ஜனநாயகன் சென்சார்: நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?

ஜனநாயகன்
ஜனநாயகன்
Published on

ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில், உடனடியாக தணிக்கைச் சான்றிதழை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு அவசர வழக்காக நீதிபதி பி.டீ.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும் அதனை செய்ததாகவும் கூறினார்.

இதனையடுத்து, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என தணிக்கை வாரியம் தெரிவித்ததாகவும், ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இருப்பதாகவும் கண்காணிப்பு அதிகாரியும் இதனை உறுதி செய்த நிலையில் யாரோ புகாரளித்துள்ளதாகக் கூறி சான்றிதழ் வழங்கமால் இருப்பதாகக் கூறினார்.

யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் குறிப்பிடப்பட்டது.

மேலும், ஜனநாயகன் படம் ஐந்நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், ’படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடிய காட்சிகள் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக.’ கூறினார்.

‘குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென நிர்பந்திக்க முடியாது.’ எனவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com