தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

இப்படி பண்ணீட்டீங்களே ரஜினி! -திருமா ஆதங்கம்

தமிழ்நாட்டின் முதல்வராக ரஜினி பதவி ஏற்றிருந்தால், அது யோகி ஆதித்யநாத் ஆட்சியை போன்று தான் இருந்திருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரஜினியின் செயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், நாங்குநேரி சாதிய வன்கொடுமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், ரஜினியின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

”வீடு தேடி போய் கொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோர் அப்படித்தான் கொலை செய்யப்பட்டனர். பாஜக ஆட்சி நடப்பதால்தான் இப்படி செய்கிறார்கள்.

உத்தர பிரதேசத்தில், ஹரியானாவில் இஸ்லாமியர்களைத் தேடி தேடிதேடி கொல்கிறார்கள். ஒரு ரயில்வே போலீஸ், இஸ்லாமியர்கள் எங்கே இருக்கிறார்கள் என தேடி சுட்டுக் கொல்கிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது? பாஜக ஆட்சியில் இருப்பதால்தான் நடக்கிறது.” என்று பேசியவர். ரஜினி விவகாரம் குறித்து பேசத் தொடங்கினார்.

“யோகி ஆதித்யநாத் காலில், நம்முடைய சூப்பர் ஸ்டார் விழுகிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அவர் கட்சியை ஆரம்பித்திருந்தால், முதலமைச்சராகியிருந்தால், அது யோகி ஆதித்யநாத் ஆட்சியைப் போன்று தான் இருந்திருக்கும்.

எவ்வளவு பெரிய உயர்ந்த மதிப்பை வைத்திருக்கிறோம் ரஜினி மீது. அவர் தலைவர்களை, முதலமைச்சர்களை சந்திப்பதெல்லாம் பிரச்னை இல்லை. ஆனால், ரஜினி காலில் விழுந்து வணங்குகிறார். அதற்கு என்ன பொருள்?

ரஜினி, யோகி ஆதித்யநாத்தை உயர்வாக மதிப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், உங்களை தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு உயர்வாக மதித்திருந்தார்கள். அதை ஒரு நிகழ்வின் மூலம் சிதைத்துவிட்டீர்கள். இப்படிப்பட்டவர்களின் கைகளில் தான் தமிழ்நாடு உள்ளது. இவர்கள்தான் கருத்தை உருவாக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து ஒட்டுமொத்த இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com