மோடி, செல்வப்பெருந்தகை
மோடி, செல்வப்பெருந்தகை

கர்நாடக இட ஒதுக்கீட்டில் நடந்தது என்ன?- மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதில்!

மத்திய பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது என நேற்று பிரதமர் மோடி மும்பையில் பேசியிருந்தார். அவரின் இந்தப் பேச்சு தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவரின் அந்த அறிக்கையில், “மக்களவைத் தேர்தலின் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, தமது பரப்புரையில் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை கூறிவருகிறார்.

தொடக்கத்தில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கையைப் போல் இருப்பதாக கூறினார். பிறகு, முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெறுபவர்கள் என்றும் முத்திரை குத்தி, தனியாரிடம் இருக்கும் செல்வங்களை கைப்பற்றி முஸ்லிம்களுக்கு மறுவிநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், அவதூறான கருத்துகளை கூறினார். 

இந்த நிலையில் ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவிகிதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று நேற்று பிரதமர் மோடி மும்பையில் குற்றம்சாட்டி பேசியிருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை ?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

”காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் சம உரிமையோடு, சம வாய்ப்போடு வாழ்வதற்கான உறுதிமொழிகளைத் தான் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி தனது அவதூறு பிரச்சாரத்தின் மூலம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால், காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுக்க விரும்புகிறது என்ற குற்றச்சாட்டை மோடி திரும்பத்திரும்பக் கூறிவருகிறார்.

சமூக, கல்வி, பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் தன்மையின் அடிப்படையிலும், சச்சார் குழு பரிந்துரையின் பேரிலும் முஸ்லிம் சமூகங்கள் மாநில, ஒன்றிய ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு இப்படி ஒதுக்கீடு வழங்கியிருக்கும் 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். மோடி 12 ஆண்டுகாலம் முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் கூட ஒ.பி.சி. பட்டியலில் முஸ்லிம் சமூகங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

அரசமைப்புச் சட்டப்படி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் பட்டியலை அந்தந்த மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தரவுகளின் அடிப்படையில் தயார் செய்கிறது. அதில் இடம்பெறுகிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குத் தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை நீதிமன்றங்கள் உறுதிசெய்துள்ளன.

இந்தப் பின்னணியில்தான் கர்நாடகாவில் 1994 இல் இன்று பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருக்கிற தேவகவுடா அரசு அன்று கொண்டு வந்த முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த காலத்தில் எடியூரப்பா அரசு செயல்படுத்தியதற்கு மாறாக, கடந்த மார்ச் 2023 இல் கர்நாடகாவில் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு முஸ்லிம் ஒ.பி.சி.களுக்கான 4 சதவிகித உள்ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

ஆனால், தலித்துகள், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை இதன்மூலம் கூட்டவில்லை. மாறாக அந்த மாநிலத்தில் உள்ள ஆதிக்க சமூகங்களான லிங்காயத்துகள், ஒக்கலிகர் சமூகத்தினருக்கு தலா இரண்டு சதவிகித இடஒதுக்கீட்டை பொம்மை அரசு உயர்த்தி வழங்கியது. இந்த உத்தரவை உடனடியாக ஏப்ரல் 2023 இல் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

அதேநேரத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு தொடரும் என்று தீர்ப்பளித்தது. இதற்குப் பிறகும் கர்நாடக அரசை மோடி மேற்கோள் காட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

மக்களவைத் தேர்தல் தொடங்கியதிலிருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வந்த பிரதமர் மோடி, திடீரென ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்து, முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்ய மாட்டேன். அப்படி அரசியல் செய்யும் நாளில் நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக ஆகிவிடுவேன் என்று திடீரென தனது கருத்தை மாற்றிக் கொண்டு அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.

இதற்கு என்ன காரணமென்றால் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிராக ராகுல்காந்தி மேற்கொண்ட பரப்புரையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதோடு, இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத உச்சவரம்பை உயர்த்துவோம் என்று கூறினார். அதற்கு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமுதாயத்தினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், மக்களவைத் தேர்தல் அரசியல் சூத்திரம் தலைகீழாக மாறி வருகிறது. இதன்மூலம் ஏற்பட்ட சமூகநீதிப் புயலால் மோடியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, மக்களுக்குத் தீங்கு விளைவிக்கிற தரம்தாழ்ந்த நச்சுக் கருத்துகளை பிரதமர் மோடி பேசப்பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது.” என்று செல்வப்பெருந்தகையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com