இந்தியா
அத்வானியின் வீட்டுக்குச் சென்று பாரத ரத்னா விருது வழங்கிய ஜனாதிபதி முர்மு!
நாட்டின் குடிமக்களுக்கான அதி உயர் விருதான பாரத ரத்னா அண்மையில் 5 பேருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
அதில், மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், சரண்சிங், பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்காக, அவர்களின் குடும்பத்தினர், குடியரசுத்தலைவர் முர்முவிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டனர்.
முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே. அத்வானி மூப்பு காரணமாக நேரடியாகச் சென்று விருதைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இன்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவே நேரடியாக அத்வானியின் இல்லத்துக்குச் சென்று, பாரத ரத்னா விருதை அவருக்கு அளித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியும் உடனிருந்தார்.