முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரிதாகிவரும் குடிநீர்ப் பிரச்னை- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குடிநீரின் அளவும் படிப்படியாகக் குறைந்துவருகிறது. பெரும்பாலான ஊர்களில் மக்கள் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கவேண்டிய அவலம் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், தற்போது அரசுத் தரப்பில் வழங்கப்படும் குடிநீர் மக்களுக்குத் தடையில்லாமல் கிடைக்கச் செய்வதற்கு என்ன செய்வது என அமைச்சர்கள், அரசுச் செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். 

இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர்/ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி. தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் திரு.கிரண் குராலா,, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ். சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர்
பி. பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில்,  தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும்,  மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது; இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச் சூழல் குறித்து, தலைமைச் செயலாளரும், துறைகளின் செயலாளர்களும் விளக்கினார்கள்.

இதை தன்னுடைய பேச்சில் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், “கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதைவிட குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம். இதனைக் கருத்தில்கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாகச் செயல்பட்டு குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.” என்று கட்டளையிட்டார். 

மேலும், ”தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய்  குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் வருவாய் நிர்வாக ஆணையர் மேற்கொள்ளச் செய்யவேண்டும்.

குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து,  தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்னைகள் ஏற்படும் போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று நகராட்சி ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம்.  எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை மின்வாரியத்தின் தலைவர் உறுதி செய்யவேண்டும்.

ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

நமது மாநிலத்தில் வாக்குப் பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்க கூடிய நிலையில்,  இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் தலைமைச் செயலாளர் கண்காணித்து வரவேண்டும்.

அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும்.

நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலைச் சந்திப்பதால்,  அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டளைகளை இட்டுப் பேசினார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com