20 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அரசியல கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதல்கட்டமாக 2,000 மீட்டர் முதல் 3,000 மீட்டர் ஆழம் வரை 20 இடங்களில் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன் கோட்டை தனிச்சியம், பேய்குளம், கீழ்செல்வனூர், வேப்பங்குளம் உள்ளிட்ட 20கிராமங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.
ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்த நிலையில், மாநில அரசு இதுகுறித்து முடிவெடுக்காத சூழலில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கீழ் வரும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.