ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்துக்கு “தோழர் நல்லக்கண்ணு நூற்றாண்டுக் கட்டிடம்” எனப் பெயரிடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
“தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான ஆர்.நல்லகண்ணுவின் 100ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நமது மாநிலத்துக்கும், தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழக அரசு 2022ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.
இன்று அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த ஸ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டிடம் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் ஆர்.நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும்வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டிடத்துக்கு “தோழர் நல்லக்கண்ணு நூற்றாண்டுக் கட்டிடம்” எனப் பெயரிடவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.