
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சென்னைத் தலைமை நீதிபதி அமர்வு இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில் இப்படத்துக்கு தனி நீதிபதி வழங்கிய, "உடனடியாக 'UA' சான்றிதழ் வழங்க வேண்டும்" என்ற உத்தரவிற்கு த் தடை விதித்துள்ளது.
இன்று காலையில் கிடைத்த வெற்றி மாலையில் பறிபோய்விட்டது. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி உடனடியாக யு ஏ சான்றிதழ் வழங்குமாறு இன்று காலை உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பாக உடனடியாக தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதில் வாதங்களைக் கேட்டபின் "படம் இன்று வெளியாகவில்லை என்பதால் தற்போது இதில் எந்த அவசரமும் இல்லை" என்று தெரிவித்த நீதிபதிகள், தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான இறுதி முடிவைத் தணிக்கை வாரியத்தின் விதிகளின்படியே மேற்கொள்ள வழிவகை செய்துள்ளனர். அத்துடன் இந்த மேல் முறையீட்டு மனுவில் பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 21க்கு ஒத்தி வைத்தனர்.
தனி நீதிபதியின் உத்தரவு தடை செய்யப்பட்டதால், தணிக்கை வாரியம் உடனடியாகச் சான்றிதழ் வழங்கத் தேவையில்லை.
சட்டச் சிக்கல்கள் நீடிப்பதாலும், மறுஆய்வுக் குழுவின் நடைமுறைகளுக்குக் காலம் எடுக்கும் என்பதாலும், படம் பொங்கல் பண்டிகைக்கு (ஜனவரி 14/15) வெளியாகுமா என்பதில் பெரும் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவது மட்டுமே வாய்ப்பாக உள்ளது.