
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா கூட்டணி’ எம்.பி.க்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், பிரதமர் மோடியை தாக்க பெண் எம்.பிக்கள் சதித் திட்டம் தீட்டி இருந்தனர்; அதனால் பிரதமர் மோடியை மக்களவைக்கு வர வேண்டாம் என தாம் கூறியதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. தற்போது இந்த தீர்மானத்தில் 118 எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனையடுத்து மக்களவை செயலகத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸ் தலைவர்கள் வழங்கி உள்ளனர்.