக் பைகளையும் உட்கொள்கின்றன.

இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மாடுகளின் வயிற்றில் குவிந்து அவற்றின் செரிமானத்தைப் பாதித்து, நோயை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மாடுகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கின்றன.

அந்த வகையில், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்று கடந்த இரண்டு நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் கத்திக்கொண்டு இருந்தது. மேலும், அதன் வயிறும் வீக்கத்துடன் காணப்பட்டது. இதனை அறிந்த கால்நடை மருத்துவர்கள், பசு மாட்டைச் சோதித்தபோது, அதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பசுவின் வயிற்றில் இருந்து சுமார் 40 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றினர். மாட்டிற்கு அறுவை சிகிச்சை செய்ய 3 மணி நேரம் ஆனது என தலைமை மாவட்ட கால்நடை அதிகாரி தெரிவித்தார். தற்போது அந்த மாட்டின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒரு வாரம் மருத்துவமனையில் கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com