எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா படங்கள் வைக்காதது ஏன்? – செங்கோட்டையனுக்கு ஜெயக்குமார் பதில்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Published on

அத்திக்கடவு - அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் வைக்காதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே அ.தி.மு.கவினர் நேற்று (9.2.2025) நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது அ.தி.மு.க-விற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். “புரட்சித் தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டம். அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி. 80 சதவிகிதப் பணிகள் அண்ணன் எடப்பாடி ஆட்சிக்காலத்தில் முடிக்கப்பட்டது. மீதமுள்ள 20 சதவிகித பணிகளை ஆளும் திமுக அரசு 3 ஆண்டுகள் கிடப்பில்போட்டு தற்போதுதான் முடித்திருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற முழுக்க முழுக்க அம்மா ஜெயலலிதாவும், அண்ணன் எடப்பாடியும்தான் காரணம்.

நேற்று விவசாய கூட்டமைப்புகளால் எடப்பாடிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியில் இந்தத் திட்டத்திற்காகப் போராடிய அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துக்கொண்டிருந்தனர். அதனால் எந்தவித அரசியல் காழ்புணர்வும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. விவசாயிகள் கூட்டமைப்புதான் ஏற்பாடு செய்திருந்தது. அதிமுக சார்பில் பாராட்டு விழா நடந்திருந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டிருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com