ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என். ஜி.சி. நிறுவனத்துக்கு அனுமதி! -காங்கிரஸ், பாமக எதிர்ப்பு

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என். ஜி.சி. நிறுவனத்துக்கு அனுமதி! -காங்கிரஸ், பாமக எதிர்ப்பு
Published on

சென்னை, கன்னியாகுமரி அருகில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க வழங்கப்பட்ட அனுமதியைஉடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதில், கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், பாமக கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

செல்வப்பெருந்தகை - காங்கிரஸ்

தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியை நச்சுத்தன்மையாக்கும், கடல்வளத்தை கொள்ளையடிக்கும் இத்திட்டத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல பேராபத்துகள் ஏற்படும். நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி, நீரியல் விரிசல் முறையில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால் கடல் நஞ்சாகும். முதல்கட்டமாக நச்சுத்தன்மை வாய்ந்த மீன்களை மக்கள் சாப்பிட வேண்டிய நிலை உருவாகும்.

இதனால் பலவிதமான நோய்கள் உருவாகி உடல்நலம் பாதிக்கப்படும். ஒருகட்டத்தில் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துபோய் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகிவிடும். தேவையற்ற வாயுக்களை எரிக்கும்போது காற்று நஞ்சாகும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.

மத்திய அரசு, தற்போது ஹைட்ரோ கார்பன், எண்ணெய் எரிவாயு போன்ற திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக சூறையாட திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மக்களையும், கடல்வளங்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தற்போது இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதை ரத்து செய்யவேண்டும்.

ராமதாஸ் - பாமக

ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் என்று வல்லுனர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய எரிசக்தி இயக்குனரகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்த வெளி அனுமதி அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட 9ஆம் சுற்று ஏலத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 32485.29 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஏலத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போதே அதற்கு பா.ம.க.கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் கட்டமாக தென் தமிழகத்தின் 9990.96 சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலம் அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.

ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீன் வளம் பாதிக்கப்படும் என்று மீனவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமல்ல. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com