மேற்காசிய நாடான பஹ்ரைனில் உள்ள அமேசான் கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளன.
அமெரிக்கா, ஈரான் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்ட நிலையில், போர் தாக்குதல்களை இருநாடுகளும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.
அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், வளைகுடா நாடுகளில் உள்ள தனியார், அமெரிக்க கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், பஹ்ரைன் நாட்டிலுள்ள அமேசான் நிறுவனத்திற்குச் சொந்தமான தரவு மையக் கட்டடத்தை தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல் படையினர் அறிவித்துள்ளனர்.
குழந்தைகளைக் கொலை செய்யும் அமெரிக்க ராணுவத்திற்கு, உளவுத்துறை சார்ந்த ஆதரவை கொடுத்துவரும் அமெரிக்காவின் நிறுவனமான அமேசானின் உளவுத் தரவு மையக் கட்டடத்தை குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் அமேசான் நடத்திவரும் சேவைகள் நிறுத்தம் பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.