
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தனி இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
'மக்கள் மேடை- மக்கள் இயக்கம்' என்ற இயக்கத்தை அவர் தொடங்கியுள்ளார். இதுகுறித்த காணொலி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், அனுபவங்கள், திறமைகளைக் கொண்டு சேவை செய்வதற்காக இந்த தளத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
அதில், மக்கள் சக்தியாக விளங்க நினைப்பவர்கள், சமூக மாற்றத்திற்கான சிந்தனை உள்ளவர்கள், தமிழகத்திற்காக உழைக்க நினைப்பவர்கள், சமுதாய முன்னேற்றத்திற்காக தம் பங்களிப்பினைக் கொடுக்க முயன்று வருபவர்கள் இந்த இயக்கத்தில் சேரத் தகுதியுள்ளவர்கள் என அவர் கூறியுள்ளார்.
இந்த இயக்த்தின் முதன்மையான நோக்கம் அந்தந்தத் தொகுதிகளின் முன்னேற்றத்திற்காக உழைக்கக்கூடிய புதிய உள்ளூர் தலைவர்களை உருவாக்குவது ஆகும்.
ஏற்கெனவே, 'தயா பவுண்டேஷன்' என்ற பெயரில், தமிழகத்தின் பல்வேறு பாரம்பரிய தொழில்களை மீட்டெடுக்கவும், நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இயக்கம் ஒன்றை இவர் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, இன்று மதியம் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தனி இயக்கம் ஒன்றைத் தொடங்குவதாக அறிவித்தார்.