
பயறு வகைகளைப் பதப்படுத்தும் நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.25 இலட்சம் வரை மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
”தமிழகத்தில் பயறு வகை பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்தவும், புதிய ரகங்களை கண்டறியவும் அரசு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்கள் மூலம் பயறுகளைத் தரம் பிரித்தல், சுத்தம் செய்தல் மற்றும் பருப்பு தயாரித்தல் போன்ற மதிப்புக் கூட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026-27) வழங்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனிநபர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைத்து பயன்பெற தகுதியுடையவர் ஆவார்கள். எனவே, தகுதியுள்ள பயனாளிகள் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களை 12.06.2026-க்குள் அணுகி பயன்பெறவேண்டும்.” என்று வேளாண்மைத் துறை அமைச்சர் ர.வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.