குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே ராஜிநாமா செய்தார். உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், அந்த குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் அறிவிக்கப்பட்டனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெபி.நட்டா, நிதின் கட்கரி, சிராக் பஸ்வான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.