முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புயல் நிவாரணமாக ரூ.5,060 கோடி: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீர்செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் செய்தித்துறை இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. இதனால், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொதுக் கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.

மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழகத்திற்கு, இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடியை உடனடியாக வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ‘மிக்ஜம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றும்,

முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர்,

சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com